Friday, September 21, 2012

நான் அறிந்து உணர்ந்த இந்து மதத்தின் பல அர்த்தங்களும், சில அபத்தங்களும் - 4 (ஆத்மஞானம்)


நான் ஆத்மா பேசுகிறேன். அருட்பெருஞ்ஜோதியான இறைவனின் ஒரு துளி நான். என் இயல்புகள், நோக்கம், ஆகியவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த கட்டுரை.

இயல்புகள்: ஒரு புள்ளி வடிவத்துடன் இருப்பவன் நான். எனக்கு அழிவில்லை. இறைவனின் கட்டளைப்படி பிறவி எடுக்க வேண்டியது என் கடமை. நான் பக்குவப்பட்டால், உணர/அறிய ஒன்றும் இல்லாத பட்சத்தில் பிறவி எடுக்க வேண்டியதில்லை. அதை முடிவு செய்பவரும் இறைவனே. இறைவனின் படைப்பில் எல்லா ஆத்மாக்களுக்கும் சமமே. இறைவனின் துளி என்பதால், எனது இயல்பு சுயநலமற்ற தூய அன்பு. அந்த அன்பின் வெளிப்பாடாகிய பிற ஆத்மாக்களுக்கு உதவி செய்வதே எனது சுயதர்மம். அமைதியாய், ஆனந்தமயமாய் இருப்பது எனது இயல்பு.

பிறவிகள்: இறைவனின் ஆணைப்படி நான் பிறப்பெடுக்க வேண்டும். எடுக்கும் பிறவிகளில் சில நிலைகள் உண்டு. முதல் நிலை ஓரறிவு (தொடுணர்வு) படைத்த புல்பூண்டு, மரங்கள். இரண்டாம் நிலை ஈரறிவு (சுவையுணர்வு) கொண்ட நீந்துவன. மூன்றாம் நிலை மூன்றறிவு (நுகர்வுணர்வு) கொண்ட ஊர்வன. நான்காம் நிலை நான்கறிவு (பார்க்கும் திறன்) கொண்ட பறப்பன. ஐந்தாம் நிலை ஐந்தறிவு (செவியுணர்வு) கொண்ட விலங்கினம்.

பல பிறவிகள் எடுத்து ஐந்து நிலைகள் கடந்து எடுக்கும் பிறவி மனிதப்பிறவி. இப்பிறவிகளில் எல்லாம் இயற்கையின் நியதிக்கு உட்ப்பட்டு வாழ வேண்டிய கட்டாயம். இயற்கையுடன் இயைந்து வாழ்வதால் ஆனந்தம் மட்டுமே.

நான் எடுக்கும் உடல்களில் ஆதார சக்தியாய் விளங்குபவன் நானே. தன்னிச்சையாய் செய்யப்படும் காரியங்களுக்கு (சுவாசிப்பது, செரிப்பது, இருதயம் துடிப்பது, இரத்தம் ஓடுவது) சக்தி வழங்குவது நானே.

மனிதப்பிறவி: நான் எடுக்கும் பிறவிகளிலே மிகவும் உன்னதமான பிறவி மனிதப்பிறவி ஆகும். ஏனென்றால், இப்பிறப்பின் மூலம் இறைவனை அடையலாம். மனிதப்பிறவி எடுக்கும்பொழுது மட்டும், மனம் (மனஸ்-மனுஷன் - மனிதன்) என்ற ஒரு வஸ்து உருவாகிறது. இதுவே ஆறாம் நிலை என்ற ஆறாம் அறிவு (பகுத்தறிவு) ஆகும்.

மனம்: மனம் என்பது எண்ணக்குவியல். வாயின் மூலம் வலை கட்டி அவ்வலையிலே இருக்கும் சிலந்தி போல மனது. எண்ணத்தை தோற்றுவித்தும், அவ்வாறு தோன்றிய எண்ணங்களில் கிடப்பதும் மனமே.

மனம் என்பது இறைவன் மனிதனுக்கு அளித்த வரம் மற்றும் சாபம் ஆகும். மனமிருப்பதால் எண்ணமுடியும், எண்ணியதை ஐம்புலன்களினால் அடைய முடியும். அதனால் மனமென்பது வரமாகும். மற்ற உயிரனங்களுக்கு இல்லாத ஒன்று மனிதனுக்கு மட்டும் இறைவனால் கொடுக்கப்பட்ட வரம் பகுத்தறிவு.

ஆனால், இந்த மனத்தில் தோன்றும் முதன்மையான எண்ணங்களில் ஒன்று, ‘நான்’ என்ற ஆணவம். ‘நான் ஆத்மா அல்ல, இந்த உடலே நான்’ என்ற எண்ணமே!. இதுவே சாபம்! இந்த ஆணவத்தினால் செய்யப்படும் வினைகளினால் வினைப்பயன் (கர்மா) என்னை தொற்றிக்கொள்கிறது. நிலையாகிய இறைவனையும், ஆத்மாவாகிய என்னையும் மறந்து, இந்த உடலே நிலையானது, உடலால் அனுபவிக்கும் இன்பமே நிலையானது என்ற எண்ணம் வலுக்கிறது. இந்த எண்ணமே மாயை. ஆக தூய ஆன்மாவாகிய நான் மனித உடலெடுத்ததும் ஆணவம், கன்மா, மாயை என்ற மும்மலங்கள் சூழ்கின்றன. இந்த மலங்களை என்னிடம் இருந்து களைய நான் பலப்பல பிறப்புகள் எடுக்க வேண்டியுள்ளது.
மனத்தின் இயல்பு கேட்க மட்டுமே தெரியும். என் இயல்பு கொடுக்க மட்டுமே தெரியும். மனம் உலக ஆசையில் ஈடுபட்டு, என்னை மறந்து, ஐம்புலன்களையும் தன் இஷ்டப்படி ஆட்டுவித்து உவகை கொள்ளும். உவகை இல்லாத நிலையில், கவலை கொள்ளும். உவகை அடைந்து முடித்த பின்னர், மற்றொரு ஆசையை தேடி ஓடும். மனதின் ஆசைகளுக்கு அளவில்லை, அடையும் துன்பத்திற்கும் எல்லையில்லை.
ஆத்ம திருப்தி:கொடுக்க மட்டுமே தெரிந்த எனக்கும், கேட்க மட்டுமே தெரிந்த மனதிற்கும் இடையில் நடக்கும் போராட்டத்தில் மனிதன் இழப்பது அமைதி/நிம்மதி. ஆத்மா, மனம், உடல் எல்லாம் ஒரே நேர்கோட்டில் பயணப்பட்டால் வாழ்க்கை இனிமையானதாய் இருக்கும். ஆனால் பல மனிதர்களின் வாழ்வில் இம்மூன்றூம் வெவ்வேறு வழியில் பயணப்படுகிறது. ஆகையால்தான், மனித வாழ்வில் பல துயரங்கள், துன்பங்கள்.
உதாரணத்திற்கு, கர்ணனின் கடமை தன்னிடம் தஞ்சம் புகுந்தவர்களை காப்பதும், அவர்கள் கேட்பதை அளிப்பதும். தன்னை எதிர்ப்பவர்கள் தனது தம்பிகள் என்று அறிந்தும், தன்னிடம் தஞ்சம் புகுந்த துரியோதனனை காத்தான். கிருஷ்ணனிடம் புண்ணியத்தின் பலனை தானம் செய்து மோட்சம் அடைந்தான்.
இப்படி ஒவ்வொரு ஆத்மாவும் ஒவ்வொரு காரண காரியத்திற்காக / கடமை செய்ய இவ்வுலகில் மனித பிறவி எடுக்கின்றன. அது என்ன கடமை என்று அறிய மனிதன் முற்பட வேண்டும். அதை அறிந்து, அந்த கடமையை செய்தால் ஆத்மதிருப்தி கிடைக்கும். மனித வாழ்வும் இனிமையாய், பயனுள்ளதாய், ஆனந்தமயமாய் இருக்கும்.
ஆத்ம ஞானம்: இவ்வுலகில் மனதின் ஆசையை நிறைவேற்றி கொள்ள ஓடும் மனிதர்கள் எல்லோரும் ஆறாம் நிலையில் இருக்கிறார்கள். அப்படி தெறிக்கட்டு ஓடும் மனதை அடக்கி, ‘நான் ஒரு ஆத்மா’ என்று உணர்பவர்கள் ஏழாம் நிலையில் அடியெடுத்து வைக்கிறார்கள். இந்நிலையில் இருந்தவர்கள், மனோநாசம் செய்து, எண்ணங்களற்ற நிலையில் இருந்த இரமணர். ‘ஆசைகளே துன்பத்திற்கு காரணம்’ என்று கூறி ஆசைகளை துறந்து, ஆன்ம நிலையான அன்பின் வடிவமாய் இருந்த புத்தர்.
ஆத்ம திருப்தி அடைந்து, இந்த ஏழாம் நிலையை அடைய வேண்டியதுதான் மனிதப்பிறவி எடுத்த எனது நோக்கம்.

