Saturday, December 15, 2007

எது அழகு???

தவறென்று தெரியாமல் குழந்தை செய்யும் குறும்பா??
அதை மன்னித்து,மறந்து ரசிக்கும் தாயின் குறுநகையா??

தன் காதலிக்காக வான் பொழியும் முத்த மழையோ??
அதை வாங்கி பூமி ஏழு நிறத்தில் வெட்கப்படும் அழகோ??

தகாத கேள்வி வினவும் பிள்ளையின் ஆர்வமா??
பதில் தர முடியாமல் முழிக்கும் தந்தையின் தவிப்பா??

வேண்டுமென்றே அடித்து அழவைக்கும் அண்ணனின் அன்பா??
அழுவது போல் நடித்து அன்னையிடம் அடி வாங்கி தரும் தம்பியின் பாசமா??

இவையெல்லாம் கொடுத்த இறைவனின் பெருந்தன்மையா??
அனைத்தையும் ரசிக்கும் மனிதனின் ரசனையா??

Wednesday, December 12, 2007

கதைப்போட்டி... - சிறுகதை

அது ஒரு பன்னாட்டு நிறுவனம். பொறியியல் கல்லூரியில் படிக்கும் அனைத்து இறுதியாண்டு மாணவர்கள் மத்தியில் அடிக்கடி அடிபடும் நிறுவனம் இது. இதன் முக்கிய தொழில், மென்பொருள் தயாரித்து வெளிநாட்டில் விற்பனை செய்வதாகும். இதில் வேலை பார்க்கிறேன் என்று தப்பித்தவறி, ஆட்டோக்காரரிடமோ, வீட்டு ஓனரிடமோ சொன்னால், பர்ஸ் கிழிவது உறுதி. இந்த நிறுவனத்தில் சேர்வதே பெரிய விஷயம் என்ற நினைப்பில் சேர்ந்து, சேர்ந்த பின்னர், இதுக்காகவா இவ்வளவு கஷ்டப்பட்டோம் என்று நொந்து கொள்பவர் பலர். அவர்களில் ஒருவன் தான் குமார். வேலைக்கு சேர்ந்த ஆறு மாதத்திலேயே அவன் வேலையை வெறுக்க ஆரம்பித்து விட்டான். இன்னும் அவன் அந்த நிறுவனத்தில் வேலை தொடர இரண்டு காரணம். ஒன்று சம்பளம், மற்றொன்று அஸ்வினி. அஸ்வினி அவனது உயிர்த்தோழி. இருவரும் ஓரே கல்லூரியில ஒன்றாக படித்து, ஓரே நிறுவனத்தில் வேலை கிடைத்து, ஒன்றாய் டிரெயினிங் முடித்து, ஒரே அக்கௌண்டில் வெவ்வேறு பிராஜக்ட்டில் வேலை செய்கின்றனர்.

எவ்வளவு வேலை இருந்தாலும் சரி, காலை 10:30 மணிக்கு காபி சாப்பிட காண்டீன் வந்து விடுவார்கள். அப்படி ஒரு நாள், டிசம்பர் 10, 2007,

"என்னடா பலமா யோசிக்கிற... என்ன விஷயம்??? நேத்து பார்த்த, 'கல்லூரி' பட சோகமான முடிவு ஞாபகமா?"

"இல்லைடி.. அது வந்து..."

"ஷ்கிரிப்ட் எரர் வந்ததுன்னு சொன்னியே... அதுவா??"

"ம்ஹூம்... என்னன்னா...."

"உன் டீம்ல நார்த் இண்டியாவில் இருந்து ஒரு பொண்ணு வந்து இருக்கியே... அத பத்தியா??"

"சீ.. சீ... இது வேற வி....."

"வேறு என்னதான் விஷயம். சொல்லித்தொலையேன்...."

"நீ சொல்ல விட்டாத்தானேடி சொல்வேன்.... "
அதிசயமாய் வாயை மூடினாள்.

"'சர்வே'சன் ஒரு கதைப்போட்டி நடத்துறார். அதைப்பத்தி தான் யோசிக்கிறேன்."

"யாரு?? 'சர்வே' நடத்துவாரே... அந்த ப்லாக்கரா?? "

"ம்ம்ம்ம்...."

"நீ அந்த போட்டியில் கலந்துக்க போறியா??"

'ஆம்' என்பது போல தலையாட்டினான்.
"என்ன ப்ரைஸ்??"

"நூறு அமெரிக்கன் டாலர். இருபத்தைந்து நமக்கு. எழுபத்தைந்து டாலர், உதவும் கரங்கரங்களுக்கு..."

"நல்லதுதானே.... எப்படி வின்னரை செலக்ட் பண்ணுவாங்க??"

"தெரியலை... யார் கதைக்கு, அதிகமா பின்னூட்டம் கிடைக்குதோ, யாருக்கு அதிகமாக வாக்கு கிடைக்குதோ, அவங்க தான் வின்னர்.."

"போட்டியில் கலந்துக்கறது தப்பு இல்லை. ஆனால் ப்ரைஷ் கிடைப்பது கஷ்டம்தான்." நக்கலாய் சிரித்தாள்.

அக்னிபார்வை பார்த்தான் குமார். அஸ்வினி, அவனது கோபத்தை புரிந்து கொண்டு, சிரிப்பை அடக்க முயற்சி செய்தாள். "சரி... சரி... முறைக்காதே... உனது ப்லாக்கை, நானும், நம்ம ப்ரெண்டஸ்தான் படிக்கிறோம். அதில் ஒருத்தனும் உனக்கு கமெண்ட்ஸ் எழுதுவதில்லை... நான் தான், பாவமென்று கமெண்ட்ஸ் எழுதுறேன். பின்ன எப்படி நீ ஜெயிப்ப??"

"அதைப்பத்தி தான் யோசிச்சுக்கிட்டு இருந்தேன். ஐயாகிட்ட சூப்பர் ஐடியா இருக்கு..."

"கேட்காவிட்டாலும் நீ என்னை விடப்போறதில்லை. சொல்லு...."

"நானே என் கதைக்கு, கமெண்ட்ஸ் எழுதினா???"

"நீ மட்டும் புத்திசாலி என்று நினைக்காதே.... பெயர் வைத்து கண்டு பிடிச்சுடுவாங்க..."

"நான் என்ன அவ்வளவு தூரத்திற்கு மடையனா?? கூகிள் அகௌண்ட், ஐம்பது கிரியேட் பண்ணி, ஒவ்வொரு அகௌண்ட் யூஸ் பண்ணி பின்னூட்டம் எழுதுவேன். "

"மடத்தனமான ஐடியா இது.... ஒரு ஆயிரம் ரூபாய்க்கு இந்த பாடா??"

"எனக்கு ஜெயிக்கணும்... அவ்வளவுதான்... ஒரே கல்லில் இரண்டு மாங்காய். என்
ப்லாக்கோட ரீடர்ஸ் அதிகம் ஆவாங்க.... ப்ரைஸ் கிடைக்கவும் சான்ஸ் இருக்கு..."

"அது சரி... திடீர்னு சர்வே எடுத்து ரிசல்ட் அனௌன்ஸ் பண்ணால் என்ன பண்ணுவ??"

"அது இதை விட ரொம்ப சிம்பிள்...... நான் ஏற்கனவே கிரியேட் பண்ண அகௌண்டை யூஷ் பண்ணி, சர்வேயில் எனக்கு அதிகமா வோட்டு போட்டு கொள்வேன்... "

"எக்கேடும் கெட்டுப்போ.... ஆனால் எனக்கு என்னமோ, இது ஒர்க்-அவுட் ஆகும் என்று தோணலை..."

"சரிதான் போடி.... சம்திங் இஸ் பெட்டர் தான் நத்திங்... "

"நத்திங் இஸ் பெட்டர் தான் நான்சென்ஸ்... சரி, நான் கிளம்புறேன்."

அஸ்வினி சென்றவுடன், குமார் தனது சிந்தனையை தொடர்ந்தான். தான் நினைத்தபடி, ஐம்பது கூகிள் அகௌண்ட் உருவாக்கி, அவனுடைய கதைக்கு அவனே பின்னூட்டம் எழுதி கொண்டான். டிசம்பர், 21ம் தேதி எல்லோருடைய கதைக்கும் பின்னூட்டம் எத்தனை வந்து இருக்கு என்று பார்த்தான். யாருடையதும் நாற்பதை தாண்டாத சந்தோஷத்தில் ஊருக்கு கிளம்பி போனான்.

கிறிஸ்துமஸ் விடுப்பு, புத்தாண்டு விடுப்பு எல்லாம் முடிந்து ஜனவரி 2ம் தேதி அலுவலகம் வந்தான். வழக்கம் போல அவனும், அஸ்வினியும் காண்டீன் சென்றனர். பரஸ்பரம், வாழ்த்து சொல்லி முடித்து, வழக்கமான கேள்விகள் எல்லாம் கேட்டு முடிந்து, அஸ்வினிதான் முதலில் கேட்டாள், "ஹேய்!!! சர்வேசன் ப்லொக் ரிசல்ட் என்னாச்சு??" பாதி குடித்து முடித்த காபியை அப்படியே விட்டுவிட்டு, கீழே ஓடினான். இந்தியா-பாகிஸ்தான் மேட்சில் எல்லா விக்கெட்டும் இழந்து ஒரு ரன் எடுக்க வேண்டிய நிலையில் ஓடும் ரன்னரின் படபடப்பு அவனிடம் இருந்தது.

அவனது இருதய துடிப்பு அவனுக்கே கேட்கும் அந்த நிலையில், வந்தது முடிவு, "வெற்றி பெற்றவர் - குமார்.

வெற்றி பெற்ற குமாருக்கு வாழ்த்துக்கள் !!! தங்களின் ஜிமெயில் அகௌண்டிலிருந்து எனக்கு உங்கள் முகவரி குறித்து மின்மடல் ஒரு வாரத்தில் (ஜனவரி 8ம் தேதிக்குள்) அனுப்பவும். நீங்கள் அனுப்பாத பட்சத்தில் உங்கள் பரிசு பணம் 25$ 'உதவும் கரங்களுக்கு' வழங்கப்படும்." என்று....

முடிவு - 1:
சிறு புன்னகையுடன் ஜிமெயிலில் லாகின் செய்தான். தனது வீட்டு முகவரியை டைப் செய்யும்போது, இன்னொரு டாப்பில் ப்லாக்கரையும் ஓபன் செய்தான். எப்பொழுதும் மாடரெட் செய்ய ஒரு கமெண்டும் இல்லாத டாஸ்போர்டில் 104 பின்னூட்டம் இருப்பது கண்டு விக்கித்து போனான். அவன் அனுப்பிய அந்த கதைக்கு மட்டும் வந்த பின்னூட்டத்தின் எண்ணிக்கை 54. முன்னர் எழுதிய மற்ற போஷ்டுக்கு வந்த பின்னூட்டங்களின் எண்ணிக்கை 50. சொல்லொணா மகிழ்ச்சி கொண்டான்.

கொஞ்சம் யோசித்தான். பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவனாக, கூகிள் டாப்பிற்கு வந்து, தனது முகவரியை எடுத்து விட்டு, "இந்த போட்டியில் வெற்றி பெற்றதின் மூலம் மகிழ்ச்சி. ஆனால் இதை முறையாக நான் பெறவில்லை. ஆகையால், இந்த பரிசு பணத்தை இரண்டாம் இடத்தில் வெற்றி பெற்றவருக்கோ, உதவும் கரங்களுக்கோ நீங்கள் தரலாம். அடுத்து போட்டி நடத்தினால், கண்டிப்பாக கலந்து கொள்வேன். நன்றி..." என்று சர்வேசனுக்கு மின்மடல் அனுப்பினான். பின்னால் நிழலாடுவது கண்டு திரும்பினான். அஸ்வினி, உதட்டோரம் சிறு புன்னகையுடன் நின்றாள்.

"நீ அடுத்த முறை கண்டிப்பாக ஜெயிப்பாய்."


முடிவு - 2
சிறு புன்னகையுடன், ஜிமெயில் லாகின் பேஜ் போனான். சிறிது நேரம் கண்ணை மூடி, யோசித்து, டைப் செய்தான். ஆனால், அந்த ஜன்னலோ சிவப்பாய் திட்டியது. மறுபடியும் யூசர் ஐடியும், பாஷ்வர்டும் டைப் செய்தான். மறுபடியும் அதே பதில். முகம் சிறுத்தது அவனுக்கு. விடாமல் வேறு பாஸ்வர்ட் முயற்சி செய்தும் அவனால் லாகின் செய்ய இயலவில்லை. 'உப்பு தின்னவன் தண்ணீர் குடித்து தானே தீர வேண்டும். பரவாயில்லை இந்த பரிசும் பணமும் நல்ல காரியத்திற்குத்தானே பயன்படபோகிற்து. நல்லதுதான்' என்று அமைதி கொண்டான்.