Wednesday, September 5, 2012

நான் அறிந்து உணர்ந்த இந்து மதத்தின் பல அர்த்தங்களும், சில அபத்தங்களும் - 3 (அன்பே சிவம்)


அன்பும் சிவமும் இரெண்டென்பார் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பும் சிவமும் ஒன்றென்று அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே

என்கிறார் திருமூலர். இறைவன் தூய அன்பின் வடிவமாக வீற்றிருக்கிறார். அது எங்ஙகனம் என்று எனக்கு தெரிந்த வரையில் அறிந்து, ஆராய்ந்து, உணர்ந்து எழுதிய பதிவே இது.

அன்பு:

எந்த வித பிரதிபலனும் எதிர்பாராமல், பிற உயிர்களிடத்தில் காட்டும் அன்பே, தூய அன்பாக (இறைவனாக) கருத தக்கது. பிரதிபலன் எதிர்பார்த்து, பிற்காலத்தில் உதவும் என்ற உள்நோக்கத்தில் செலுத்தும் அன்பானது வியாபாரம் ஆகும். பிற உயிர் தனக்கு தீங்கே செய்தாலும், அந்த உயிருக்கு அன்பு செலுத்தும் உள்ளத்தில் இறைவன் மகிழ்ந்து குடியிருப்பான். இப்பதிவில் நான் கூறும் அன்பு செலுத்துவது எல்லாம் துளியும் சுயநலமில்லாத அன்பாகும்.

அன்பின் வடிவங்கள்:

அன்பு செலுத்துவதற்கு வரைமுறை எதுவும் கிடையாது. உண்மையான அன்பு உள்ளே இருந்தால் அது எந்த வடிவத்திலும், எந்நேரத்திலும் வெளிப்படும். மனமொடிந்து இருப்பவருக்கு சொல்லப்படும் ஆறுதல் வார்த்தைகள் கூட அன்பின் வடிவம்தான். பசித்த முகம் பார்த்து உணவு கொடுப்பதும், வெற்றி பெற்றவருக்கு முதுகில் கொடுக்கும் செல்லத்தட்டும், தேவையான (அ) அதிமுக்கியமான நேரத்தில் செய்யப்படும் உதவியும், நோயில் வாடுபவர் விரைவில் குணமாக வேண்டும் என்ற பிரார்த்தனையும், உலகின் ஏதோ மூலையில் இறக்கும் உயிர்களுக்காக 2-நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துவதும் தூய அன்பின் சில வடிவங்களாகும். மேலும் பல வடிவங்கள் உண்டு.

அன்பிருக்கும் இடங்கள்:

இந்த பிரபஞ்சத்தின் எழுதப்படாத விதி என்னவென்றால், “அது இருந்தால் இது இருக்காது. இது இருந்தால் அது இருக்காது. ஒன்று இருக்கும் இடத்தில் மற்றொன்று இருக்க வாய்ப்பு இருக்காது.” அதுபோல அன்பு இருக்கும் இடத்தில் சுயநலம் துளியும் இருக்காது. சுயநலம் இருக்கும் இடத்தில் அன்பு துளியும் இருக்காது.

ஏனென்றால் தூய அன்பு ஒரு உள்ளத்திற்கு வந்து விட்டால், அது முதலில் துரத்தும் எதிரி சுயநலமாகும். அது மட்டுமல்ல, தூய அன்பு என்பது அழுக்காறு, அவாவெகுளி, இன்னாசொல் என்ற நான்கும் இல்லாத இதயத்தில் குடிகொள்ளும். சுயநலம் இருந்தால் இந்நான்கும் தானே வந்து குடிகொள்ளும். புரியவில்லையா? இதோ விளக்கம்.

பிற உயிர்களை தன் உயிர் போல நேசிப்பவனுக்கு மற்ற உயிர்களை (அ) மற்ற உயிர்களின் வளர்ச்சி/உடைமை/பொருள் கண்டு பொறாமைப்படும் அவசியம் இருக்காது. தூய அன்பிற்கு கொடுக்கத்தான் தெரியும். தன்னிடம் உள்ள பொருள் பிறருக்கு கொடுப்பதற்கே என்று எண்ணத் தூண்டும்.  ஆகையால் தன்னிடம் இருப்பதுவும் மற்றவர்க்கு சொந்தம் என்று நினைக்கும் மனதிற்கு ஆசை அறவே இருக்காது. தூய அன்பு கொண்ட உள்ளத்திற்கு கோபப்படவும் தெரியாது. கடுஞ்சொல் பேசவும் தெரியாது. எனது நலம் தான் முக்கியம் என்று எண்ணும் சுயநலமிக்க மனிதருக்கு இந்நான்கும் கண்டிப்பாக இருக்கும். பிறர் நலம் தான் முக்கியம் என்று எண்ணும் தூய அன்பு கொண்ட உள்ளத்தில் இந்நான்கும் இருக்காது.

சுயநலம் இருந்தால் அன்பு இருக்காது. அன்பு இருந்தால் சுயநலம் இருக்காது.

இறைவனை தரிசிக்கலாம்:

இறைவனை மிக எளிதில் தரிசிக்கலாம். கண்ணை மூடிக்கொண்டு, வெற்றி பெற்ற தருணங்களை தவிர்த்து, தங்கள் வாழ்வில் நடந்த ஆனந்தமாய்/உள்ளம் உவந்த தருணங்களை நினைத்து பாருங்கள்.

அந்த தருணங்கள் கண்டிப்பாக நீங்கள் தூய அன்பை ஸ்பரிசித்த சமயமாக இருக்கும். அல்லது, நீங்கள் மற்றவரிடம் அன்பு செலுத்திய சமயமாக இருக்கும். மற்றவரிடம் அன்பு செலுத்தும்போது நம்மில் இறைவனை தரிசிக்கலாம். மற்றவர் நம்மீது அன்பு செலுத்தினால் அவர் உருவில் இறைவன் தரிசனம் கிடைக்கும்.

அதனால்தான், தூய அன்பு செலுத்தும் அன்னையும், பிதாவும் முன்னெறி தெய்வமாக காட்சி அளிக்கிறார்கள். இறைவன் எல்லார் வீட்டிலும் இருக்க இயலாத காரணத்தினால், தனது சுயரூபமான அன்பின் மொத்த வடிவமாக தாயை ஒவ்வொரு வீட்டிலும் படைத்தான்.

பலருக்கு பால்ய பருவம் சுவைமிக்கதாக, ஆனந்தமயமாய் இருக்கும். அதற்கு காரணம் அன்பு / இறைவன் எப்பொழுதும் அருகினிலே இருப்பது. வயது ஏறஏற சுயநலம் ஆட்கொண்டு, அன்பு அகன்று விடுவதால் வாழ்வில் சுவையும், ஆனந்தமும் குறைந்து விடுகிறது.

சுயநலமற்ற அன்பு குடி கொண்ட இதயத்தில், இறைவனை தரிசிக்கலாம். ஆனந்தத்தை உணரலாம்.

பிறப்பின் நோக்கம்:-

நாம் அனைவரும் மனிதராய் பிறந்ததின் உண்மையான/அடிப்படையான நோக்கம், பிற உயிர்களிடத்தில் தூய அன்பு செலுத்துவதற்கே. பெரிய தலைவர்கள், மகான்கள் அனைவரும் வெவ்வேறு இலட்சியத்திற்காக, தமக்கென்று கொள்கைகள் கொண்டு போராடியிருக்கலாம். ஆனால் அவர்களை நெருங்கி, ஆராய்ந்து பார்த்தால், அடிப்படையில் தூய அன்பின் வெளிப்பாடாகவே இருக்கும். அப்படிப்பட்டவர்களே, மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு,

·          இந்துக்களும், முஸ்லீம்களும் என்றும் ஒற்றுமையுடன், ஒருவொருக்கு ஒருவர் அன்பு செலுத்தி வாழ வேண்டும் என்று இறுதி மூச்சு வரை போராடியவர் காந்தி. “எதிராளியே ஆனாலும், அவனை இம்சிக்க கூடாது” என்ற அவரின் தூய அன்பின் வெளிப்பாட்டின் காரணமாக அவர் கையில் ஏந்திய ஆயுதம், அஹிம்சை.
·          அகில உலக அளவில் இந்து மதம் பற்றி அறிய வைத்தவர் சுவாமி விவேகானந்தர். சிகாகோவில் அவர் ஆற்றிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த உரையின் முதல் வாக்கியம், “சகோதர, சகோதரிகளே!”. அடிமனத்தில் ஆழப்பதிந்து இருக்கும் அன்பின் வெளிபாடன்றி இது வேறு என்னவாக இருக்க முடியும்? அது மட்டுமன்றி, கர்ம யோகத்தைப்பற்றி இவர் எளிமையாய் சொல்வது இரண்டே வார்த்தைகள், ”சுயநலமின்றி உழைத்தல்.”
·          ஆறாம் வகுப்பு மட்டும் படித்து படிப்பின் முக்கியத்துவம் அறிந்தவர் கர்மவீரர் காமராஜர். ‘படிக்கும் பாடம் மனதில் பதிய வேண்டுமென்றால், வயிற்றில் உணவு இருக்க வேண்டும். பசியுடனிருந்தால் படிக்கும் பாடம் மூளையில் ஏறாது’ என்று உணர்ந்து மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். மனதில் இத்தகைய திட்டம் உருவெடுக்க, தாயன்பு மட்டுமே காரணமாக இருக்க முடியும்!
·          “கடவுள் இல்லை, கடவுள் இல்லை. கடவுள் ஒரு கல்” என்று பெரியார் முரசு கொட்ட முக்கிய காரணம், சாதி. கடவுள் பெயர் சொல்லி சாதிப்பிளவு ஏற்பட்டது. சாதிப்பிளவினால் மேல் சாதியினர், கீழ்சாதியினரை அடிமைப்படுத்தியதை கண்டு பொங்கி எழ காரணமாயிருந்தது அவர் உள்ளிருந்த தூய அன்பே!
·          “வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடினேன்” என்று வள்ளலார் பாட காரணம், பயிரையும் தன்னுயிராக கருத வைத்த தூய அன்பே ஆகும்.
·          எல்லா மதங்களின் சாரத்தை பார்த்தாலும், “பிறர் உயிர்களிடத்தே அன்பு செலுத்து” என்றே தெரிய வருகிறது.

யுகங்களில் அன்பு:

முதல் யுகமான கிருத யுகத்தில் அன்பே பிரதானமாக இருந்த காரணத்தினால், சத்தியத்தால் நான்கு கால் பாய்ச்சலுடன் செல்ல முடிந்தது.

இரண்டாம் யுகமான, திரேதா யுகத்தில் பொறாமை நுழைந்து சத்தியத்தின் ஒரு காலை உடைத்தது. சுயநலம் தனது ஒரு காலை அடியெடுத்து வைத்தது. அதனால், சுயநலத்தின் காரணமாய் கைகேயி “பரதன் நாடாள வேண்டும். இராமன் காடேற வேண்டும்” வரம் கேட்டாள். தனது கணவனை இழந்தாள். இராவணனும், தனது சுகமே பிரதானம் என்று கருதி சீதையை கவர்ந்து சென்றான். சுயநலத்தின் காரணமாய், அறிவுரை கூறிய அன்புத்தம்பியை விரட்டினான். மற்றொரு தம்பியை இழந்து, மகனை இழந்து, அனைத்தும் இழந்து தன் இன்னுயிரையும் இழந்தான்!
மூன்றாம் யுகமான, துவாபரயுகத்தில் பொறாமை சத்தியத்தின் இன்னொரு காலையும் உடைத்தது. ஒரே குடும்பத்தினுள்ளே பொறாமை புகுந்து, சுயநலம் இரண்டு கால்களுடன் நின்றது. “ஊசி முனை அளவு இடம் கூட கொடுக்க மாட்டேன்.” என்று துரியோதனனை கூற வைத்தது, சுயநலமில்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்? தம்பிகள், நண்பன், உறவினர்கள் இழந்து தனிமையில் தன் இன்னுயிரையும் இழந்தான்.
நான்காம் யுகமான, துன்ப யுகமான கலியுகத்தில், தூய அன்பும் சத்தியமும் ஒற்றைக்காலுடன் நொண்டியடிக்கின்றன. சுயநலம், பொறாமை, பேராசை, கோபம், இன்னாச்சொல் ஆகியன மூன்று காலுடன், முக்காலியில் அமர்ந்தது போல தீர்க்கமாய் உட்கார்ந்து உள்ளன. அதனால், கணவன் – மனைவிக்கிடையே, உடன்பிறந்த சகோதரர்க்கு இடையே, (சில குடும்பங்களில்) பெற்றோருக்கும்-பிள்ளைகளுக்கும் இடையே, நண்பர்களுக்கிடையே அன்பு குறைந்து, சுயநலம் மேலோங்கியுள்ளது.

சுயநலத்தினால், இராவணன், துரியோதனன் அழிந்தது அறிவோம். அப்பாதை விடுத்து, பிறரிடத்தில் தூய அன்பு செலுத்துவோம். ஆனந்தமாய் வாழ்வோம். 

Thursday, May 24, 2012

நான் அறிந்து உணர்ந்த இந்து மதத்தின் பல அர்த்தங்களும், சில அபத்தங்களும் - 2 (பாவ புண்ணியம்)

"வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ?"

என்று கேள்வி எழுப்பியவர் கவிஞர் கண்ணதாசன்.

அதற்கு அழகாக பதில் கூறியவர் பட்டினத்தார். "தொட்டுத் தொடரும் இருவினை பாவ புண்ணியமுமே" அது என்ன பாவபுண்ணியம்? அதை அறிய முயலும் ஒரு முயற்சியே இந்த பதிவு.

மனம், வாக்கு, காயம் (உடல்) ஆகிய மூன்றின் மூலம் பிற உயிரினங்களுக்கு நன்மை செய்வது புண்ணியம் ஆகும். தீங்கு செய்வது பாவம் ஆகும். இந்த பாவமும்,புண்ணியம் மட்டுமே நம்மை/நம் ஆன்மாவை எப்பொழுதும் பற்றிக்கொண்டு வரும்.

ஜோதிடப்படி பூர்வ ஜென்ம பாவ புண்ணியங்களை நிறைவேறா ஆசைகளை அனுபவிக்கவே நாம்/நமது ஆன்மா பிறவி எடுக்கிறது. ஜோதிடத்தில் தசா-புத்தி என்ற காலக்கணக்கு உள்ளது. நாம் பிறந்த லக்கினத்தின்படி யோகாதிபதியின் தசை/புத்தி நடந்தால் நமக்கு நல்ல நேரம் என்று கொள்ளவேண்டும். அந்த நல்ல நேரத்தில், முன் ஜென்மத்தில் நாம் யார்க்கெல்லாம் நன்மை செய்தோமோ அவர்கள் நமக்கு இந்த ஜென்மத்தில் நன்மை செய்து விட்டுபோவர். உண்மையில் நல்ல நேரம் என்பது நமது முன் ஜென்ம புண்ணியங்களை அனுபவிக்கும் நேரம்.

அதேபோல துஷ்டஷ்தான அதிபதிகளின் தசா/புத்தி என்பது கெட்ட நேரம் ஆகும். அப்பொழுது பூர்வஜென்மத்தில் நாம் யாருக்கெல்லாம் தீங்கு செய்தோமோ அவர்கள் இந்த ஜென்மத்தில் நம்மை வாட்டிவதைத்து சென்று விடுவர். பூர்வ ஜென்மத்தில் ஏமாற்றி இருந்தோம் எனறால், இந்த ஜென்மத்தில் ஏமாற்றப்படுவோம். துரோகம் செய்து இருந்தால் நமக்கு துரோகம் இழைக்கப்படும். வினை விதைத்திருந்தால் வினை அறுப்போம். தினை விதைத்திருந்தால் தினை அறுப்போம். பொதுவாக நாம் பூர்வஜென்மத்தில் செய்த பாவங்களை அனுபவிக்கும் நேரமே கெட்ட நேரம் ஆகும். கெட்ட நேரத்திலும் ஒரு சந்தோஷமான விஷயம் என்னவென்றால் நமது பாவத்தின் அளவு குறையும்.

இதுவே இந்த கர்மபூமியின் எழுதப்படாத நியதி. கெட்ட நேரமும், நல்ல நேரமும் மாறி மாறி வரும். வெற்றியை மட்டும் ருசித்து வாழ்ந்தவனும் இல்லை. தோல்வியை மட்டும் ருசித்து இறந்தவனும் இல்லை. வெற்றியும்,தோல்வியும், நல்ல நேரமும், கெட்ட நேரமும் மாறி மாறி வரும்.