பின்னால் வந்த அஸ்வினி கேட்டாள், "என்னடா ஆச்சு??". தான் வெற்றி பெற்ற விஷயத்தை கூறினான்.
"உன் வீட்டு முகவரி அனுப்ப வேண்டியது தானே..."
"பல அகௌண்ட் கிரியேட் பண்ணதால் என் அகௌண்ட் பாஸ்வேர்டு மறந்து போச்சு..." என்று உதடு பிதுக்கினான்.
முன்னொரு முறை ஏதோ காரணத்திற்கு அவன் பாஸ்வேர்டு அறிந்து கொண்ட அஸ்வினி ஒரு வாரம் கழித்து சொல்லலாம் என்ற முடிவில், சொன்னாள் "ஓ!! ஹென்றி..."


சர்வேசனின் 'நச்சென்று ஒரு கதை' போட்டிக்கு எழுதப்பட்ட சிறுகதை

Tuesday, December 4, 2007

காதல் சொல்ல வந்தேன்...

"மனப்பூர்வமாக காதலிக்கிறேன்." என்று நான் கூறியதை கேட்டு, பூவிதழ் விரித்து,
"என்ன மீன் பண்ற?" என்று 'அலைபாயுதே' ஷாலினி மாதிரி கேட்டாய்.

"உன்னை நல்லபடியாக பார்த்து கொள்வேன்." என்று கண் பார்த்து கூறினேன்.

"'அந்நியன்' பட டயலாக் எல்லாம் சொல்லாதே !!" என்று முறைத்தாய்.

"உன்னுடன் இறுதி வரைக்கும் வாழ விரும்புகிறேன்." என்றேன் தட்டுத்தடுமாறி.

"அதற்கு நீ நண்பனாய் இருந்தால் போதுமே.." என்றாய் நக்கலாய்.

"உன்னை திருமணம் செய்து கொண்டு, சந்தோஷத்தை மட்டும் உன் கண்களில் கண்டு, மடிய விரும்புகிறேன்." என்று நீளமாய் கூறி முடித்தேன்.

என் கண்களை படித்த நீ, "என்னை திருமணம் செய்து கொள்ள 'காதல்' என்பது குறுக்கு வழியா?" வினவினாய்.

"இல்லை. திருமணம் செய்து கொள்ள உன்னை காதலிக்கவில்லை. காதல் செய்வதால் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன்." தீர்க்கமாய் சொன்னேன்.

"ஓ.. அப்படியா?? காதலிக்கும் போது என்ன செய்வாய்? திருமணம் முடிந்த பின்னர் என்ன செய்வாய்??" என்று குறும்பாய் கேட்டாள்.

"இது வரை 'உலக அழகி' பட்டம் பெற்ற எல்லாருடைய பெயர் பட்டியல் எடுப்பேன். எல்லோருக்கும், 'என் காதலி அந்த போட்டியில் கலந்து கொள்ளாத காரணத்தால் மட்டுமே நீங்கள் வெற்றி பெற்றீர்கள்' என்று கடிதம் அனுப்பி அவர்கள் திமிர் குறைப்பேன்." என்றேன் பெருமிதத்துடன்.

உள்ளம் மகிழ்ந்தாலும் அதை வெளிக்காட்டாமல், "ப்பூபூ... இவ்வளவுதானா?? மணலை கயிறாய் திரிப்பது, வானை வளைப்பது, போன்ற காரியத்தை செய்ய மாட்டயா??" என்றாய்.

"செய்ய முடியாதவற்றை பற்றி நான் வெளியில் சொல்வதில்லை. இன்னும் கேள். " என்று கூற, அலட்சியமாய் பார்ப்பது போல பாவனை காட்ட முயற்சி செய்து தோற்றாய்.

"'உன் முகத்தை பார்த்த பின்னர் தான் கடவுள் சந்திரனை படைத்தானோ??' என்று கவிதை என்ற பெயரில் கண்டதை சொல்வேன்." இதை கேட்டு, வந்த புன்னகையை மறைக்க உதடை மடித்தாய்.

"இப்படி பெரிய பொய் சொன்னாலும், அதை கேட்டு வெட்கப்படும் உன் அழகை ரசிப்பேன்." கண்ணடித்து சொன்னேன்.

பொய் கோபம் காட்டி, "சரி... சரி... கல்யாணம் செய்தால், என்னவெல்லாம் செய்வாய்??"

"நீ நால்வருக்கு மட்டும் மிக அழகாய் தெரிவாய். அந்த நால்வரில், நான் இருவராக இருக்க விரும்புகிறேன்". இது உனக்கு விளங்கவில்லை என்பது உனது புருவ அசைவில் இருந்தே தெரிந்தது.

"விளக்கமாய் சொல்கிறேன்... உன் தந்தைக்கு தாயாக தெரியும்போது, அழகாய் தெரிவாய். காதலனுக்கு, காதலியாய் இருக்கும்போது, அழகாய் தெரிவாய். கணவனுக்கு, தன் குழந்தையை சுமக்கும்போது அழகாய் தெரிவாய். மகனுக்கு, தாயாய் இருக்கும்போது அழகாய் தெரிவாய்." என்று கூறி மூச்சு வாங்கினேன்.

"ம்ம்ம்... காதலனாகவும், கணவனாகவும் என் அழகை ரசிக்க விரும்புகிறாய். அப்புறம்... " ஆர்வத்துடன் கேட்டாய்.

"உன் தந்தை உன்னை இந்த உலகத்திற்கு கொடுத்து என்னை பைத்தியக்காரனாய் ஆக்கியது போல, உன் பிரதியை உலகிற்கு கொடுத்து, என்னை போல் ஒருவனை பைத்தியக்காரன் ஆக்குவேன்..." மெல்லிய புன்னைகையுடன் சொன்னேன்.

"அவ்வளவுதானா?? இன்னும் இருக்கா??" உஷ்ண பெருமூச்சு ஒன்று விட்டாய்.

"என் மரணத்தில் மட்டுமே உன் கண்ணீரை காண்பேன்." என்று கடைசியாய் என் பிரம்மாஷ்திரத்தை பிரயோகித்தேன்.

"உண்மையாத்தான் சொல்றியா??" என நீ கேட்கும்போது, உன் கண்ணில் இருந்து நீர் வருவதை உணர்ந்தேன்.

உன்னிரு கரத்தையும், பிடித்து என் இரு கரத்தில் பொருத்தி, என் உதடு பதித்து, உன் இரு விழிகள் ஊடுருவி உன் இருதயத்தில் எதிரொலிக்கும்படி சொன்னேன், "ஐ மீன் இட்...."

பூமிக்கு மட்டும் உன் வெட்கப்படும் முகத்தை காட்டி, "நானும் மனப்பூர்வமாக காதலிக்கிறேன்." என முணுமுணுத்தாய்.

"என்ன மீன் பண்ற??" வாய் வரை வந்த கேள்வி, தொண்டையிலே செத்தது.



பின் குறிப்பு: இது கதையோ, கவிதையோ இல்லை. "ஓரு பெண்ணிடம் காதலை எப்படி வெளிப்படுத்தலாம்." என்ற கேள்விக்கு எனது பதில். எனது இந்த கற்பனையை உபயோகப்படுத்த விரும்புபவர்கள் உபயோகப்படுத்தலாம். ஆனால் அதன் முடிவை பின்னூட்டமாக கண்டிப்பாக இட வேண்டும்.

Thursday, November 15, 2007

தலைப்பில்லை

திடீரென்று உதயமான தத்துவங்கள். வள்ளுவன், ஒளவை சொன்ன தத்துவங்கள் வேறு வடிவில்......

உள்ளத்தில் உள்ள வலியை,
உதட்டில் இறக்கி,
உதடை காதுவரை இளி....
உள்ள வலி,
உதடு வழி இறங்கும்...




கண் உறங்கும் முன்,
கற்க ஏதாவது ஒன்றை தேடி,
கட்டிலில் புரண்டாலும்,
கட்டுரைகளை கரைத்து குடித்தாலும்,
கவிதைகளை, அதை எழுதிய
கவிஞனை விட ரசித்தாலும்,
கற்ற ஒன்று உரைக்கிறது,
கல்லாதது கடலளவு.

Saturday, October 27, 2007

நான் + ஆத்திகன் = நாத்திகன்.

"இறைவன் இருக்கிறாரா?", பற்பல வருடங்களாக நடந்து வரும் ஒரு பெரிய கருத்து மோதலின் சிறு பகுதி என்று இதை கொள்ளலாம். இந்த கட்டுரையின் நோக்கம் தீர்வல்ல. தீர்வை நோக்கிய ஒரு பயணம். இதில் பயணப்பட விரும்புவர் மட்டும் தொடரவும். மற்றவர் இந்த இடத்திலே பிரிந்து கொள்ளலாம்.

இந்த கட்டுரையில் எனது மனத்திற்கும், எனது அறிவிற்கும் நடக்கும் ஒரு உரையாடலைத்தான் எழுதி இருக்கிறேன். இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டால், மனம் என்பது ஒரு பஞ்சு போல். எந்த விஷயம் சொன்னாலும் அப்படியே ஏற்று கொள்ளும். பஞ்சு நீரை, நெருப்பை ஏற்று கொள்வது போல். அறிவு என்பது அன்னம் போல். நீரையும், பாலையும் வைத்தால் பாலை மட்டும் பிரித்து எடுத்து கொள்ளும். அறிவு என்பது நல்லது, கெட்டது எனப் பகுத்தறிந்து சரி எனப்படுவதை மட்டும் எடுத்துக்கொள்ளும்.

நான் ஆத்திகனா, நாத்திகனா என்பது எனக்கு தெரியாது. ஆகையால் அதை எனது மனமும், அறிவும் சொல்லட்டும் என விலகிவிட்டேன்.

மனம் ஆரம்பித்தது, "நான் ஒரு ஆத்திகன். என் பாட்டியார் வாழ்வில் கோயில் செல்லாத நாட்களை விரல் விட்டு எண்ணி விடலாம். என் தாயார் வீட்டில் செலவிடும் நேரத்தை விட கோயிலில் செலவிடும் நேரமே அதிகம். இவர்கள் வளர்த்த பிள்ளை நான். தெய்வ நம்பிக்கை உடையவன். ஆகையால் நான் ஒரு ஆத்திகன்."

அறிவு எதிர்த்தது, "நான் ஒரு நாத்திகன். என் தந்தையார் பெரியார் வழி செல்பவர். பகுத்தறிந்து செயல்படு, என்பதே எனக்கு சொல்லிகொடுக்கப்பட்ட மந்திரம். என் தாத்தா ஒரு நாத்திகர். கடவுள் இல்லை என்று சொல்பவர். இவர்களை பார்த்து வளர்ந்த நான் மட்டும் எப்படி ஆத்திகன் ஆக முடியும்? தெய்வ நம்பிக்கை கொண்டவன் என்று சொல்லும் மனமே, கடவுளை கண்டு இருக்கிறாயா??"

"இல்லை. நான் கேட்கிறேன். கரண்ட், காற்று இந்த பூமியில் உண்டா??"

"உண்டு."

"கண்டு இருக்கிறாயா?? "

"இல்லை. ஆனால் உணர்ந்து இருக்கிறேன்."

"நானும் கடவுளை உணர்ந்து இருக்கிறேன். அதுவும் பிறந்த சில நிமிடங்களில்.... "

"எப்படி??? எப்படி???"

"பிறந்த சில நிமிடங்கள் நான் சுவாசிக்கவில்லை. இறந்து விட்டேன், என்று முடிவு செய்து விட்டனர். அந்நேரத்தில் அங்கு வந்த என் பெரிய பாட்டி என்னை வேட்டியில் போட்டு உருட்டி மூச்சு விட வைத்தார். அதற்காக என் பாட்டியை தெய்வம் என்று சொல்ல வில்லை. அவரை அங்கு வர வைத்தது தெய்வ செயல். அன்று அந்த இடத்தில் என் பாட்டி வரவில்லையென்றால், நானும் இல்லை. இந்த கட்டுரையும் இல்லை."

"இதில் எங்கு தெய்வ செயல் இருக்கு? நீ பிறந்த ஆஷ்பத்திரியின் பக்கத்தில் உன் பாட்டி வீடு. இரண்டு நிமிடத்தில் வந்து விடலாம். உன் பாட்டியை அங்கு வர வைத்த கடவுள், உனக்கு பிறந்த உடனே மூச்சை கொடுத்து இருக்கலாமே.... சில நிமிடங்கள் தாமதம் செய்வதால், அவர் என்ன செய்ய போகிறார்??"

"என் விதி பத்து நிமிடங்கள் கழித்து தொடங்கி இருக்கலாம். நான் முந்திரிக்கொட்டை போல, வெளி உலகை பார்க்கும் ஆர்வத்தில் பத்து நிமிடம் முன்னமே வந்து இருப்பேன். கடவுள் வெயிட்டிங் லிஷ்டில் போட்டு இருப்பார்."

"அதைத்தான் நானும் சொல்கிறேன். உன் வாழ்வில் நடப்பதற்கு காரணம், உன் செயலும், உன்னை சுற்றி உள்ளவர்களின் தாக்கமும்தான். அது சரி, கடவுள் எப்படி தோன்றினார்?"