பூர்வஜென்ம கர்மாப்படி தான் (புண்ணியம்/பாவம்) இந்த வாழ்க்கை என்றால், இந்த ஜென்ம கர்மாப்படிதான் நமது அடுத்த வாழ்க்கையும் அமையும் என்பது தெளிவாகும்.நேற்று நான் செய்த செயலுக்கு, இன்றைய நிலைமை என்றால், இன்றைய எனது செயல் நாளைய எனது நிலைமையை தீர்மானிக்கும். இதைத்தான் திருமூலர் "தானே தமக்கு தலைவனும் ஆமே" என்றார். 'பாட்ஷா' படத்தில் ரஜினியும் 'உன் வாழ்க்கை உன் கையில்' என்றார்.

பூர்வஜென்ம கர்மாவின்படி நமது இந்த வாழ்க்கை எப்படியும் இருந்துவிட்டு போகிறது. இந்த ஜென்மத்தில் நாம் செய்யும் புண்ணியத்தில் நமது அடுத்த ஜென்மம் நன்றாக இருக்கும் என்பது உறுதி. இறைவனின் கருணை இருந்தால் நாம் இந்த ஜென்மத்தில் செய்யும் புண்ணியம், பூர்வஜென்ம கர்மாக்களை அடியோடு போக்கிவிடும். ஆக மொத்தத்தில் எத்தகைய துன்பத்தை நாம் அனுபவித்தாலும், இன்றிலிருந்து நாம் புண்ணிய வழியில் பயணப்பட்டால் நமக்கு இந்த/அடுத்த வாழ்க்கை நல்ல வாழ்க்கையாய் அமையும் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

அப்படிப்பட்ட புண்ணிய வழியில் பயணம் கொள்வது எப்படி?

‘'பாவம் என்ற கல்லறைக்கு பல வழி. என்றும் தர்மதேவன் கோயிலுக்கு ஒரு வழி' என்று அழகான வரி எழுதியுள்ளார் புலவர் புலமைப்பித்தன்.

முன்பே கூறியது போல புண்ணியவழி என்பது பிற உயிரினங்களுக்கு மனம், வாக்கு, காயம் ஆகியவற்றால் நன்மை செய்வது. அப்படிப்பட்ட புண்ணிய வழி நம்மை இறைவனின் அருகில் அழைத்து செல்லும். ஆனால் அத்தகைய வழி கடந்து செல்ல மிகவும் கடுமையானது. கல்லும், முள்ளும், தீய விலங்குகளும் நிறைந்த செங்குத்தான மலையில் ஏறிச்செல்லுவது போன்ற கடினமான பயணம் ஆகும். இதை சுட்டிக்காட்டவே முருகன் குன்றின் மேல் இருக்கிறான். ஐய்யப்பன் சபரிமலையில் வீற்றிருக்கிறான். சிவனும் சதுரகிரியிலும், திருவண்ணாமலையிலும், இமயமலையிலும் தவம் செய்கிறார். அவ்வளவு எளிதான பயணம் அல்ல, புண்ணிய வழி பயணம். ஆனால் இதில் ஓரே ஒரு நன்மை உண்டு.

புண்ணிய வழியில் பயணம் செய்தால் கல் குத்தும் (ஏளனங்கள் இருக்கும்), முள் குத்தும் (அவமானங்கள் ஏற்படும்), தீய விலங்குகள் அச்சுறுத்தும் (கொடும்பாவிகள் மிரட்டுவார்கள்). ஆனால் இந்த புண்ணிய வழியில் செல்பவர்களுக்கு இறைவன் துணையிருப்பான். 'என்ன நடந்தாலும் சரி, இந்த வழியை விட்டு விலகமாட்டேன்' என்று உறுதியோடு அவனை நோக்கி செல்பவர்களை அவன் எந்நேரமும் பற்றிக்கொண்டு இருப்பான். கல்லையும், முள்ளையும், தீய விலங்குகளையும் இறைவன் பார்த்துக்கொள்வான். அவன் அரவணைப்பில் கல்லும், முள்ளும் காலுக்கு மெத்தையாகும். தீய விலங்குகள் தெறித்து ஓடும்.

இதைத்தான் 'பாட்ஷா' படத்தில் ரஜினி சொல்வார், 'ஆண்டவன் நல்லவங்களை சோதிப்பான். ஆனால் கைவிடமாட்டான்.' அதுபோல இறைவன் நாம் அந்த புண்ணிய வழியில் செல்லும்போது வேதனைகளையும், இன்னல்களையும், இடர்களையும் கொடுத்து, 'புண்ணிய வழியில் இருந்து விலகுகிறோமா' என்று சோதிப்பான். சோதித்து பார்த்த பின்னரே தன் அருகாமையில் சேர்த்து கொள்வான்.

சரி. பாவ வழி எப்படி இருக்கும் என்பதையும் காண்போம். அது ECR ரோடில் பைக்கில் ஹாயாக செல்வது போன்றது ஆகும். சொகுசாக இருக்கும் பயணம். எப்பொழுது விபத்துக்குள்ளாவோம் என்று தெரியாது. அது இறைவனை நோக்கிய பயணம் இல்லாத காரணத்தினால் அவனும் துணைக்கு வரமாட்டான். பெட்ரோல் தீர்ந்து விட்டாலோ, விபத்து நடந்தாலோ யாரும் துணைக்கு வர மாட்டார்கள். இறைவனே துணைக்கு வராதபோது வேறு யார் வருவார்?

இதைத்தான் 'பாட்ஷா' படத்தில் ரஜினி சொல்வார், 'ஆண்டவன் கெட்டவங்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுப்பான். ஆனால் கைவிட்டுவிடுவான்.' எம்.ஜி.ஆரும் ஒரு படத்தில் சொல்வார், 'நல்லதுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் கடைசி வரைக்கும் நம் கூடவே இருப்பர். கெட்டதுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் ஒரு ஆபத்து என்றவுடன் பட்டமா பறந்து விடுவார்கள்.'

மொத்தத்தில், இறைவன் இந்த அழகிய உலகை படைத்துவிட்டு, பல ஆன்மாக்களை உலவ விட்டார். அவனை அடைய ஒரே ஒரு புண்ணிய வழியை மட்டும் உருவாக்கினார். கடுமையான, கடினமான வழி அது, ஆனால் அவ்வழியில் அவரே வழிகாட்டியும், துணையுமாவார். பாவ வழிகள் பலவற்றை மனிதன் உருவாக்கி இருக்கிறான். அது எளிமையானது, ஆனால் அபாயகரமானது.

எவ்வழியில் பயணப்படப்போகிறோம் என்பது நம் கையில்!!!

Tuesday, February 21, 2012

நான் அறிந்து உணர்ந்த இந்து மதத்தின் பல அர்த்தங்களும், சில அபத்தங்களும் - 1 (ஏன் பல கடவுள்கள்?)

இந்து மதத்தில் மட்டும் பல கடவுள்கள் உண்டு. ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. இத்தனை கடவுள்கள் தேவையா என்று என்னுள் எழுந்த கேள்வியின் பதிலே இந்த பதிவு.

நாட்டில் பல கட்சிகள் இருக்கும், ஒவ்வொன்றிற்க்கும் ஒரு தலைவர், ஒரு கொள்கை இருக்கும். அது போல் இந்து மதத்தில் இருக்கும் ஒவ்வொரு கடவுள்களும் ஒரு தத்துவத்தை உணர்த்துகின்றனர். வாழ்க்கை நெறியை நமக்கு போதிக்கின்றனர். அவர்கள் வழியில் பயணப்படுவதே வழிபாடு ஆகும். ஒவ்வொரு இறைவனின் வாழ்க்கை நெறியை நான் அறிந்தவரை இங்கு சொல்லியிருக்கிறேன்.

விநாயகர்: முழுமுதற்கடவுள். எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்கும் முன்னர் வழிபட வேண்டியவர். எந்தவொரு காரியத்தையும் இறை நம்பிக்கையுடனும், இறை அனுமதியுடனும் செய்ய வேண்டும் என்பது இவர் கூறும் நெறி. மற்றொன்று, ஜீவகாருண்யம். இவரது தலை யானையின் தலை, வாகனம் எலி, இடுப்பில் இருப்பது நாகம். ஆக எல்லா உயிர்களிலும் யான் இருக்கிறேன்,ஆக எல்லா உயிர்களிலும் என்னைக் காண்,அன்பு செலுத்து என்பது இவர் கூறும் நெறி.

ஈசன்: சுடலையில் இருப்பவர். பற்றற்ற நிலை, இவர் கூறும் நெறி. இரு மகன்கள், இரு மனைவியர் கொண்ட இந்த இல்லறத்தான் இருப்பதோ சுடலை. இவரது ஆடை புலியின் தோல், ஆபரணம் நாகம். பற்று விடுத்து பரமானந்த நிலையில் நாட்டியம் புரிபவர். இல்லறத்தில் இருந்தும் பற்றற்று இருந்து இறைவனை அடையும் நெறி இவர் கூறும் நெறி.