"அவர் ஒரு சக்தி. தானாக தோன்றியவர். அவர் ஒரு சுயம்பு. தானாக தோன்றிய பின்னர், இந்த பிரபஞ்சத்தை படைத்தார். இந்த உலகத்தை படைத்தார். இந்த உலகில் எங்கும் நிறைந்து இருக்கிறார்."

"கடவுள் தானாக தோன்றியது போல், இந்த உலகமும் தானாக தோன்றி இருக்க கூடாதா?? அப்படி எங்கும் நிறைந்து இருக்கும் அந்த சக்தியை ஏன், கோயிலில் மட்டும் வணங்குகிறீர்கள்??"

"காற்று கூடத்தான் எங்கும் நிறைந்து இருக்கிறது. அதை ஏன் டயரில் அடைத்து வைக்கிறீர்கள்??"

"அப்படி அடைத்து வைத்தால்தான் அது டயர். இல்லையென்றால், அது ஒன்றுக்கும் உபயோகப்படாது."

"அது போலத்தான், இதுவும். எங்கும் நிறைந்து இருக்கும் அந்த பரமசக்தியை கோயிலில் சாமியின் சிலையில் ஏற்றி வைக்கிறார்கள். ஒன்றாய் குவியும் சூரிய ஒளி எப்படி தாளை பற்ற வைக்கிறதோ, ஒன்றாய் குவியும் சக்தி பக்தர்களை பரவசப்படுத்துகிறது. கடவுள் இருக்கிறார் என்பதை எந்த காரணத்தை வன்மையாக எதிர்க்கிறாய்?"

"முதல் காரணம், உன்னால் பதில் சொல்ல முடியாத கேள்விகளுக்கு ஒரு காரணகர்த்தாதான் கடவுள். தேவையில்லாத பயத்தை போக்க உனக்கு ஒரு நாயகன் வேண்டும். அதற்காக உருவாக்கப்பட்டவரே கடவுள்."

"புரியவில்லை."

"பிரபஞ்சத்தில் எங்கும் வெற்றிடமாக இருக்க, பூமியில் மட்டும் மனிதன் வாழ நீர், காற்று, எப்படி கிடைத்தது?? என்ற கேள்விக்கு பதில் கடவுள் என்பாய். மிகவும் இக்கட்டான சூழ்நிலையில், மனிதர்களால் காப்பாற்ற முடியாத நிலைமையில் இருக்கும் உன் பயத்தை போக்க யாரை வேண்டுவாய்?? என்ற கேள்விக்கும், கடவுள் என்பாய். சரிதானே??"

"கண்டிப்பாக !!! நீ என்ன பதில் சொல்வாய்??"

"சொல்கிறேன். குழம்பாதே. இந்த பிரபஞ்சம் தானாக தோன்றியது. அதில் உள்ள பொருள்களின் நிலை இரண்டை பொறுத்து மாறும். ஒன்று அதின் பழைய நிலை. மற்றொன்று, இந்த பிரபஞ்சத்தில் உள்ள மற்ற பொருள்கள் அதன் மேல் ஏற்படுத்தும் தாக்கம். தற்சமயம், கல்லூரியில் பயன்படுத்தப்படும், ரிலேட்டிவ் கிரேடிங் இதற்கு நல்ல உதாரணம். ஒரு மாணவன் ஐந்தாம் நிலையில் படிக்கிறான். ஆறாம் நிலைக்கு செல்ல வேண்டும். அந்த நிலை மாற்றத்திற்கு இரண்டு காரணம், ஒன்று அவனின் உழைப்பு, மற்றொன்று அவனுடன் படிக்கும் மாணவர்களின் உழைப்பு. புரிகிறதா??"

"புரிகிறது. மற்ற மாணவர்களை விட நன்றாக படித்து இருந்தால், இவன் முதலிடம், இல்லையென்றால் கடைசி இடம். ஆனால் நீ அந்த இரண்டு கேள்விக்கு பதில் சொல்லவில்லையே??"

"இதை புரிந்து கொண்டால், நீயே பதில் சொல்லலாம். பூமிக்கு நீர், காற்று வர காரணம் அதை சுற்றி உள்ள ஒன்பது கோள்கள், மற்றும், சூரியன். கண்சிமிட்டும் நேரத்தில் இந்த மாற்றம் ஏற்படவில்லையே. இந்த மாற்றம் நடக்க பல கோடி வருடங்கள் ஆனது. கோள்கள் வேறு தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தால் வேறு ஏதாவது நடந்து இருக்கலாம்."

"இரண்டாவது கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன். என் வாழ்க்கை என் கையில் மட்டும் இல்லை. இந்த பிரபஞ்சத்தில் உள்ள மற்றவை கைகளிலும் உள்ளது. செல்வ் ஷேவிங் செய்யும் போது என் கையில் இருக்கும் என் உயிர் (அ) வாழ்க்கை, பார்பர் ஷேவ் செய்யும்போது அவன் கையில் உள்ளது. ஆகையால், பயம் கொள்ள தேவையில்லை. அந்த மாணவன் போல் என் கடமையை சரியாக செய்தால் போதும் என்கிறாய்."

"சரியாக சொன்னாய். என் வாதத்தை ஏற்று கொள்கிறாயா??"

"ஏற்று கொள்கிறேன். ஆனால் இரண்டு கேள்விகள். ஒன்று, இந்த கலவையின் ரேஷியோ என்ன?? அதாவது, எனது வாழ்வில், எனது தாக்கத்திற்கு எவ்வளவு பங்கு? பிரபஞ்சத்தின் தாக்கத்திற்கு எவ்வளவு பங்கு? மற்றொன்று, பிரபஞ்சத்தை உருவாக்கியது யார்??"

"ம்ம்ம்.... இப்பொழுது மாட்டிகொண்டேன். இரண்டிற்கும் ஒரே பதில்தான். அந்த கலவையின் ரேஷியோ என்பது விதி (அ) கோட்பாடு. அந்த கோட்பாடை உருவாக்கியவன் தான் பிரபஞ்சத்தை படைத்தவன். இப்படி கூட சொல்லலாம். அந்த கோட்பாடின் மூலம் இந்த பிரபஞ்சத்தை உருவாக்கி இருக்கலாம். மொழியை படைத்தவன் யார் என்று கேட்டால், நான் என்ன பதில் சொல்வது??"

"கேள்விக்கு எதிர் கேள்வி பதிலாகாது. நான் பதில் சொல்லட்டா??"

"ம்ம்ம்... சொல்லு பார்க்கலாம்."

"நான் அதை கடவுள் என்கிறேன். உன்னிடம் இரண்டு அஷம்ப்ஷன்ஷ் இருக்கு, அதை கடவுள் என்கிறேன். உனது உதாரணத்தையே திரும்ப சொல்கிறேன். மாணவன் படித்து, பரீட்சை எழுதும் வரை அது அவனது செயல். அவனது படிப்புக்கு ஏற்ற மதிப்பெண் கொடுப்பது கடவுளின் செயல். என்னால் புரிந்து கொள்ள முடியாத ஒன்றை கடவுள் என்று நீ சொன்னாய். உன்னால் கண்டு பிடிக்க முடியாததை நான் 'கடவுள்' என்கிறேன். வருத்தமா??"

"இல்லை. ஏற்றுகொள்கிறேன்."

"ஆக, நாத்திகனாகிய நீ, பிரபஞ்சத்தில் உள்ள சக்தியின் தொடர்ச்சி நீ என உணர்ந்தால், உனது செயல், கடவுள் செயலின் ஒரு பகுதி என உணர்வாய்."

"விளங்கவில்லை."

"'நான்' என்ற அகங்காரத்தை (அ) எனது செயலின் தாக்கத்தை, ஒழித்து பார்த்தால் மிஞ்சி இருப்பது கடவுளின் செயல். அது தான் ஆத்திகம். புரிகிறதா??"

"ம்ம்ம்ம்ம்....."

"உனது செயலை கடவுளுக்கு அர்பணித்து விட்டால், நாத்திகனாகிய நீ, ஆத்திகனாய் ஆவாய். அது மட்டுமல்ல, அது நல்ல செயல் என்றால் கடவுள் ஆவாய் !!!"

முன் சொன்னது போல், இதற்கு இப்போதைக்கு முற்றுப்புள்ளி வைத்து உள்ளேன்.

Friday, October 19, 2007

ஓர் இரவு ஆசை.

மெரினா கடற்கரையில்,
என் காதலியின் மடியாம் கடற்மண்ணில் தலைசாய்த்து படுத்து,
அவளின் சிணுங்கல் சத்தமாம், அலைச்சத்தம் கேட்டு ரசித்து,
அவளின் பால்முகமாம், கரைபடிந்த நிலவின் முகம் பார்த்து,
அவளின் மூக்குத்தியின் மினுமினுப்பாம், நட்சத்திரத்தின் கண்ணடிப்பு கண்டு,
அவளின் வாசமாம், மீன் - கவிச்சை வாடையை நுகர்ந்து,
என்னை மறந்து கடல் மைந்தனாகும் வேண்டும் ஓர் இரவு மட்டும்........

Tuesday, October 2, 2007

என் காதலியின் மண நாள்.

என் பெயர் மதன். நான் தான் இந்த கதையின் நாயகன். எனது வாழ்வின் இரண்டு நாள் நடந்த சம்பவங்களை டைரியில் எழுதி உள்ளேன். அதைத்தான் படிக்க போகிறீர்கள்.

April 1, 2006.

எனக்கு டைரி எழுதி பழக்கம் இல்லை. இன்று எனது வாழ்வின் இறுதி இரவு. இதை எனது மரண வாக்குமூலமாக ஏற்றுக்கொள்ளலாம். எனது தற்கொலையின் காரணம் நாளை எனது காதலியின் திருமண நாள். காதல் என்ற பைத்தியத்தால் இறந்த, இறக்க போகின்ற மிகப்பலரில் நானும் ஒருவன். அவள் மற்றவனுக்கு சொந்தமாகும் போது, எனது உயிர் எனக்கு சொந்மாக இருக்காது. இன்று முழுவதும் எனது அறையில் அழுது கண் வீங்கியிருந்தது. சாயந்திரம் லேசாக பசித்தது. சாப்பிட போகலாமென நினைத்து எழுந்தேன். முகத்தை கழுவும்போது தாடி அதிகமாக வளர்ந்து இருப்பதை உணர்ந்தேன். கதவை பூட்டிவிட்டு, வெளியே கிளம்பினேன். பார்பர் சாப் சென்று, தாடியை எடுத்தவுடன் அழகாய் தெரிந்தேன். பிடித்த உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டேன். மருந்து கடைக்கு சென்று ஒரு சிரிஞ்சும், டையாபடிஷ்குரிய மருந்தும் வாங்கி கொண்டேன். காலை 7 மணிக்கு எழுந்ததும் காற்றடைத்த சிர்ஞ்சு மூலம் என்னை நானே மாய்த்து கொள்வேன்.

போன ஜூன் மாதம்தான் ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் டெஷ்டிங் கோர்ஷ் படிக்க சென்ற இடத்தில் ராதாவை சந்தித்தேன். முதல் பார்வையில் அழகாக தெரியவில்லை. பலமுறை அவள் கண்களை பார்த்தபொழுது என்னில் ஏதோ இராசயன மாற்றம் நிகழ்வதை உணர்ந்தேன். கொஞ்ச நாள் கழித்து அவளை தவிர வேறு யாரும் அழகாய் தெரியவில்லை. காதலை சொல்ல துடித்தேன். சரியான சந்தர்ப்பம் கிடைத்த நேரத்தில், "நீ இல்லையென்றால், ராஜா போல் வாழ்வேன். நீ என்னுடன் இருந்தால் சக்கரவர்த்தி போல் வாழ்வேன்." என்று ஏதோ உளறினேன். அவள் முழித்தாள். "உங்க அம்மா, அப்பா பார்த்து கொண்டதை விட நல்ல கணவனாக நல்லபடியாக பார்த்து கொள்வேன்" என்று தட்டுதடுமாறி சொல்லி முடித்தேன். இப்பொழுது புரிந்தவளாக, "முதலில் வேலையில் சேர். அப்புறம் பார்க்கலாம்" என்று சிரித்து சொல்லிவிட்டு சென்று விட்டாள்.

அதன்பின்னர் மிக கஷ்டப்பட்டு படித்து ஒரு வேலையை வாங்கி விட்டேன். ஆனால் கிடைத்தது என்னவோ பெங்களூரில். பிறந்து வளர்ந்த சென்னையை விட்டு பிரிய மனசில்லையென்றாலும் அவளுக்காக செல்ல முடிவு செய்தேன். அவளிடம் சென்று "நீ இல்லாமல் பல் குத்தும் துரும்பாய் இருந்தேன். நீ வந்ததால் பாறை உடைக்கும் இரும்பாய் மாறினேன். " என்று ஒரு கவிதையை சொல்லிவிட்டு வேலை கிடைத்ததை பற்றி சொன்னேன். "ரொம்ப சந்தோஷம். வேலையில் கொஞ்சம் செட்டில் ஆனவுடன் எங்கள் வீட்டில் வந்து பேசு." என்று சொல்லி சென்றாள்.

மூன்று மாதங்கள் பேசினோம். இனிப்பாய் காதல் வளர்ந்தது. டிசம்பர் இறுதியில் ஒரு நாள் அழுது கொண்டே பேசினாள். "எங்கள் வீட்டில் நம் காதல் விஷயம் தெரிந்து விட்டது. இனி என் செல்லுக்கு பேசாதீர்கள். என் பிரெண்ட், கல்யாணி நம்பர் தருகிறேன். அந்த நம்பரில் இருந்து மிஷ்டு கால் வந்தால் மட்டும் பேசுங்கள்." என்று கூறி ஒரு நம்பர் தந்தாள். அதன்பின்னர் நான் அவளிடம் பேசவில்லை. வேலைப்பளு காரணமாக மறந்து விட்டேன். என் பிறந்த நாள் ஜனவரி ஒன்றாம் தேதி அவளுடன் பேச நினைத்தேன். அவளுக்கு போன் செய்தேன். போனை ஆப் செய்து வைத்து இருந்தாள். அவள் பிரெண்டுக்கு போன் செய்தேன். எடுத்தது கல்யாணியின் அம்மா. அவர்கள் சொன்ன வார்த்தை கேட்டு இடி மெதுவாய் இதயத்தில் இறங்கியது. "கல்யாணி, ராதா நிச்சயர்தாத்திற்கு போய் இருக்கிறாள்." பின்னர் கல்யாணி மூலம் ராதாவின் திருமண நாளை அறிந்து கொண்டேன்.

மூன்று மாதங்கள் அழுது, வலித்து, புலம்பி, தவறாய் யோசித்து, ஓடின. வேலையை விட்டும் விலகி விட்டேன். தெளிவாய் எடுத்த முடிவுதான் இந்த தற்கொலை. எனது தற்கொலைக்கு காரணம் எனது உயிருள்ள காதல்.

April, 2, 2006.

அலாரம் அடித்து எழுந்தபோது மணி 6. நேற்று இரவு எடுத்த முடிவு ஞாபகம் வந்தது. பிரஷ், சிரிஞ்சு, டவலுடன் பாத்ரூம் நுழைந்தேன். காலை கடன் முடித்து முகம் கழுவும்போது உணர்ந்தேன். கன்னத்தில் மெலிதாக முடி முளைத்து இருந்தது. இதயத்தில் விழுந்த இடி இப்பொழுது மூளையில் விழுந்தது. அடியோடு அறுத்த பின்னர் முளைக்கும் இந்த முடிக்கே இவ்வளவு வீராப்பு இருக்கும்போது, பத்து மாதம் பழகிய அவளை இழந்த பின்னர் வாழும் வீராப்பு எனக்கு இல்லையா??

புதிதாய் பிறந்தது போல் பாத்ரூமில் இருந்து வெளி வந்தேன். வேலை கிடைக்க தூண்டுகோலாய் இருந்த ராதா நான் வாழ்வில் ஜெயிக்க ஏன் காரணமாய் இருக்க கூடாது?? வாழ்வை ஜெயித்து காட்ட வேண்டிய வெறி மனதில் வந்தது. கோயிலுக்கு சென்று அவள் பேரில் ஓர் அர்ச்சனை செய்துவிட்டு வரும் வழியில் ஹிந்து பேப்பர் வாங்கி வேலை தேடும் வேலையில் இறங்கினேன்.

சக்கரவர்த்தியாய் இல்லாவிட்டாலும், ராஜாவாய் வாழ்ந்து காட்டுவேன்.

Friday, September 28, 2007

நட்புத்திருநாள்.

நண்பா !

என்னுள் வளர்ந்து,
என்னை காப்பான்,
என்ற எதிர்பார்ப்பில்,
என்னை வளர்த்தாள் என் அன்னை !

உயிர் போனபின்,
உடலுக்கு கொள்ளி வைக்க,
உலகில் சுதந்திரத்தை பறித்து,
உலவ விட்டார் என் தந்தை !

பகைவர்களை அழிக்க,
பாண்டவர்களை ஒழிக்க, கர்ணனை
பக்கத்தில் வைத்து நட்பு
பாராட்டினான் துரியோதனன் !

எல்லோரிடமும் இருந்த
எதிர்ப்பார்ப்பு சிறிதும் இன்றி,
என்னை ஏற்றுக்கொண்ட நீ,
என் உயிரினும் மேலானவன்... !

பி.கு.
"நம் நட்பைப்பற்றி கவிதை எழுதி இருக்கிறேன்." என்ற சொன்னவுடன், ஈஸ்D போன் போட்டு கேட்ட என் உயிர் நண்பனுக்கு இது சமர்ப்பணம்.

Saturday, September 22, 2007

விக்கல் - சிறு(சுழற்சி)கதை

சுந்தரத்திற்கு விக்கலெடுத்தது. 'மனைவி நினைப்பாளா? மகன் நினைப்பானா?' என்று யோசித்தார். 'மகனுக்குத்தான் கல்லூரியின் முதல் நாளாச்சே, அவன் எப்படி நினைப்பான்? அவள் தான் வீட்டில் இருந்து கொண்டு நான் சாப்பிட்டேனா, இல்லையா என்று நினைத்து கொண்டு இருப்பாள்.'

சுந்தரத்தின் மனைவிக்கு விக்கலெடுத்தது. 'கணவனா? மகனா?' குழம்பினார். 'அவருக்குத்தான் அலுவலகம் சென்று விட்டால் வேலைதான் முதல் மனைவி. என் ஞாபகம் எப்படி இருக்கும்? சேகர்தான் நினைத்து இருப்பான். புது இடமல்லவா??'

சேகருக்கு விக்கலெடுத்தது. 'அம்மா, அப்பாவிற்கு என்னை நினைத்து பார்க்க எங்க நேரம் இருக்க போகுது?' என்று நினைத்தவாறே பெண்கள் பக்கம் திரும்பினான். அந்த நொடி வரை அந்த பக்கம் பார்த்து கொண்டிருந்த ஒருத்தி சடாரென்று திரும்பினாள். 'அவள் இன்று காலையில் நான் பைக்கில் வரும்போது பார்த்த தேஜா ஆச்சே!!! அவளா நினைத்து இருப்பாள்??'

தேஜாவிற்கு விக்கலெடுத்தது. 'ஆஹா!!! டெலிபதியில் நான் அனுப்பிய செய்தி ஆகாஷிற்கு கிடைத்து விட்டதா? அழகாய் இருக்கிறான். அழகாய் பைக் ஓட்டுகிறான். அவனை பார்க்கும்போது அவன் பக்கத்தில் இருக்கும் சேகர்தான் அடிக்கடி கெடுக்கிறான். ஆகாஷ், என்னை ஜெயித்து விட்டாய்.'

ஆகாஷிற்கு விக்கலெடுத்தது. 'யாராக இருக்கும்? சுனாமியில் என் அம்மா, அப்பா இறந்து போன பின்னரும், என்னை தன் பிள்ளையாக நினைத்து வளர்க்கும் சுந்தர் சார்தான் நினைப்பார். அவர் பையன், ஆகாஷால் ஊனத்தின் காரணமாக பைக் ஓட்ட முடியாததால் என்னை பைக் ஓட்ட சொல்லி அனுப்பி வைத்துள்ளார். அதனால், நான் நல்லபடியாக கூட்டி கொண்டு வந்து இருப்பேனா, இல்லையா என்று நினைத்து கொண்டு இருப்பார். சுந்தரம் சார், உங்கள் பையனை உங்களை விட நன்றாக பார்த்து கொள்வேன்...'
(கதையை திரும்ப முதலில் இருந்து படிக்கவும்.)

பின்குறிப்பு:
இந்த கதைக்கு முடிவு கிடையாது. சுழன்று கொண்டே இருக்கும். அடிக்க நினைப்பவர்கள் மட்டும் பின்னூட்டமிடவும்.

Thursday, September 13, 2007

இறைவன் தந்த வரம்.

"வரம் ஒன்று தருகிறேன்...
கேள்" என்றான் இறைவன்.
கிள்ளி பார்த்தேன். வலித்தது.
நிகழ் காலம் தான்.
ஆழமாய் யோசிக்க ஆரம்பித்தேன்.

அம்புலி வரும் என்று
ஏமாந்து அமுதம் உண்ட,
வலிக்கா விட்டாலும்
அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிய,
குழந்தைப்பருவத்தை கேட்கவா?

ஏன்? எதற்கு? என்றுணராமல்,
பள்ளி ஆசிரியர்களை தெலுங்குப்பட
வில்லன்கள் போல பாவித்து,
படிப்பதை சுமையாக கருதிய
பள்ளிப்பருவத்தை கேட்கவா?

இனிமையில் இனிமையாக இனித்த,
இதயம் மறவா, எல்லோரும்
சென்று வர நினைக்கும்,
நட்பை உயிராக சுவாசித்த
கல்லூரி பருவத்தை கேட்கவா?

காதலியின் முதல் பார்வை,
காதலியின் முதல் ஷ்பரிஷம்,
முதல் முத்தம் கொடுக்க
உதடுகள் தடுமாறிய, காதலை
பருகிய நாட்களை கேட்கவா?

காதல் மனைவியுடன் இருந்த
முதல் சில மாதங்கள், உயிருக்குள்
உயிர் வளர்ந்த பல மாதங்கள்,
பிஞ்சு விரலால் கட்டுப்பட்ட
வாலிப நாட்களை கேட்கவா?

ஆயிரம் பேர் வேலை பார்க்கும்,
வருடம் ஆயிரம் கோடி
லாபம் மட்டுமே தரும், எனது
கனவில் மிதக்கும் எனது
கம்பெனியை தர கேட்கவா?

தீர்க்கமாய் யோசித்து, தெளிவாய்
முடிவெடுப்பதாக நினைத்து கேட்டேன்,
"இன்றைய பொழுதில், இந்த
நேரத்தை, இந்த நொடியை முழுதாய்
அனுபவிக்கும் மனம் வேண்டும்."

அழகாய், அழுத்தமாய், அளவாய்
புன்னகைத்தார். "அப்படியென்றால், ஆப்பிள்
சாப்பிட்டிருக்க கூடாது." நெற்றி சுருங்கி
விரிவதற்குள் மறைந்தார். 'நான்'
அழிந்து 'அது'வாகியிருந்தேன்.

பின் குறிப்பு:-

"உலகில் உள்ள உயிரினங்களில், மனிதனுக்கு மட்டுமே எதிர்காலம், இறந்த காலம் என்று உண்டு" என்று படித்ததை வைத்து எழுதிய கவிதை இது. இறந்த காலத்து வருத்தமும், வருங்காலத்து பயமும் இல்லையென்றால் மனிதன் சந்தோஷமாக இருப்பான் என்பது நம்பிக்கை.

Saturday, September 8, 2007

அம்முவாகிய நான்.. - திரைக்கண்ணோட்டம்.

"என்னய்யா படம் இது, மெதுவான திரைக்கதை. விரல் விட்டு எண்ணுகிற அளவுக்கு மிக குறைந்த கதாபாத்திரங்கள். இரண்டே இரண்டு வீடு. மாத்தி மாத்தி அதைத்தான் படத்தில் பார்க்கிறோம். பார்த்து பார்த்து அழுத்துப்போன பார்த்திபனுக்கு அதே எழுத்தாளன் கதாபாத்திரம்." என்று அழுப்பு ஊட்டுகிற பல விஷயங்கள் படத்தில் இருந்தாலும் இறுதி வரை இருக்கையில் அமர வைக்கும் படம்.

படத்தில் புதிய விஷயங்கள் பல இருக்கின்றன. குழந்தை பருவத்தில் இருந்து, விபச்சார விடுதியில் வளரும் கதாநாயகி. மனைவி, குடும்பம், தாம்பத்தியம் என்று வார்த்தைகளின் பொருளை உணர்வுபூர்வமாக உணராத கதாநாயகி தமிழ் திரையுலகத்திற்கு புதுசு. கதாநாயகனை தவிர மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் பஞ்ச் டயலாக் பேசுகின்றன. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பாதிப்பும் படம் பார்ப்பவர்களின் மனதில் பதிய வைப்பது டைரக்டரின் திறமை.

விபச்சாரத்திற்கென்றே வளர்க்கப்படும் ஒரு பெண்,எழுத்தாளன் ஒருவனை திருமணம் செய்து கொண்டு குடும்பம், கலாச்சாரத்தை உணர்வதே கதை. கதா நாயகி தனது பாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார். முதல் பாதியில் கவரும் அழகுடன் இருப்பதும், பின்பாதியில் குடும்பப் பெண்ணுக்கே உரிய அழகுடன் மிளிர்கிறார். முதலில் கணவரை 'வா... போ' என்று அழைத்து பின்னர், போக போக, 'வாங்க.. போங்க..' என்று கூறுவது அழகு. பழைய கஸ்டமர், அபிஷேக், வாழ்த்தி சென்ற பிறகு, தாம்பத்தியத்தை பற்றி உணர்ந்து கணவனை அழைப்பது மெல்லிய கவிதை.