முருகன்: அழகன். தமிழ்க்கடவுள். வேலுடன் இவர் கூறும் நெறி அறிவுள்ள வாழ்க்கை. வேலுடன் இருந்தால் இராஜ அலங்காரத்தில் இருப்பார். வேலில்லை என்றால் தண்டுடன் ஆண்டி கோலத்தில் இருப்பார். இவரது வேல் கூர்மையாகவும், நீளமாகவும், அகலாமகவும் இருக்கும். அறிவும் அப்படியே இருக்க வேண்டும். கூர்மையான அறிவு, ஆழ்ந்து கற்றுணர்ந்த அறிவு, பல துறைகளை கற்ற அறிவுடன் இருக்க வேண்டும்.

இராமன்: ஏக பத்தினி விரதன். ஒரு மனிதன் பல பாத்திரங்களில் வாழ வேண்டும். முடிந்த வரையில் எல்லாரிடமும் நற்பெயர் எடுக்க வேண்டும். நல்ல மகனாக, தாய்-தந்தை பேச்சு கேட்டு வனம் சென்றார். நல்ல அண்ணனாக தம்பி மூவரையும் நல்வழிபடுத்தினார். நல்ல கணவனாக சீதையை இலங்கையில் இருந்து மீட்டு வந்தார். நல்ல நண்பனாக வாலியை வதம் செய்து சுக்ரீவனுக்கு அரசுரிமையை வாங்கி தந்தார். நல்ல தலைவனாக இருந்து அனுமனுக்கு நல்வழி காட்டினார். நம்பி வந்த விபீஷணனுக்கு அடைக்கலம் தந்து அரசுரிமை தந்தார். நம்பி இருந்த சபரிக்கு மோட்சம் தந்தார். தன்மேல் குற்றச்சாட்டு இருந்தாலும்/விழுந்தாலும் இயன்றவரையில் நற்பெயர் எடுக்க வேண்டும் எனபது இவர் கூறும் நெறி.

அனுமன்: நாகத்தை பயத்தினால் கும்பிடுவோம். ஆனையை ஆசையால் ஆசிர்வாதம் வாங்குவோம். இந்த குரக்குசீயத்தை எதற்கு வழிபடுகிறோம்? மனம் ஒரு குரங்கு. அந்த குரங்கை(மனத்தை) அடக்கிய் அனுமன் இவர். தன் வாழ்க்கை மற்றவர்க்கு உதவுவதற்கே, என்பது இவர் கூறும் நெறி. சீதை தற்கொலை செய்ய ஆயத்தம் ஆகும் வேளையில், இராம கானம் பாடி சீதையை காப்பாற்றியவர். 'கண்டேன் சீதையை' என்று கூறி இராமனுக்கு நம்பிக்கை விதைத்தவர். சஞ்சீவி மூலிகை கொண்டு வந்து கொடுத்து இலட்சுமணனை உயிர் பிழைக்க வைத்தவர். 'இராமன் வருகிறான்' என்று கூறி பரதனின் தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தியவர். விபீஷணனை பற்றி உயர்வாக கூறி இராமனிடம் அடைக்கலம் புகுத்தியவர். இலங்கை சென்று இராவணனுக்கு நற்புத்தி கூறியவர். யுகம் யுகமாய் மற்றவருக்கு உதவுவதை தனது வாழ்க்கையின் கடமையாய் கொண்டு இருக்கும் இவர் கூறும் நெறி - உதவுங்கள்.

துர்க்கை: ஈசனின் இடப்பக்கத்தில் வீற்றிருப்பவள். எருமையின் தலையின் மேல் ஏறி இருப்பவள். எருமை சோம்பேறித்தனத்தை, அசமந்தை குறிப்பது. அதை அடக்கி செயல் வீராங்கணையாக வீற்றிருப்பவள். பற்றற்ற ஈசன்மேல் பற்று கொண்டவள். இறைவனை கணவனாக கொண்ட இவள், கணவனை இறைவனாக கருத வேண்டும் என்பது இவள் கூறும் நெறி. உலகை செயல் புயலாக இருந்து ரக்ஷித்து காக்கும் இவள், ஒவ்வொரு பெண்ணும் தன் குடும்பத்தை காக்க வேண்டும் என்பது இவள் கூறும் நெறி.

நரசிம்மர்: பக்த பிரகலாதனை காக்க அரக்கன் இரணிய கசிபுவை அழிக்க நாராயணன் எடுத்த அவதாரம். நல்லவர்களை காக்க வேண்டும், கெட்டவர்களை அழிக்க வேண்டும் என்பது இவர் கூறும் நெறி.

கிருஷ்ணர்/நாராயணன்: தாமரை இலையில் நீர் போன்ற நிலை, இவர்கள் கூறும் நெறி. உலக சுக-போகத்தில் இவர்கள் இருப்பார்கள், ஆனால் இவர்கள் மனம் அதில் லயிக்காது. தாமரை இலை தண்ணீரில் இருந்தாலும் தண்ணீர் தாமரை இலையில் தங்காது. அது போல, இவர்கள் சுக-போகத்தில் இருந்தாலும் வெறும் சாட்சியாக மட்டுமே இருப்பர். திருமகளின் கடைக்கண்ணின் பார்வைகாக ஏங்குபவர்கள் பலர் உளர். அப்படிப்பட்ட திருமகள் திருவடியில் இருந்தும், அதை கண்டு கொள்ளாமல் ஆனந்த சயனத்தில் (உறக்கத்தில்) இருப்பவர் நாராயணன். மகாபாரதப்போர் நடந்த போது, அதில் (நேரடியாக) பங்கு கொள்ளாமல் வெறும் சாட்சியாக (தேரோட்டியாக) கண்டவர் கிருஷ்ணன். முற்றும் துறந்தவன் ஈசன். மனதளவில் துறந்தவன் நாராயணன்/கிருஷ்ணன்.

ஐந்து விரல்களும் ஒன்று போல் இருப்பதில்லை. உலகில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் வேறுபட்டவர். அவர்கள் இயல்புக்கு,எண்ணத்திற்கு,தகுதிக்கு,நிலைக்கு தகுந்த வாழ்க்கை நெறியை தேர்ந்தெடுத்து வாழலாம். இறைவனை வழிபடலாம் (அவன் கூறும் வழியில் பயணப்படலாம்). இப்படி பலதரப்பட்ட மக்களை நல்வழிப்படுத்தவே, இத்தனை கடவுள்கள் உள்ளனர். உங்கள் சுயதர்மத்திற்க்கு ஒத்து வரும் தெய்வத்தை தேர்ந்தெடுத்து வழிபடுங்கள், அவ்விறைவன் கூறும் வழியில் பயணப்படுங்கள், வெல்லுங்கள்.

Saturday, May 8, 2010

பெண்மை என்னும் சக்தி

இன்று தாய்மையை போற்றும் அன்னையர் தினம். தாய்மையை பற்றி எழுத ஆசை. உலகில் மிகச்சிறந்தது 'தாய்மை' என்று ஜெய்சங்கர் ஒரு பழைய படத்தில் பாடுவார். 'தாய்மை'யின் தாய் பெண்மை ஆகும். தாய்மை என்பது பெண்மையின் ஒரு அங்கம் ஆகும். பெண்மை ப(போ)ற்றி எழுதினால், அது தாய்மையையும் குறிக்கும். ஆக மொத்தத்தில், பெண்மையை கம்பராமாயணத்தில், வில்லிபாரதத்தில் எப்படி போற்றப்பட்டுள்ளது என்பதை ஆராய்வதே இந்த கட்டுரையின் நோக்கம்.பெண்மையை போற்றி எழுதுவது மட்டுமே என் நோக்கம்.

பெண்மை பற்றி எழுதுவதற்கு, முதலில் எனது குரு வணக்கம் மகாகவிக்கு. பெண்மையை கொண்டாடிய பாரதிக்கே, பெண்மையின் மேன்மையை பற்றி முதலில் விளக்கி புரிய வைத்தவர் நிவேதிதா. நிவேதிதா, பெண்மையை பற்றி பின்வருமாறு பாரதியிடம் கூறி உள்ளார். "சாதி மதம் பிறப்பு காரணமான அநாகரிக வேற்றுமைகளை மறந்து விடு. பெண்மக்களைத் தாழ்வாக நினைக்காதே. மனைவியைக் காமத்துடன் நோக்காதே. மாதர்களை இருட்டில் தள்ளிவிட்டு அவர்கள் அறியாமல் ஆண்கள் மட்டும் மேலான நிலைக்கு ஒருபோதும் வரமுடியாது என்பதை உணர்ந்து கொள்."