வளர்த்த பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி விட்டு, அவளுக்கு "நல்ல அம்மாவாக இருந்தேன்." என்று கூறுவதும், அவார்ட் கொடுக்கும் அதாரிட்டி ஒருவர் கையில் மட்டும் இருப்பதும், போன்ற இடைச்சறுகள்களை தவிர்த்து இருந்தால் அம்மு இன்னும் அழகாய் இருந்து இருப்பாள்.

பல இயக்குனர்கள் எடுக்க பயப்படும் சப்ஜெக்டை மிக தைரியமாக எடுத்து, அதை எல்லை மீறாமல் அழகாய் திரையில் உலவ விட்ட இயக்குனருக்கு பெரிய சபாஷ் !!!

Tuesday, September 4, 2007

ஆசிரியர் தின வாழ்த்துக்கள் !!!

இன்று ஆசிரியர் தினம். எனக்கு பள்ளியில், கல்லூரியில் பாடம் எடுத்த ஆசிரியர்கள் பலர். சிறு சிறு விஷயங்களை கற்று கொடுத்த நண்பர்கள், தோழிகள் கூட என் ஆசிரியர்களே. அவர்கள் அனைவருக்கும் எனது ஆசிரியர் தின வாழ்த்துக்கள். இவர்கள் பேரை எல்லாம் சொல்லி வாழ்த்து சொல்ல ஆரம்பித்தால் விடிந்து விடும். எனவே எனக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருந்த இருவரை பற்றி மட்டும் இப்பதிவில் எழுத போகிறேன்.

முதலாமவர் திரு.வி.ராமநாதன். எங்கள் ஹாஷ்டல் வார்டன் இவர். கல்லூரியில் பேராசிரியர் இவர். மிகவும் அமைதியானவர், ஆனால் அழுத்தமானவர். தலையாட்ட வேண்டிய இடத்தில் மெதுவாக தலை ஆட்டிவிட்டு, 'முடியாது' சொல்ல வேண்டிய திடமாக முடியாது என்பார். யாராவது யாரைப்பற்றி குறை சொன்னால் எதுவும் சொல்லாமல் அமைதியாக கேட்டுக்கோண்டே இருப்பார். நடுவில் எதுவும் சொல்ல மாட்டார். எல்லாம் கேட்டு முடித்தவுடன், "பார்க்கலாம்" என்று சொல்லி அனுப்பி விடுவார்.

இவர் மிகவும் எளிமையானவர். நான் இவரிடம் கேட்ட முதல் கேள்வி, "இங்க வார்டன் யார்?" இவர்தான் என் பெயரில் பதினெட்டாயிரம் ரூபாய்க்கு முதன்முதலில் செக் போட்டு கொடுத்தவர். இறுதி ஒரு வருடம் மட்டுமே இவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. கொட்டேஷன் வாங்குவது எப்படி,அமைதியாய், அதிகாரமாய் பேசுவது எப்படி போன்ற விஷயங்களை இவரிடம் கற்றுக்கொண்டேன். இவர் என்ன பாடம் எடுத்தார் என்பது சத்தியமாக ஞாபகம் இல்லை.

பின்னாளில் நான் மேனஜரானால், என் மேல் இவரின் பாதிப்பு கண்டிப்பாக இருக்கும்.

அடுத்தவர் திரு.சுப்புராஜ் அவர்கள். "ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்?" என்ற எனது இலக்கணத்துக்கு சிறிதும் மாறாதவர். ரஜினியின் வசனம் 'அதிருதுல்ல...' வசனத்துக்கு சரியான ஆள் இவர்தான். இவரை கண்டாலே எங்க டிபார்மண்டில் உள்ள அனைவரும் மிரள்வார்கள். அதிகம் பேசுபவர், ஆனால் ஆழ்ந்த அர்த்தத்துடன் பேசுவார். மாணவர்களுக்கு ஒழுக்கத்தை வாயால் சொல்லி புரிய வைக்காமல், நடைத்தையில் புரிய வைத்தவர். ஒரு கொள்கை இருந்தால் அதை யாருக்காகவும் விட்டு கொடுக்க மாட்டார். கண் பார்த்து பேசினால் எவரையும் அடக்கலாம் என்பதை இவரை பார்த்த பின்னரே உணர்ந்தேன். எனக்கு தெரிந்து மாணவர்கள் எல்லோரும் நிஜமாக பயந்தது இவருக்கு மட்டுமே.

ஒரு முறை இவரது வகுப்பில், என் நண்பன் ஒரு பெண்ணை பார்த்து கொண்டே இருந்தான். அவர், அவனுக்கு மட்டுமே புரியும்படி அவனை அப்பொழுதே மிரட்டினார். அவன் செய்த தவறு கூட மற்ற யாருக்கும் புரியாதபடி பேசினார். இவரிடம் எனக்கு பிடித்த மிக முக்கியமான பழக்கம் - 'பெண்களுக்கு தனியாக சலுகை தர மாட்டார்'

பின்னாளில் நான் ஆசிரியராகும் வாய்ப்பு கிடைக்குமானால், அவரின் பாதிப்பு என்னிடம் இல்லாமல் இருக்காது.

இரு பிள்ளைகள் இருந்தாலே பெற்றொர்களால் சரிவர கவனிக்க இயலாது. ஐம்பது அல்லது அறுபது பிள்ளைகளை வைத்து கொண்டு திண்டாடும் ஆசிரியர்கள், கடவுளுக்கு மேல்தான்.....

Saturday, September 1, 2007

ஒரு பேய்க்கதை

அவன் அந்த அறையில் நடந்து கொண்டிருந்தான். அந்த அறையில் அவன் மட்டும் இருந்தான். ஒளி குறைவாக இருந்தது. அங்கிருந்த கட்டிலில் ஒரு தலையணை மட்டும் இருந்தது. அங்கிருந்த கடிகாரம் சரியாக 12 முறை அடித்தது. மேலிருந்த பேன் ஓட வில்லை, இருந்தும் அவனுக்கு வேர்க்கவில்லை. பேய்க்கதை எழுத வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அவனிடம் மேலோங்கியது. தரையில் ஒரு படம் வரையப்பட்டிருந்தது. அருகில் வெறுமையான மருந்துப்புட்டி மட்டும் இருந்தது. அறையை கழுவி ஒரு வாரம் இருக்கலாம். திடீரென்று அவன் முகம் பிரகாசமானது. அங்கிருந்த மேசையில் உட்கார்ந்து எழுத ஆரம்பித்தான். வாரம் ஏழு லட்சம் பிரதி வெளியாகும் ஒரு வாரப்பத்திரிக்கை அவன் அருகே காற்றில் ஆடியது. காற்று அந்த பத்திரிக்கையின் ஒரு பக்கத்தை மட்டும் படிக்க தன்னை தானே நிறுத்தி கொண்டது. அந்த பக்கத்தில் ஒரு புத்தகத்தின் விமர்சனம் இருந்தது, "எழுத்தாளர் ஜீவ ராகவன் பேய்க்கதை எழுதுவதை நிறுத்திவிட்டு பழையபடி ஆன்மிகக்கதை எழுதலாம். " அவனது கண்கள் எதேச்சையாக அந்த பக்கத்தை பார்த்து சிவந்தது. அந்த பத்திரிக்கையை அறையின் மூலையில் எறிந்தான். தான் எழுதவதை தொடர்ந்தான். சரியாக அவன் எழுத எடுத்துக்கொண்ட நேரம் 23 மணி நேரம், 56 நிமிடங்கள், 35 விநாடிகள். முடித்த பொழுது அவனது உடலில் எல்லா பாகங்களும் சந்தோஷத்தில் திளைத்தன. பெருமூச்சு விட்டான்.

அவன் தூக்கி எறிந்த, போன வார பத்திரிக்கையின் கீழே இந்த வார பத்திரிக்கை இருந்தது. அதன் அட்டைப்படத்தில் ஒரு செய்தி வந்து இருந்தது. "எழுத்தாளர் ஜீவராகவன் தற்கொலை."

இரண்டு நாள் கழித்து அந்த வாரப்பத்திரிக்கையின் அலுவலகத்தில்,

"என்னையா??? ஏன் இப்படி நடுங்குற???"
"சார், ஒரு வாரத்துக்கு முன்னால் இறந்து போன ஜீவராகவன் அட்ரஸிலிருந்து ஒரு பேய்க்கதை வந்து இருக்கு சார். ஷ்டாம்ப் ஒட்டலை. இரண்டு நாள் முன்னால் அனுப்ப பட்டிருக்கு."
"யோவ், புதுசா எழுதுபவன் தான் கதை ப்ரசுரிக்கப்படணும்னு அந்த அட்ரஷ் போட்டு அனுப்பி இருப்பான்."
"சார், அவர் கையெழுத்து இருக்கு...."
"அப்படியா!! சரி, விடு. அவர் கடைசியா அனுப்பி இருப்பாரு. படித்து பார். நல்லா இருந்தால், அவர் கடைசி கதை என்று பிரசுரம் பண்ணிடலாம்."

அந்த நேரம், அந்த அறையில் இருந்து ஒரு ஆனந்த கூச்சல், யார் காதிலும் கேட்காமல் ஒலித்தது. சற்று நேரத்தில் அந்த அறையில் இருந்து ஒரு வௌவால் சிறகடித்து பறந்தது.

Monday, August 27, 2007

எனது விழிகள் !!

அநாயசமான வளைவை அழகாய் ரசித்து
அளந்து பார்த்தன எனது விழிகள் !!
தாய்மைக்கு அடையாளமாய் இறை தந்த
தனத்தை தரிசித்தன எனது விழிகள் !!
கண் காண வேண்டிய கண்களை தவிர
கண்டதையும் கண்டன எனது விழிகள் !!
பண்ணிய பாவத்திற்காக கடைசியாக மின்னல்-ஒளி
பார்த்து மடிந்தன எனது விழிகள் !!

Thursday, August 9, 2007

என்னை போல் ஒருவன்.

அவனை கண்டேன். என்னை போல் உள்ளான். என் கண் கருநீலம், அவனுக்கு அடர் கறுப்பு. மூக்கு கொஞ்சம் நீளம். மற்றபடி மீசை சேர்த்து, கிர்தா வைத்தால், என் தாயால் கூட இருவரில் நான் யார் என்று கண்டுபிடிக்க முடியாது.

அப்பா தொழிலேயே செய்யும் அடி முட்டாள் ஆனாலும், அதை விருத்தி செய்யும் நோக்குடன் காங்காங் வந்த இடத்தில் இப்படி ஒரு அதிர்ச்சியா?? . தமிழ் முகங்களேயே காண முடியாத இந்த ஊரில் என் போல் ஒருவனா??

அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் அவனே என்னிடம் வந்து பேசினான். காபி சாப் சென்றோம். காபி அருந்தும்போதே ஒருவரை பற்றி ஒருவர் விசாரித்து கொண்டோம். அவனுக்கும் பூர்விகம் தமிழ் நாடுதானாம். என்னை விட ஒரு பத்து மாதம் மூத்தவன். அப்படியென்றால், "நான் கருவில் இருக்கும்போது ஆசையை அடக்க முடியாதவரா என் தந்தை?" என்ற கேள்வி தோன்றியது. "என் குடும்பத்தில் நான் தானே முதன்முதலில் வெளிநாடு வந்தது" என்ற பதில் அந்த கேள்விக்கு பதிலாக அமைந்தது.

வேலை இருக்கு என்று சொல்லி கிளம்பியவனை நிறுத்தி கேட்டேன் "ஏன்?" என்று.

அவன் சொன்ன பதில் கேட்டு மானசீகமாக தந்தையிடம் மன்னிப்பு கேட்டேன். ஊருக்கு சென்றவுடன் என் குடும்பத்திடம் இது பற்றி சொல்ல வேண்டும் என்பதற்க்காக அவனுடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.

அவன் சொன்ன பதில் - பிளாஷ்டிக் சர்ஜரி.

Friday, August 3, 2007

கதிரவனிடம் ஒரு கணை.

Kathiravan

முன்னாள் காதலி போல, உன்னிடம் விடை வராது
என்றுணர்ந்தும் வினவுகிறேன் கதிரவா!
காலையில் கனல் கக்கும் உனக்கும், மாலையில்
மனம் வருடும் சந்திரனுக்கும் என்ன உறவு?
பகலில் பழுக்க காய்ச்சிய பூமியை குளிர்விக்க
வந்த பெண்ணிலவின் ஆண் உருவமா நீ?
காத்திருந்து கடுங்கோபங்கொண்டு கண் சிவந்து
கடக்கும் காதலன் கதிரவனா நீ?
நள்ளிரவில் நட்சத்திரங்களுடன் நாடு கடந்த
தங்கையை தேடும் அண்ணன் ஆதவனா நீ?
மாதத்தில் முதல் பாதி பூரித்து மறுபாதி மெலியும்,
வெண்ணிலவின் கணவன் கதிரவனா நீ?