முதலில் பெண்-ஆண் பற்றி அறிவோம். இந்து மதத்தில் சக்தி - சிவம் என்ற தத்துவம் உண்டு. இந்த உலகில் இரண்டு தான் உண்டு. ஒன்று பொருள் (Matter), இன்னொன்று இயக்கம் (Energy) ஆகும். நாம் கூட உடல்+உயிர் ஆவோம். உடல் என்பது பொருள் ஆகும், அதை இயக்குவது உயிர் ஆகும். அந்த உயிர் தான் சக்தியாகவும், உடல்தான் சிவமாகவும் கருதப்படுகிறது.

ஒருவர் இறந்த பிறகு, அவருடைய உயிர் (சக்தி) பராசக்தியுடன் இணைகிறது. உயிரில்லாத உடல் (சிவம்), சவமாகும். அந்த சவத்தை சிவன் வாழும் சுடுகாட்டில் எரிக்கப்பட்டு, பரமசிவனுடன் இணைகிறது. இந்து மதத்தின்படி பெண் என்பவள் சக்தி ஆவாள். ஆண் என்பவன் சிவம் ஆவான். ஆண் திறம்பட செயலாற்ற பெண் என்ற சக்தி இன்றியமையாதவளாகிறாள்.

ஒரு ஆடவன் முதலில் நல்ல முறையில் வளர தாய் உந்து சக்தியாயிருக்கிறாள். அவன் சமுதாயாத்தில் நல்ல முறையில் வாழ மனைவி உந்து சக்தியாயிருக்கிறாள். இறக்கும் வரை அவனை அரவணைத்து காக்கும் சக்தியாக மனைவியோ, மகளோ, தாயோ இருக்கிறாள். பிறப்பில் இருந்து இறக்கும் வரை செயலாற்ற ஆணுக்கு பெண் என்ற சக்தி தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறது. பெண்மையை பற்றி இந்த விளக்கத்தை நம் மனத்தில் நிறுத்திக்கொண்டு, ராமாயணத்தையும், பாரதத்தையும் ஆராய்வோம்.

ராமாயணத்தில் போரிட்டது இராமன். மகாபாரதத்தில் போரிட்டது பாண்டவர்கள். அந்த இரு மாபெரும் போரில் போரிட்டவர்கள் அனைவரும் ஆண்கள். அந்த போருக்கு மூலகாராணம், அதர்மத்தை வெல்வது ஆகும். ஆனால் அந்த தர்மத்தை வெல்வதற்கு உந்துசக்தியாய் இருந்தவர்கள் இருபெண்கள் (சீதையும், திரௌபதி) என்பது எல்லோரும் அறிந்ததே ! கம்பராமாயணத்திலும், வில்லிபாரதத்திலும் இந்த பெண்மை இரு காட்சியில் மேன்மேலும் (எனக்கு தெரிந்த அளவில்) போற்றப்பட்டுள்ளது. அதை காண்போம்.

கம்பராமாயணத்தில் கன்னி மாட காட்சி : சீதை கன்னி மாடத்தில் விளையாடி கொண்டிருக்கிறாள். இராமன் விஸ்வாமித்திரர் முனிவருடன் வந்து கொண்டிருக்கிறான். தனது சக்தியை பார்வையின் மூலம், வேறு எந்த ஆடவனுக்கும் தரக்கூடாது என்ற நோக்கத்தில், பூமித்தாயை மட்டும் பார்க்கிறாள். ராமனோ பாற்கடலில் தன்னை விட்டு பிரிந்து சென்ற சக்தியை தேடி மேல்நோக்கி பார்த்தபடியே நடக்கிறான்.

இந்த நேரத்தில் ஒரு சின்ன பிளாஷ்பேக். சீதை சிறுவயதில் விளையாடும்போது சிவதனுஷை விளையாட்டாக நகர்த்தி விட்டாள். அறுபதினாயிரம் பேர் கொண்டு தூக்கும் அந்த வில்லை அவள் ஒருத்தியே தூக்குகிறாள் என்றால், இவள் ஆதிபராசக்தியின் அம்சம் என்றுணர்ந்தான் ஜனகன். அதனால்தான் அந்த வில்லின் நாணேற்றுபவனுக்கு எனது மகள் என்று அறிவித்தான் ஜனகன். தனிப்பெரும் சக்தியாக மட்டுமே பெண்ணால் இயங்க (வில்லை நகர்த்தியது) முடியும் என்பது இங்கு குறிப்பு.

மறுபடியும் கன்னி மாட காட்சிக்கு வருவோம். இப்பொழுது இராமன் சீதையை பார்க்கிறான். சீதையின் முகத்தையும், இருதயத்தையும் பார்க்கிறான். சீதையோ இராமனின் முகம் பார்த்த பின்னர், அவனது தோளையும், கையையும் பார்க்கிறாள். முகம் பார்த்து பாற்கடலில் தன்னை பிரிந்தவன் என்று உணர்கிறாள். அடுத்து அவனை மணக்க வேண்டுமானால், அவன் வில்லின் நாணேற்ற வேண்டும். வில்லை தூக்க தோளுக்கு வலிமையும், நாணேற்ற கைகளுக்கு வலிமையும் தேவை. இராமனுக்கு அந்த சக்தியை அளிக்கவே அவனது தோளையும், கையையும் பார்த்தாள் என்பது கம்பன் சொல்லாமல் சொன்ன செய்தி.

'பெண் என்பவள் தன் சக்தியால் தனித்து இயங்கவும் முடியும். தேவைப்படும் நேரத்தில் அந்த சக்தியை ஆணுக்கு அளித்து, அவனை இயங்க வைத்து தேவையானதை பெற்றுக் கொள்ளவும் முடியும். ' என்பது இதில் தெளிவாக தெரியும் உண்மையாகும்.

இப்பொழுது எல்லோருக்கும் எழும் கேள்வி ஒன்று. அனுமன் ஒரு பிரம்மச்சாரி, பலசாலி, பராக்கிரமசாலி. அவருக்கு யார் சக்தியாக திகழ்கிறார்?? அதையும் ஆராய்வோம். அனுமன் கூட சுந்தர காண்டத்தில் முதலில் அமைதியானவராக இருப்பார். அதாவது அசோகவனத்தில் சீதை காணும்வரை பரம சாதுவாக, அமைதியாக இருந்தார். கடலை தாவும்போது ஓரே ஒரு அரக்கியை மட்டும் கொன்றார். சீதையை கண்டு சூடாமணியை வாங்கிய பின்னர் அவரின் செய்கையை பார்த்தால், ஊறுகாலத்தில் உலவும் ருத்திர மூர்த்தி போலிருக்கும். சீதையின் கற்புநிலை (சக்தி) கண்ட பின்னர், அவர் கொன்றவர்களின் பட்டியல் :- அசோகவனத்தின் காவலர்கள், கிங்கிரர்கள், சம்புமாலி, அக்கயகுமாரன். ஆக மொத்தத்தில், அனுமன், சுந்தர காண்டத்தின் முதல்பகுதியில், (சீதை காண வேண்டும் என்று) தவம் புரியும் சிவனாகவும், பிற்பகுதியில் (சீதையை கண்டு சக்தி பெற்று) ருத்திர தாண்டவம் ஆடும் சங்கரனாகவும் காட்சியளிக்கிறார்.

'இவளின் கற்புநிலை இந்த உலகையே உய்விக்ககூடிய சக்தி வாய்ந்தது. அப்படிப்பட்ட பெண்ணை மணந்த இராமன் சர்வ நிச்சயமாக அண்டர் நாயகன்.', என்று உணர்ந்து இராமபக்தன் ஆனான் அனுமன். அவனுக்கு சக்தி அளிப்பது ஸ்ரீஇராம நாமமும், அவன் மனதில் என்றும் வாழும் ஜானகி-ராமனும் ஆகும். [இராமனுக்கு யார் சக்தியாய் திகழ்கிறார் என்று ஏற்கனவே பார்த்தாகிவிட்டது.]

இப்பொழுது வில்லி பாரதத்திற்கு வருவோம். பாண்டவர்களின் பதினான்கு வனவாசமும், ஓராண்டு அஞ்ஞாதவாசமும் முடிந்து போருக்கு தயார் ஆகின்றனர். அதற்கு முன்னர், கிருஷ்ணனை தூது அனுப்ப முடிவு செய்துள்ளனர். அப்பொழுது கிருஷ்ணனுக்கும் சகாதேவனுக்கும் ஏற்படும் உரையாடலில் கிருஷ்ணன் சகாதேவனிடம் ஒரு சவால் விடுகிறான். அதாவது, 'பாரதப்போரை நிறுத்த முடியுமா?' என்று கிருஷ்ணன் கேட்கிறான். சகாதேவனும், மூன்று காரியங்கள் செய்தால் நிறுத்தலாம் என்று பதிலளித்தான். அவைகள் பின்வருமாறு ...