Friday, July 13, 2007

ரசித்த திரைப்பாடல் வரிகள்

சமீபத்தில் நான் ரசித்த சில பாடல் வரிகளை பற்றி இந்த பதிவில் எழுத முடிவு செய்துள்ளேன். கவிஞர்கள் ஒன்று நினைத்து பாடல் எழுதி இருக்கலாம். நான் அதை வேறு மாதிரி உருவகப்படுத்தி இருக்கலாம். பதிவை படித்து என் ரசனையை பற்றி பின்னூட்டமிடுங்கள்.

நட்பு:

படம் - சென்னை - 600 028.
பாடல் - யாரோ???

ஒருவர் மீது ஒருவர் இங்கு காதல் கொண்டு வாழ்கின்றோம்...
காதல் என்றால் கொச்சையாக அர்த்தம் செய்ய கூடாது...
நண்பா வா!


என்னை பொறுத்த வரை, காமம் இல்லாத காதல் நட்பு ஆகும். காமம் உள்ள நட்பே காதல் ஆகும். எதையும் எதிர்பாராமல் வரும் நட்பு காதலை விட சிறந்ததே....

காதல்:

படம் - சத்தம் போடாதே.
பாடல் - ஓ... இந்த காதல் என்ற பூதம்


உணவுகள் பிடிக்கலை. கனவுகள் பிடிக்குது.
காதலின் போதைக்கு அளவு இல்லை.
நண்பர்கள் பிடிக்கலை. நாய்க்குட்டி பிடிக்குது.
காதலின் கிறுக்குக்கு அளவு இல்லை.

காதல் இல்லாமல் தூக்கம் இல்லை என்றேனே....
காதல் இருந்தாலும் தூக்கம் இல்லை என்றானே ...

நஞ்சென்றால் ஒரு முறை கொல்லுமடி,
நினைவுகளோ பல முறை கொல்லுதடி....

ஒருவனுக்கு காதல் வந்த பின்னர் உலகின் மிக சிறந்த அழகானவனாக தெரிவான். அந்த காதல் முறிந்தால் உலகிலேயே மிக அசிங்கமானவனாக தோற்றம் அளிப்பான். காதலுக்கு அந்த சக்தி உண்டு. காதல் தோல்வி தரும் வலியை விட, காதலியின் நினைவுகள் தரும் வலி அதிகமானது என்று சொல்லியதால் மிகவும் ரசித்தேன்.

ஆன்மிகம்:

படம்: புதுப்பேட்டை.
பாடல்: ஒரு நாளில் வாழ்க்கை...

உனக்கும் இல்லை.... இது எனக்கும் இல்லை..
படைத்தவனே இங்கு எடுத்து கொள்வான்.
நல்லவன் யார்? அட கெட்டவன் யார்?
கடைசியில் அவனே முடிவு செய்வான்....

1000 தடவை இந்த பாடலை கேட்டு இருப்பேன். கீதையின் கருத்தை வேறு விதத்தில் சொன்ன பாடல். மற்றவன் சொன்னான் என்பதற்காக உன் வாழ்க்கைப்பாதையை மாற்றாதே... உனக்கு சரி என்று பட்டதை செய். ஏனென்றால் கடவுளுக்கு மட்டுமே தெரியும், நீ நல்லவனா, கெட்டவனா என்று.


காமம்:

படம்: பெரியார்.
பாடல்: இடை தடவிக்கொள்ள...


நிலா விழும் வரை,
நீயாய் விடும் வரை,
இவள் உனது அடிமைதானே....

ஆண் சாதியும் பெண் சாதியும்,
இருக்கும் வரை
இருக்கும் எங்கள் இனம் !!!


காம வெறி பிடித்து அலையும் ஆண் இருக்கும் வரை விபச்சார தொழில் ஒழியாது என்பதை மறைமுகமாக சொன்னது போல் தோன்றுகிறது.


தத்துவம்:

படம்: உன்னாலே... உன்னாலே...
பாடல்: ஜூன் போனால்....

மொத்த கூத்துக்கள் யாருக்காக?
மொத்த பூமியும் உன் கூத்துக்காத்தான்....

சிறை இருக்கும் மனங்களை பறவை செய்...


மற்றவன் ஆடுவதை நீ பார்ககாதே... உன் ஆட்டத்தை நீ ஆடு.... இந்த உலகமே திரும்பி பார்க்கும். "வெள்ளத்தனைய மலர் நீட்டம்" என்று சொன்னான் வள்ளுவன். மனதை கட்டுப்படுத்தி, எண்ணங்களை சுருக்கி, உன்னை நீயே அடக்கி வைக்காதே என்று சொல்லி இருப்பாரோ கவிஞர்??

- சகலத்தையும் ரசிக்கும் சாதரண ரசிகன்.

Tuesday, July 10, 2007

நான் சந்தித்த பெண்கள் - கல்லூரிப்பருவம்.

கனவுகள் மட்டுமே நிஜம் என்று நினைக்கும் மனது, மனது நினைப்பதை செய்ய துடிக்கும் உடல், உடலை வளர்த்து கொள்ள, கெடுத்து கொள்ள தேவையான இலவச பணம். இது போதாத கல்லூரி வாழ்வை அனுபவிக்க??

நீ சந்திக்கும் ஒவ்வொரு மனிதரிடமும் கற்று கொள்ள ஏதாவது ஒன்று இருக்கும் - கல்லூரி சேர்ந்தவுடன் நான் இதை உணர்ந்தேன். ஆகையால் ஒவ்வொரு பெண்ணை பற்றி எழுதிய பின்னர் அவர்களிடம் கற்ற பாடத்தையும் சொல்கிறேன்.

தீபம் - பெயருக்கு ஏற்ற மாதிரி கண்ணில் ஒளி கொண்டவள். நான் பிறந்த ஊரில் பிறந்தவள். வீட்டில் மூத்தவள் என்பதால் பொறுப்புணர்ச்சி கொண்டவள். எனக்கு இருக்கும் நண்பர்களில் முதன்முதலில் வீடு வாங்கிய தைரியசாலி & திறமைசாலி.

கேட்க வேண்டிய கேள்வி - புது மனை புகு விழாவை விமர்சையாக கொண்டாடிய நீ, உன் திருமணத்தை மட்டும்.... ஏன்???

கற்ற பாடம் - தலைமைப்பண்பு.

தி வேர்ல்ட் - பெயரே சற்று வித்தியசமான பெயர். எங்களது HOD, ஒருமுறை கூட சரியாக அழைத்தது இல்லை.கடினமாக உழைத்து வெற்றி கிட்டும் வரை போராடும் கஜினி இவள். சில சமயம், இவளை பார்த்தால் என் பாட்டியை சிறு வயதில் பார்த்தது போல் இருக்கும். நான் அளவுக்கு மீறி விளையாடியது இவளிடம்தான். அதன்பிறகு அவளுக்கு என்னை பிடிக்காமல் போய் விட்டது. :-(

கேட்க வேண்டிய கேள்வி: நான் தான் அந்த மின்மடல் அனுப்பினேன் என்று எப்படி கண்டுபிடித்தாய்?

கற்ற பாடம்: வெற்றி கிட்டும் வரை பொறுமையுடன் போராடு.

கவிதை - என்னை மிகவும் கவர்ந்தவள். என் அம்மாவிற்கு அடுத்து நான் அதிகம் சண்டை போட்ட பெண் இவள்தான். எது செய்தாலும் உருப்படியாக செய்வாள். செய்த வேலையை ப்ரசன்ட் செய்வதில் சிறந்தவள். நான் இறுதி வரை நட்பு பாராட்ட விரும்பும் மிக சிலரில் இவளும் ஒருத்தி. அதிகம் காயப்படுத்தியவள். அதிக முறை காயத்துக்கு மருந்து போட்டவள்.

கேட்க வேண்டிய கேள்வி: உதடு வரை ஒரு கேள்வி வந்ததடி... உனைக்கண்டு என் தொண்டை மென்று தின்னதடி...

கற்ற பாடம்: ஆடும் போது ஆடு. வேலை செய்யும்போது வேலை செய். உனது வாழ்வை என்சாய் பண்ணு.

ரவுடி - திமிர் பிடித்தவள். யாரிடமாவது பேசி கொண்டே இருப்பாள். பாரபட்சம் பார்க்காமல் சகஜமாக பழகுவாள். இதனாலே அவளை பல பேருக்கு பிடிக்காது. வீட்டில் மூத்த பெண் என்ற பொறுப்புணர்ச்சி இல்லாமல் போனதால் எனக்கும் இவளை பிடிக்காமல் போய் விட்டது.

கேட்க வேண்டிய கேள்வி:- மிகவும் பிடித்த பாடல் வரிகளை சொல்வேன். "மனம் இங்கே இவனிடம், உடல் அங்கே அவனிடம்.. அப்படியானால் உந்தன் பெயர்தான் என்ன?"

கற்ற பாடம்: சோறு மட்டும் அதிகமாயினும், குறைந்தாலும் கேடு அல்ல. சொற்களும்தான்.

சுபம்: நான் முதலில் கல்லூரியில் பேசிய பெண் இவள்தான். நான் போடுவது கடலை என்று தெரிந்து கடலை போட்டது இவளிடம்தான். ஆள் பார்த்து பேசுவதில் திறமைசாலி. ஆண் எந்த தவறு செய்தாலும் இந்த உலகம் கண்டுகொள்ளாது. அதே தவறை பெண் செய்தால் ஏற்று கொள்ளாது என்பதை இவளை பார்த்த பின்னரே உணர்ந்தேன்.

கேட்க வேண்டிய கேள்வி: ??

கற்ற பாடம்: எல்லோரிடமும் ஒரே மாதிரி பேசாதே. ஆள் பார்த்து பேசு.

பின் குறிப்பு: இதில் நான் குறிப்பிட்டவர்கள் அல்லது அவர்களை தெரிந்தவர்கள், இதை படிக்க நேரிடலாம் என்பதால் நல்ல பிள்ளை போல எழுதி உள்ளேன். :-) அடக்கி வாசித்து உள்ளேன்.

Saturday, June 23, 2007

மிக அருகில் நீ!!!

















கடல் நீர் கூட,
தேனை விட,
இனிமையாக தெரிகிறதே !!!

இந்த உலகம் அனைத்தும்,
என் காலடியில்,
அடிமைப்பட்டு கிடக்கிறதே !!!

இந்த சூரியன் கூட,
வெட்கப்பட்டு கண்
சிவந்து மறைகிறானே !!!

சூரியன் பயந்து போய்,
அவனுக்கு பதிலாக இந்த
நிலாவை அனுப்புகிறானே !!!

நட்சத்திரங்களும் என்னை
முழுமையாக பார்க்க
திராணியற்று மினுமினுக்கின்றன !!!

இவையெல்லாம் ஏன்?
அட அருகில்,
நீ !!!

Sunday, June 17, 2007

என் நண்பன் - நவீன கண்ணன்.

நான் ரவி. என் நண்பன் ராஜா. பொறியற் கல்லூரியின் முதல் வருடத்தில் சந்தித்தேன். அழகானவன் அல்ல. முகத்தில் கவர்ச்சி உள்ளவன். இவனுடன் பேசினால் முதல் ஐந்து நிமிடத்தில் உலகின் மிகப்பெரிய அறிவாளி போல் தோன்றும். அடுத்த ஐந்து நிமிடத்தில் உலகின் மிகப்பெரிய முட்டாள் போல் தோன்றும். பேசும் கலையில் வல்லவன். இருவர் பேரும் ஒரே எழுத்தில் ஆரம்பிப்பதால் இருவரும் ஒரே பேட்ச். முதல் நாள் லேபில் நாங்கள் இருவரும் வெளியே அனுப்பபட்டோம். வெளியே வந்தோம். "சந்தியா கூட நாம கடலை போடக்கூடாது என்பதற்காக அனுப்பிட்டாண்டா..." என்று வெறுப்புடன் கூறினான். மற்றொரு நாள், வெற்றிகரமாக எக்ஷ்பெரிமெண்ட் செய்து முடித்தான். "எப்படி? எனக்கு சொல்லிக்கொடு." என்றாள் சந்தியா. வழிவான் என்று நினைத்தேன். "உன் ப்ரொவசரிடம் போய் கேளு" என்று வெறுப்புடன் கூறினான்.

புரிந்து கொள்ள முடியவில்லை. வெறுப்பான் என்று நினைத்தால் ரசிப்பான். ரசிப்பான் என்று நினைத்தால் கண்டு கொள்ள மாட்டான். கவலை பட தெரிந்தவன் நான். கவலையை ரசிக்க தெரிந்தவன் அவன். இனிக்க இனிக்க பழகினோம். பழக பழக இனித்தான் ராஜா. ஒரு நாள் என்னிடம் சொன்னான், "சந்தியா என்னை காயப்படுத்தறாடா." அவன் கண்ணை பார்த்தேன். கண்ணில் காதல் தெரிந்தது. எலியும் பூனையுமாக இருந்தார்களே? "அவளிடம் சொல்" என்றேன். "வேலை கிடைத்தபின் சொல்கிறேன்". என்று பதில் கூறினான்.

காலம் உருண்டோடியது. கல்லூரியின் இறுதி நாள். வேலை கிடைக்காமல் நான் வருத்தத்தில் இருந்தேன். அவனோ, "வேலை கிடைத்து இருந்தால் என் காதலை அவளிடம் சொல்லி இருப்பேன்." என்று சிரித்து கொண்டு சொன்னான்.

ஒரு வருடத்திற்கு பின்னர் எனக்கு மேற்படிப்புக்கு சீட் கிடைத்தது. அவனுக்கு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. திருவனந்தபுரத்தில் அவனுடைய மூன்று மாத ட்ரெயினிங் முடிந்த பின் சந்தித்தோம். சம்பாதிப்பதால் அவன் கண்ணில் நம்பிக்கை ஜொலித்தது. நடுநடுவே ஆங்கிலம் பேசினான். "சந்தியாவிடம் சொன்னியா?" ஆர்வத்துடன் கேட்டேன். புன்னகைத்தான். காதல் தெரிந்த கண்ணில், இப்பொழுது வலி தெரிந்தது. வேறு பேச ஆரம்பித்தோம்.

ஒரு வருடம் கழித்து சந்தியாவிடமிருந்து மின்மடல் வந்தது. கல்யாண வரவேற்பு அது.சட்டென ராஜாவின் முகம் நினைவுக்கு வந்தது. அவன் மொபைல் எண் தேடி கண்டுபிடித்தேன்.

"ராஜாவா??"
"சொல்லுடா ரவி... "
"உன்னை பார்க்கணும். எங்க இருக்க?"
"நுங்கம்பாக்கத்தில் இருக்கிறேன். முக்கியமான விஷயமா?"
"ம்ம்.. அவசியமா உன்னை பார்க்கணும். சாயந்திரம் பார்க்கலாமா?"
"திருவல்லிக்கேணி வந்துரு.... பை."

அவன் அறையில் அன்று சந்தித்தேன். வருத்தத்துடன் இருந்தான். பழைய உற்சாகம் இல்லை. கண்ணில் வெறுமை இருந்தது.

"சந்தியாவிடமிருந்து வந்த மின்மடல் பார்த்தியா?" என்றேன்.
"இல்லையே. என்ன மின்மடல்?" ஆச்சரியத்துடன் கேட்டான்.
"அவளுடைய திருமண வரவேற்பு"

"ஓ!!! என்று திருமணம்?" அலட்டாமல் கேட்டான். வருந்துவான் என்று நினைத்து ஏமாந்தேன்.
"டிசம்பர் 7."
"வாட்???" அலறினான். நான் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. பயங்கரமாய் சிரித்தான்.
"ஏன்?"

"என் தூரத்து உறவுக்காரப்பெண் ஒருத்தி இருக்கிறாள். தன்யா என்று பெயர். ஆறு மாத பழக்கம். என்னை கவர்ந்தவள். என்னால் ஈர்க்கப்பட்டவள். அவளுக்கு பிடிக்காதவருடன் டிசம்பரில் திருமணமாம். என்னுடன் கூறி வருத்தப்பட்டாள். அதில் சிறு வருத்தத்துடன் இருந்தேன். இப்ப இதை கேட்டவுடன் எனக்கு ரொம்ப சந்தோஷம்"


"மடையனடா நீ??" கோபத்தின் உச்சிக்கு சென்றேன்.
"இருவருக்கும் வெவ்வேறு நாள் திருமணம் என்றால் நான் இரண்டு நாள் வருத்தப்படணும். ஓரே நாள் வருத்தம். அதுக்கு நான் கடவுளுக்கு நன்றி சொல்லணும்."

"உன் காதல் உண்மை காதல் இல்லையா?"
"கூல்டா மச்சான்.... ஜெயித்தால் உண்மைக்காதல். தோற்றால் பொய் காதலா? என்ன லாஜிக்?? கீதையில் கண்ணன் என்ன சொல்லி இருக்கிறார்? 'கடமையை செய். பலனை எதிர்பாராதே.' காதல் செய்வது என் வயதுக்கு விதிக்கப்பட்ட கடமை. ஜெயித்தால் திருமணம். தோற்றால், அடுத்த கடமை. அதாவது அடுத்த காதல்."

"கேவலம்டா இது...."
"இதில் என்னடா கேவலம் இருக்கு? என் கம்பெனியில் இருந்து கிளையன்டிடம் ப்ரொபசல் கொடுப்போம். கிளையண்டுக்கு பிடித்தால் எங்களுக்கு ப்ரொஜக்ட் கிடைக்கும். இல்லையென்றால், அடுத்த கிளையன்ட். அடுத்த ப்ரொபசல் என்று போய்க்கிட்டே இருக்கணும்."

"அதுவும் இதுவும் ஒன்றா??"
"எல்லாம் கிட்டத்தட்ட ஒன்றுதாண்டா... நேற்று கிடைக்காததை நினைத்து வருத்தப்பட கூடாது. நாளை கிடைக்க இருப்பதை நினைத்து சந்தோஷப்படக்கூடாது. இன்றைக்கு இந்த நொடியை ரசித்தால் போதும்."
"மனதில் கிருஷ்ணன் என்று நினைப்பா??"

"நான் பெண்களை காதலிக்கும் வரை கிருஷ்ணன். ஒரு பெண் என்னை காதலித்த பிறகு அவளுக்கு மட்டும் நான் ராமன்." என்று கூறி கண்ணடித்தான்.

"உன் அம்மா உனக்கு நல்ல பெண் பார்ப்பாங்கடா...." என்று வாழ்த்தினேன்.

தற்சமயம் அவன் தாய் பார்த்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் சந்தோஷமாக இருக்கிறான், நவீன கண்ணன்.

Friday, June 15, 2007

துப்பட்டா !!!

கல்லூரியில் படிக்கும்போது எழுதிய மொக்கை கவிதை.

உன் தோளில் அசைந்து ஆடுகிறது காவி நிற துப்பட்டா !!!
அதில் நான் வேண்டுமானால் காறி துப்பட்டா !!!

Monday, June 4, 2007

நான் மிகவும் ரசிக்கும் பாடல்.

அனைவரும் ரசிக்கும்படியான இசை. எல்லோருக்கும் புரியும்படியான கவிதை வரிகள். மெய் மறக்க செய்யும் பாலாவின் குரல்.




இப்பாடலில் நான் ரசிக்கும் வரிகள்.
"கொஞ்சம் நிலவுக்கு நேரம் வைத்து தூக்கம் கொள்க !!!
பாறைக்குள் வேரை போல வெற்றி கொள்க !!!"

Sunday, June 3, 2007

சிகரெட் - சீக்ரெட்.

என் பதிவில் உள்ள குழந்தையின் படத்தை பார்த்து வந்த பின்னூட்டங்களின் பதிலே இந்த பதிவு.



நான் கல்லூரியில் படிக்கும்போது ஒரே ஒரு முறை சிகரெட் பிடித்துள்ளேன். அதன்பிறகு அந்த வாடை கூட எனக்கு பிடிக்கவில்லை. அன்று முதல் இன்று வரை நான் சிகரெட் பிடித்தது கிடையாது. என் நண்பர்களையும் பிடிக்க வேண்டாம் என்று சொல்வேன். அதற்கு மூன்று காரணங்களும் சொல்வேன்.

1. மற்ற கெட்ட பழக்கங்கள், நம்மை மட்டும் பாதிக்கும். இது கூட இருப்பவரையும் பாதிக்கும்.
2. காசை கொடுத்து நம் உடலை நாமே கெடுத்து கொள்வதா? வடுவூர் குமார் சொன்னது போல, சிங்கப்பூரில் சிகரெட் விலை அதிகம். 1 பாக்கெட் சிகரெட் வாங்கும் காசில் இரு வேளை சாப்பிட்டு விடலாம்.
3. ஒரு நாள் ஒரு சிகரெட் குடித்தால், நம் வாழ்நாளில் ஒரு நாள் குறையும்.

ஆகையால் நானும் சிகரெட் பிடிப்பதில்லை, என் நண்பர்களை பிடிக்க அனுமதிப்பதுமில்லை.

இந்த குழந்தை படத்துக்கு வருவோம். இது அழகான குழந்தை. ஒரு கணினி பொறியாளன் சிறு வயதில் எப்படி யோசிப்பான் என்பதை காட்டுவதாக வந்த படம் இது. சிகரெட்டை விட்டுவிட்டு அதன் கை அசைவையும், புருவ அசைவையும், கண் அசைவையும் பார்த்தால் மிகவும் அழகாக இருக்கும். நான் ஒரு கணினி பொறியாளன். சிறுவயதில் இப்படி இருந்து இருக்கலாம் என்ற என் எண்ணத்தினாலே இந்த படம்.

இதைப்பார்த்து யாரும் கெட்டுப்போக மாட்டார்கள் என்பது என் வாதம்.

"திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது." - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சொன்னது
"தானாய் பார்த்து கெடாவிட்டால் தன்னை யாரும் கெடுக்க முடியாது. " - நான் சொல்வது.

சொன்னதில் தவறிருந்தால் பின்னூட்டமிடுங்கள்.

Saturday, June 2, 2007

சிங்கப்பூர் பற்றி...

இந்தியாவில், சில ஊரில் நான் தங்கி இருந்தாலும், முதன்முதலில் நான் வந்த வெளிநாடு என்பதால் இதைப்பற்றி ஒரு பதிவு போடலாம் என்று நினைத்தேன். இங்கு நான் வந்து 6 மாதம்தான் ஆகிறது. ஆகையால் எனக்கு தெரிந்த அளவுக்கு எழுதுகிறேன்.

சிங்கப்பூரில் சீனர்கள், தமிழர்கள், மலாய் மக்கள் என்று பல் இனத்து மக்கள் கலந்து வசிக்கின்றனர். இங்கு தமிழ், சீனம், மலாய், ஆங்கிலம் ஆகியவை முக்கிய மொழிகளாக கருதப்படுகின்றன. பல தமிழர்கள் இங்கு மூன்று தலைமுறையாக இங்கு வசிக்கின்றனர்.

இங்கு இருப்பவர்கள், அனைவருக்கும் வேலை தான் முக்கியம். வீண் பேச்சு எதுவும் கிடையாது. ரயில் நிலையத்தில் யாரும் நடந்து செல்ல மாட்டார்கள். கிட்டதட்ட ஓடுவார்கள். இந்த ஓட்டத்தை இந்தியாவின் மும்பையில் மட்டும் பார்த்து இருக்கிறேன். வயது வித்தியாசம் பார்க்காமல் எல்லோரும் உழைக்கும் நாடு இது.

என்னை மிகவும் கவர்ந்தது இங்கு இருக்கும் ஏகப்பட்ட மரங்களே. இங்கு மரங்கள் பல இருப்பதால் மழை அடிக்கடி பெய்யும். மத்திய ரேகைக்கு கீழே இருப்பதால் இங்கு வெயிலும் அடிக்கும். வெயிலும் அதிகம், மழையும் அதிகம். ஏர்கான் இல்லையென்றால் இங்கு யாரும் உயிர் வாழ இயலாது.

பொழுதுபோக்கு என்று பார்த்தால் 24 மணி நேரமும் ஒலிப்பரப்பாகும் பண்பலை வரிசை ரேடியோ(ஒலி 96.8) உள்ளது. மாலை மட்டும் ஒளிபரப்பாகும் வசந்தம் - சென்ட்ரல் என்ற சேனலும் உள்ளது. மற்றபடி தமிழகத்தில் ஒளிபரப்பாகும் சன் - டிவி மற்றும் விஜய் - டிவியும் ஒளிபரப்படும். என்ன ஒரு குறை என்றால் தமிழகத்தில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு வாரம் சென்று இங்கு ஒளிபரப்பாகும்.

போக்குவரத்து பற்றி சொல்லியே தீர வேண்டும். ஓர் இடத்தில் இருந்து மற்ற இடத்துக்கு செல்வது இங்கு எளிது. Taxi அடிக்கடி கிடைக்கும். பஷ் மற்றும் ரயில் போக்குவரத்தும் உண்டு. அமெரிக்காவில் படித்த என் நண்பன் சொன்னது. Ez-Link கார்ட் என்று ஒன்று உள்ளது. இதில் பணம் போட்டு Top-up பண்ணிக்கலாம். தேவைப்படும்போது பஷ்ஷிலோ, ரயில் நிலையத்திலோ உபயோகப்படுத்திக்கலாம். இந்த முறை அமெரிக்காவில்கூட இல்லை என்று அமெரிக்காவில் படித்த நண்பன் கூறியுள்ளான்.