1. வில் விஜயனை கொன்று விடுதல் - விஜயன் இருக்கும் தைரியத்தில் தான் மற்ற நால்வரும் போரை கண்டு அஞ்சவில்லை. விஜயனை கொன்று விட்டால், தருமர் போரை தொடங்க மாட்டார்.
2. கிருஷ்ணனை கட்டி போடுதல் - தான் நினைத்தது நடக்க எல்லா விதமான குட்டி கலாட்டா செய்பவன் கிருஷ்ணன். கௌரவர்களை கொல்ல வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், தனி ஒருவனாக சென்று போரை நடத்தி முடித்து விடுவான். ஆகையால் இவனை கட்டிப்போட்டே ஆக வேண்டும்.
3. திரௌபதிக்கு மொட்டை போடுதல் - திரௌபதி தனது சபதத்தின் காரணமாக தலைவிரி கோலமாக இருக்கிறாள். அவளது முடியாத கூந்தலை பார்க்கும்பொழுது எல்லாம் நால்வருக்கும் அந்த துகிலுரிப்பு சம்பவம் நினைவுக்கு வந்து கௌரவர்கள் மேல் தாங்கவொண்ணா கோபம் வரும். அது போருக்கு வழி வகுக்கும்.

சகாதேவன் இந்த மூன்றுமே செய்ய வேண்டும் என்று கூறுகிறான். விஜயனை கொன்ற பின்னரும், கிருஷ்ணனை கட்டிப் போட்ட பிறகும், பாரதப்போரை நடத்தும் சக்தி திரௌபதியின் கூந்தலுக்கு உண்டு என்பது சகாதேவனின் வாதத்தின் அடிநாதம். 'குருடனின் மகன் குருடன்' என்று சொல்லி, பாரத போருக்கு அடித்தளம் அமைத்ததும் திரௌபதி. துரியோதனனுடைய இரத்தத்தை தனது கூந்தலில் தடவி, அப்போரை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தவளும் திரௌபதி.

மொத்தத்தில் பெண்மை என்ற சக்தி அளப்பரியது. அதை திரௌபதி போல் குடும்பச்சண்டைக்கு பயன்படுத்தி தத்தம் குடும்பத்தையும், வம்சத்தையும் (அபிமன்யு, பீமனின் மகன் கடோத்கஜன்) அழிக்க வேண்டாம். சீதையை போல் அதர்மத்தை (அசுர வம்சம்) மட்டும் அழிக்க பயன்படட்டுமே...

Saturday, April 10, 2010

வள்ளுவன் காட்டும் இறைவன்...

எனது இந்த 50வது பதிவு, நிலையான ஒரு தத்துவத்தை பற்றியதாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். நிலை மாறும் இவ்வுலகில் நிலையான ஒன்று இறைவன் மட்டுமே. இறைவனை விவாதப் பொருளாக எடுத்தால், அந்த விவாதம் முற்றுப் பெறாது என்பதை, எனது முந்தைய பதிவில் தெரிவித்து இருந்தேன். இம்முறை இறைவனை பாடுபொருளாக வைத்து எழுத எனக்கு தகுதியில்லை என்பதை நன்கு அறிவேன். அச்சமயம், எனது ஆசான், வள்ளுவன் என் நினைவுக்கு வந்தான். நாம் தினம் தினம் சந்திக்கும் பிரச்சனைகள், கேள்விகள், சந்தேகங்கள், அனைத்திற்கும் வள்ளுவனின் குறளில் தீர்வு உள்ளது. அப்படியென்றால் இறைவனை பற்றிய எனது கேள்விக்கும் வள்ளுவனிடம் பதில் இல்லாமலா போய்விட போகிறது. இறைவனை பற்றிய எனது ஏழு (ஒவ்வொரு குறளின் நீளம் ஏழு வார்த்தைகள்தானே..) கேள்விகளுக்கு வள்ளுவன் கூறும் பதிலை காணலாம்.

முதலில் எனது கேள்வி இருக்கும். அதன் பின்னர் பதிலாக வள்ளுவனின் குறள்/குறளின் சில வார்த்தைகள் இருக்கும். வள்ளுவனின் அந்த பதிலை நான் எவ்வாறு புரிந்து கொண்டேன் என்பதை, அதன்பின்னர் விளக்கி இருக்கிறேன். எனது கேள்விக்கு ஏற்றாற் போல குறளின் வரிசையை மட்டும் மாற்றி இருக்கிறேன். பொருளை மாற்றவில்லை. தவறு இருப்பின், வள்ளுவனின் நேசர்கள் என்னை மன்னிக்கவும்.

முதல் கேள்வி : இறைவன் இருக்கிறானா??

பதில் : ஆதி பகவன் முதற்றே உலகு.

விளக்கம்: 'உலகு' என்பது ஆகுபெயர். இந்த பூமியை மட்டுமில்லாமல், பூமியில் வாழும் உயிர்களையும் சேர்த்து உலகு என்று குறிப்பிடுகிறார். ஆக இப்புவியில் முதலில் தோன்றிய உயிருக்கும், கடைசியில் தோன்றும் உயிருக்கும் முதன்மையானவன் அவன். அப்படிப்பட்ட முதன்மையானவன் இல்லாமல் இருப்பானா?? நம்மை இந்த உலகிற்கு கொண்டு வந்த தாய்-தந்தையரும் இறைவனின் அம்சமாக கருதப்படுவதற்கும் காரணம் இதுவே... தாய் மூலம்தான் நாம் இந்த உலகிற்கு பிறந்தோம் என்று நம்புவோமேயானால், இறைவன் இருப்பதையும் நம்பித்தான் தீர வேண்டும்.

இரண்டாம் கேள்வி: 'எனது தாயை காண்கிறேன். அவளுடன் பேசுகிறேன். அவள் பேச்சை கேட்கிறேன்.' என்பதனால் அவள் இருப்பை நான் நம்புகிறேன். பார்க்க முடியாத, கேட்க முடியாத, இறைவனை இருப்பதாய் நான் எப்படி நம்ப முடியும்?

பதில் : தனக்குவமை இல்லாதான், எண்குணத்தான்.

விளக்கம்:- புரியாத ஒன்றை எளிதாய் புரிய வைக்க 'உவமை' கையாளப்படும். 'வெள்ளத்தனைய...', 'இனிய உளவாக...' போன்ற குறள்களில் உவமைகளை வெகுவாக, அழகாக கையாண்ட வள்ளுவனே இறைவனை ஒரு உவமைக்குள் அடக்க இயலவில்லை. ஐம்பொறிகளால் நாம் இறைவனை உணர முடியுமென்றால், வள்ளுவன் உவமையுடன் விளக்கி இருப்பான். ஆக மனதினால் மட்டுமே இறைவனை நீ உணர முடியும் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

பிறவிக்குருடர்கள் யானையை தொட்டுப்பார்த்து அவரவர் கற்பனைக்கு ஏற்றபடி உணர்ந்து கொள்வதுபோல், மனதினால் இறைவனின் எண்குணத்தை உணரலாம்.

மூன்றாவது கேள்வி: மனதினால் மட்டுமே உணர முடிகின்ற இறைவனின் இயல்புகள் என்னென்ன?? (அல்லது) நான் இறைவனாக முடியுமா??

பதில் : வேண்டுதல் வேண்டாமை இலான், பொறிவாயில் ஐந்தவித்தான், அறவாழி.

விளக்கம் : இறைவன் விருப்பு-வெறுப்பு அற்றவன். இவ்வுலக பொருள்களின்,உயிர்களின் மேல் விருப்பு-வெறுப்பு இருக்கும்பட்சத்தில் மனிதனுக்கு மன அமைதி இல்லாமல் போய்விடுகிறது. ஆக இந்த இரண்டும் இல்லாமல் சமநிலையில் இருக்கும்போது நாம் இறைவனாவோம். உதாரணம்: ரமணர். மனோநாசம் செய்து, விருப்பு-வெறுப்பு அற்றவர்.
இறைவன் ஐம்புல ஆசைகளை ஒழித்தவன். உலக ஆசைகள் எல்லாம் துறந்தால், நாமும் இறைவனாய் போற்றப்படுவோம். உதாரணம்: புத்தர், பட்டினத்தார்.
இறைவன் அறக்கடல். 'அறன் வலியுறுத்தல்' அதிகாரத்தில் அறத்தை பற்றி இன்னும் நிறைய சொல்லியிருக்கிறார். வள்ளுவன் வலியுறுத்தும் அறங்களை,நெறிகளை பின்பற்றினால், 'வானுறையும் தெய்வத்துள் வைக்கபடும்' என்று அவரே கூறியிருக்கிறார். உதாரணம்: பகவான் ராம கிருஷ்ணர், வள்ளலார்.

நான்காம் கேள்வி: அத்தகைய இயல்புடைய இறைவன் அவர் வேலையை பார்த்துக் கொண்டு இருக்கட்டும். நான் என் வேலையை பார்த்து கொண்டு இருக்கிறேன். எனக்கும் அவருக்கும் தொடர்பற்ற நிலையில் இருந்துவிட்டு போகிறோமே.. என்ன கெட்டு போச்சு??

பதில் : கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.


விளக்கம் : என்னை அடித்து துவைத்த குறள் இது. இது வள்ளுவனின் இரண்டாவது குறள். முதல் குறளில் இறைவனை வணங்குகின்றார். அடுத்த குறளிலேயே நம் அனைவரையும் வணங்க சொல்கிறார். தனது குறளை படித்து அர்த்தம் புரிந்து கற்க முடியுமென்றால், அக்கல்வியின் பயனாக இறைவனை தொழுதே தீர வேண்டும் என ஆணித்தரமாக அடித்து சொல்கிறார்.

படிப்பது வேறு, கற்பது வேறு. படித்த,கேட்ட, மற்றவர் செய்து காட்டிய ஒன்றை நாம் செய்து பார்த்து அதை உணர்ந்து கொள்வதே கற்பது. அப்படி, நாம் உணர்ந்து கற்றுக்கொள்ள உறுதுணையாய் இருக்கும் இறைவனை தொழாமல் இருப்பது தவறு என்று இடித்துரைக்கிறார்.

ஐந்தாம் கேள்வி: இறைவனை தொழ வேண்டும் என்று சொல்கிறீர்கள். நான் தொழுவதால் எனக்கு என்ன பயன்?

பதில்: இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு


விளக்கம்: இறைவனின் உண்மையான புகழை விரும்பி நினைக்கும் அன்பர்க்கு அறியாமையால் வரும் நல்வினை, தீவினை ஆகிய இரண்டும் அடைவதில்லை.

ஆறாம் கேள்வி: தொழ வேண்டிய அந்த இறைவனை நான் தொழாமல் போனால் என்னாகும் ? (அல்லது) இறைவனை தொழுவதால் ஏற்படும் பயன் எனக்கு ஒன்றும் தேவையில்லை. அப்படி தொழாமல் இருந்து விட்டு போகிறேனே... என்ன கெட்டு போச்சு??

பதில்: பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.


விளக்கம்: பிறவி என்னும் பெருங்கடலில் நாம் அனைவரும் விழுந்து விட்டோம். அதான், பிறந்து விட்டோமே. கரை சேர வேண்டுமென்றால் இறைவனடியை தொழ வேண்டும். இல்லையென்றால் கரை சேர முடியாது.

ஏழாவது கேள்வி: ஒரு செயலை செய்யாவிட்டால் தீங்கு கண்டிப்பாக ஏற்படும். செய்தால் நன்மை ஏற்படும். அப்படிப்பட்ட செயலை செய்பவன் அறிவாளி, செய்யாதவன் கற்றறிந்த மூடன். இறைவனை தொழுவதும் அப்படிப்பட்ட செய்கையே ஆகும். நான் எப்படி இறைவனை தொழ வேண்டும்?? எந்த முறை சிறந்த முறை?

பதில் : மலர்மிசை ஏகினான்

விளக்கம் : அன்பரின் நெஞ்ச மலரில் வீற்றிருப்பவன் இறைவன். நமக்கு விருப்பபட்ட உருவத்தில் (விநாயகராய்,முருகனாய்,பெருமாளாய், அபிராமியாய்,இயேசுவாய்,அல்லாவாய், ராமனாய், கிருஷ்ணனாய், புத்தரை, அனுமானாய், ஈஷ்வரனாய்) இறைவனை அன்புடன் மனத்தினில் நினைத்தாலே, நமது இதய கமலத்தில் வந்து வீற்றிருப்பான். நமது வீட்டிற்கு வந்த ஒரு விருந்தினரை, குழந்தையை கனிவாய் கவனிப்பது போல், நமது இதய கமலத்தில் வந்து குடியேறிய இறைவனையும் விருப்பபடி உபசரிப்பதே மிகச்சிறந்த தொழுகையாகும்.

Sunday, March 16, 2008

அஞ்சாதே - திரைக்கண்ணோட்டம்.

மிக நீண்ட நாட்களுக்குப்பிறகு ஒரு அழகிய தமிழ் படம். அருமையான கதை, ஆழமான திரைக்கதை, அற்புதமான இயக்கம் என ஒரு அழகிய கலவையாக இருக்கிறது, ”அஞ்சாதே”.



படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் மனதில் நிறைகின்றன. பாண்டியராஜனுக்கும், பிரசன்னாவுக்கும் மிக வித்தியசமான கதாபாத்திரங்கள். பாண்டியராஜனின் திருட்டு முழி
இல்லாமல், தனது கரகரப்பான குரலினால் மிரட்டுகிறார். சாக்லேட் பேபி ‘பிரசன்னா' வா இது??? தலைமுடி மறைக்க, ஒரு விழியால் மட்டும் பார்ப்பது, கையை ஒரு மாதிரி
சாய்த்து, மணி பார்ப்பது என்று அசத்தி இருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் அவர் அப்படி பார்ப்பது அழகு.

பாஷ்கர், லிவிங்க்‌ஷ்டன் அப்பாக்களுக்கு சரியான தேர்வு. ஒரு கை இல்லாமல் வரும் ‘குருவி' கேரக்டர், கடைசியில், “நான் செத்துருவேனடா??” என கேட்டு இறக்கும் போது நெஞ்சை கரைய வைக்கிறார். பொன்வண்ணனும் தனது வேலையை செவ்வனே செய்து இருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும், நரேன், அஜ்மல் நிஜ நண்பர்கள் போலவே வலம் வருகிறார். அஜ்மல் தனக்கு வேலை கிடைக்காத வருத்தத்தை கண்ணில் காட்டுகிறார். நரேன் தன் மேலதிகாரியை பார்த்து, “அப்ப, நீங்க பிடிங்க... ” என்று சொல்லும்போது மிளிர்கிறார். திரைப்படத்தின் பிற்பகுதியில் தமது கதாபாத்திரத்தின் தன்மை மாறுவதை எதர்த்தமாக காட்டியுள்ளனர், அஜ்மலும், நரேனும்.

மிஷ்கினை பற்றி சொல்லிக்கொண்டே செல்லலாம். ஒவ்வொரு காட்சியிலும் தனது முத்திரையை பதித்து உள்ளார். பாண்டியராஜன்,பிரசன்னா இருவரும் அஜ்மல் வீட்டில் இருக்கும்போது காலை மட்டும் காட்டி காட்சி அமைத்தது ஒரு எடுத்துக்காட்டு. 'குருவி' கேரக்டரின் மனைவி முகத்தையும், பாண்டியராஜனின் அடியாள் அந்த மொட்டையின் முகத்தையும் காட்டாமல் இருப்பதில் பாலச்சந்தரை ஞாபகப்படுத்துகிறார். டயலாக் அதிகம் இல்லாமல் காட்சியில் அழுத்ததை காட்டுவதில் மணிரத்னத்தை ஞாபகப்படுத்துகிறார். கடத்திய பெண்ணின் உள்ளாடைகளை பார்சல் பண்ணி அனுப்பும் காட்சி ஒரு உதாரணம். ஒரு பெண்ணை அடிப்பதை அவுட் ஆஃப் ஃபொகஷில் காட்டுவது இயக்குனரின் மெச்சூரிட்டியை காட்டுகிறது.

இவ்வளவு பாஷிடிவ் பாயிண்ட் இருந்தும் ஒரு சில குட்டுகள் இருக்கின்றன. கடுமையாக உழைத்தாலும் அதற்கு சரியான பலன் கிடைக்காது என்ற ஒரு தவறான மெஷெஜ்
சொல்லப்பட்டுள்ளது. தனது மகள் நிர்வாணமாக இருக்கிறாள் என்று உணர்ந்தும் ஒரு ஆடையை கூட எடுக்காமல் தந்தை செல்வது ஒரு உறுத்தல்தான்.

இப்படி சில குட்டுகள் இருந்தாலும், அது மற்ற பாசிடிவ் பாயிண்டுகளால் மறைந்து விடுகின்றனர். ஆக மொத்ததில் தியேட்டருக்கு கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டிய படம் இது.