இங்கு இருக்கும் பெண்களை பற்றி கூறவில்லையென்றால் இந்த பதிவு முழுமை பெறாது. சீன மக்களுடன் சேர்ந்து வாழ்வதால், தமிழ் கலாச்சாரம் கொஞ்சம் மாறியுள்ளது. ஆகையால் தமிழகத்திலிருந்து வரும் ஆண்களுக்கு இங்கு இருக்கும் பெண்களை பிடிக்கும் வாய்ப்பு குறைவு. தமிழகத்தில் கூறப்படும் மொக்கை, அட்டு விகர்கள்தான் அதிகம்.

வேலை பார்ப்போர், படிப்போர், குடும்பத்தோடு வாழ ஒரு அழகான, நிம்மதியான நாடு சிங்கப்பூர் என்று ஐயமில்லாமல் கூறலாம்.

Wednesday, May 23, 2007

ம(ற)றைந்து போன விளையாட்டுக்கள்....

ம(ற)றைந்து போன விளையாட்டுக்கள்....

சமீபத்தில் ஒரு விளம்பரம் பார்த்தேன். அதில் விளையாட வேண்டிய சிறுவர்கள், உள்ளே அமர்ந்து 'Video Game' விளையாடுவார்கள். ஆனால் உள்ளே அமர வேண்டிய தாத்தாக்களோ தெருவில் விளையாடுவார்கள். நமது பாரம்பரிய விளையாடு என்ன ஆனது? அது மறக்க பட்டதா? இதற்கு என்ன காரணம்? யார் காரணம் என்ன? இதனால் ஏற்படும் விளைவுகள்? என்ற என் கேள்வியின் பதிலாக விளைந்ததே இந்த பதிவு (அ) கட்டுரை.

முதலில் 20 வருடத்திற்கு முன் நாம் விளையாடிய விளையாட்டு என்ன, அதன் பயன் என்ன, எப்படி விளையாடுவது என்று பார்ப்போம்.

உள் அரங்கு விளையாட்டு.
1. ஆடுபுலியாட்டம் - ஒரு கட்டம் போடப்படும். மூன்று புலிகள். பதினைந்து ஆடுகள். புலி அனைத்து ஆடுகளையும் கொன்றதா? ஆடு புலிகளை மடக்கியதா? என்பதே விளையாடு. - புத்தி கூர்மை அடையும்.

2. உள்ளூர் சதுரங்கம் - ஒரு சதுரத்திற்குள் குறுக்கும் நெடுக்குமாக நான்கு கோடுகள் போடப்படும். ஆளுக்கு மூன்று காய்கள் கொடுக்கப்படும். மூன்றையும் நேர்கோட்டில் கொண்டு வர வேண்டும். - புத்தி கூர்மை அடையும்.

3. தாயம் - ஆறுக்கு ஆறு, என்று சதுரம் வரைந்து விளையாடும் ஆட்டம் - சூதாட்டம், பயனில்லை.

4. பாம்பு தாயம் - விளக்கம் தேவையில்லை - சூதாட்டம், பயனில்லை.

5. சீட்டு கட்டு - அனைத்து சீட்டுகளும் தலை கீழாக போடப்படும். ஜோடியாக எடுத்தால் வைத்து கொள்ளலாம். யார் அதிக ஜோடி எடுக்கிறாரோ அவருக்கே வெற்றி. - ஞாபக சக்தி வளரும்.

வெளி அரங்கு விளையாட்டு.
1. செதுக்காங்கல் - சிகரெட் அட்டை ஒரு வட்டத்திற்குள் போடப்படும். கல் மூலம் அதை வெளியே கொண்டு வர வேண்டும். - அட்டைகளை எண்ணுவதால் கணிதம் நன்றாக வரும்.

2. செவன் ஷ்டோன் - ஏழு கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்க வேண்டும். பந்தை வைத்து அதை குழைக்க வேண்டும். குழைத்த பின் வரிசையாக அடுக்க வேண்டும். அடுக்குவதற்குள், எதிராளி பந்தால் நம்மை அடித்து விட்டால், அவனுக்கு 1 பாயிண்ட். நாம் அடுக்கிவிட்டால் நமக்கு 1 பாயிண்ட் - குழுவேலை நன்றாக வளரும். ஒடுவதால் உடல் வழுவாகும்.

3. கண்ணாம்மூச்சி - கண்களை கட்டிகொண்டு எதிராளியை தொட வேண்டும். - கண்களை கட்டி கொள்வதால், செவித்திறன் வளரும். உற்று கவனிக்கும் திறன் அதிகரிக்கும்.

4. கல்லா? தரையா? - இதில் பட்டு வருபவர் (Cஅட்செர்) கல் அல்லது மண் தேர்ந்தெடுக்க வேண்டும். மண்ணை தேர்ந்தெடுத்தால், மண்ணில் இருப்பவரை அவர் தொட்டால் அவர் ஓஉட். அவர் பட்டு வர வேண்டும்.

மொத்தத்தில் நமது பழைய விளையாட்டை விளையாடினால், உடல் மட்டுமல்ல மனமும் வழுவாகும். தோல்வி கண்டு துவளா மனம் உண்டாகும். மற்ற குழந்தைகளுடன் விளையாடுவதால் அவர்களுக்கு குழுவேலை நன்றாக வளரும். மற்ற ஊர் குழந்தைகளுடன் விளையாடுவதால் கலாச்சார பரிமாற்றம் ஏற்ப்பட வாய்ப்புகள் அதிகம்.

இத்தகைய விளையாட்டை இக்கால குழந்தைகள் ஏன் விளையாடுவதில்லை என்ற கேள்விக்கு பல பதில்கள் கிடைத்தன.

முதலவதாக விளையாட நேரம் இல்லை. கணினி வகுப்பு, நீச்சல் வகுப்பு, ஹிந்தி வகுப்பு, அபேகஷ் என்று அவர்களுக்கு ஒரு நாளுக்கு 24 மணி நேரம் படிக்கவே போதவில்லை.

இரண்டவதாக அந்த விளையாட்டை கற்றுக் கொடுக்க தாய் - தந்தைக்கு நேரம் இல்லை.

மூன்றவதாக பழைய விளையாட்டு என்று ஒதுக்கிவிடுகின்றனர். 'என் அப்பா விளையாடிய விளையாட்டு இதை யாருடா விளையாடுவார்கள்?' என்று விளையாடுவதை அவமானமாக கருதுகின்றனர்.

மிக முக்கியமான காரணம் - கணினி விளையாட்டு. இது விளையாடினால், குழந்தைகளுக்கு சோறு, தண்ணீர், அம்மா என்று எதுவும் வேண்டாம்.

வருடம் முழுவதும் படிப்பை பற்றி மட்டுமே யோசிக்கும் குழந்தைகளுக்கு, கோடை விடுமுறையே சொர்க்கம் ஆகும். நன்றாக ஒடி விளையாடி அவர்களை புதுப்பித்து கொண்டால்தான், அவர்களால் அடுத்த வருடத்தையும் புத்துணர்ச்சியுடன் எதிர்கொள்ள முடியும். நமது கனவுகள், நமது நாட்டை தாங்கி பிடிக்க போகும் குழந்தைகள் அறிவில் மட்டும் சிறந்தவர்களாக இருந்தால் போதாது. மனபலம், உடல் பலம் படைத்தவர்களாக இருக்க வேண்டும்.

இவ்விரண்டையும் வழங்கும் பழைய விளையாட்டுகள் நம் குழந்தைகள் விளையாட காண்போமாக!!!

Monday, May 21, 2007

நீ நீயாக இரு !!!

மற்றவரிடம்
இருந்து
தன்னை
வித்தியாசப்படுத்த
நினைக்கும்
மனிதா !!

நீ
நீயாக
இருந்தாலே
வித்தியாசப்படுவாய்
என்பதை
உண்ர்வாயா???

Sunday, May 20, 2007

இளமையை உணர...

புதிதாய் கல்.
காதலை காதலி.
அன்பை உணர்.
இசையை ரசி.
நண்பனை யோசி.
குழந்தையை முத்தமிடு.
இயற்கையை நேசி.
நிலவுடன் விளையாடு.
பொறாமை குறை.
கனவை உண்.

நீயும் மார்க்கண்டேயேனே !!!

Friday, May 18, 2007

நான் சந்தித்த பெண்கள் - பள்ளிப்பருவம்.

விகடனில் பிரகாஷ்ராஜ் தான் நேசித்த பெண்களை பற்றி எழுதி இருந்தார். நான் வாழ்வில் சந்தித்த பெண்களை பற்றி எழுதலாமே என்று தோன்றிய உணர்வின் வெளிப்பாடுதான் இந்த பதிவு.

நான் சந்தித்த பெண்களை மூன்று வகையாக பிரித்துள்ளேன். பள்ளிபருவத்தில் சந்தித்தவர்கள், கல்லூரியில் சந்தித்தவர்கள், வேலை கிடைத்தபின் சந்தித்தவர்கள். தற்சமயம் அவர்களை நான் சந்திக்க நேர்ந்தால் கேட்க விரும்பும் கேள்வியையும் சேர்த்துள்ளேன்.

முதலாம் பெண்: - பால்கோவா.
இவளை நான் சந்தித்த போது எனக்கு வயது 6. பள்ளியிலிருந்து என் பாட்டி வீட்டுக்கு செல்லும் வழியில் பார்ப்பேன். பெயர் தெரியாது. அவளுக்கு அவளது பாட்டி பால்கோவா ஊட்டி விடுவாள். எனக்கு பால்கோவா பிடிக்கும் என்பதால் அவளையும் பிடித்தது.

கேள்வி: இன்னும் பால்கோவா விரும்பி சாப்பிடுறியா?

இரண்டாம் பெண்- சிவகாமி.
இவளை நான் சந்தித்த போது எனக்கு வயது 14. ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது NTSE பயிற்சி வகுப்புக்கு செல்வேன். அப்பொழுது சந்தித்தவள் இவள். அமைதியானவள். ஒரே இடத்தை உற்று நோக்கும் வழக்கம் கொண்டவள். அவள் பார்க்கும் பக்கமா நான் அமர வேண்டும்? நண்பர்களின் கேலிக்கு ஆளானேன். நல்ல வேளையாக நானும், அவளும் (NTSE) தேர்வாக இல்லை. பின்ன என்ன? இரண்டாம் நிலையுலும் யார் கேவலப்படுவது?? இவளை பார்த்த பின் தான் நான் என்னை காண ஆரம்பித்தேன். அழகாக உணர்ந்தேன். என் மனது எனக்கு மட்டும் சொந்தம் இல்லை என்று உணர்ந்த பருவம் இது. விளைவு- பத்தாம் வகுப்பில் மதிப்பெண் குறைவு.

கேள்வி: அவ்வளவு பெரிய வகுப்பில் உனக்கு பார்க்க வேறு இடம் இல்லையா?

மூன்றாம் பெண்: பூ.
இவளை நான் சந்தித்த போது எனக்கு வயது 16. பெயருக்கு ஏத்தது போல் பூ மழை பொழிபவள். இரு அண்ணன்கள் இவளுக்கு இருந்தால் இவளிடம் பேச கொஞ்சம் பயம் எனக்கு. ஆனாலும், இவள் அண்ணன்களிடம் நல்ல பெயர் வாங்கி இருந்தேன். சற்று தள்ளி எதிர் வீட்டில் இருந்ததால், சமயத்தில் எதிர்படும்போது 'புன்னகை' பூ பரிசாக கொடுப்பாள்.

கேள்வி: உனக்கு இரு அண்ணன்கள் இருக்கும்போது என்னை ஏன் 'அண்ணன்' என்று அழைத்தாய்?

நான்காம் பெண்: என் பெயர் கொண்டவள்.

இவளை நான் சந்தித்த போது எனக்கு வயது 17. கறுப்புதான். ஆனால், கண்ணை கவரும் கறுப்பு. பன்னிரெண்டாம் வகுப்பு மாதிரி வினாத்தாள் தினமலரில் வரும். தினமலரை அவர்கள் வாங்குவார்கள். அவர்களிடம் இரவல் வாங்க செல்வேன். படம் வரைய தெரியாததால்,(பாடம் மட்டும் நல்லா வருமோ??) அவளிடம் வரைய சொல்லி கேட்பேன். அவளும், நான் வரைவதை விட மிக மோசமாக வரைந்து கொடுப்பாள். என் நடததை பார்த்த என் அம்மாவிற்கு பயமிருந்தால், 'அக்கா, நல்லா வரைகிறாள், இல்ல?' என்று வெறுப்பு ஏற்றுவார்கள். கடைசியில் பூவின்(மூன்றாம் பெண்) அண்ணனை காதல் திருமணம் செய்து கொண்டாள்.

கேள்வி: உள்ளங்கையில் வைத்து கொண்டாடிய உன் குடும்பத்தை மறந்து, எப்படி 'காதல்' திருமணம் செய்து கொள்ள மனம் வந்தது?

இந்த முறை ஏமாறததால், +2வில் நல்ல மதிப்பெண் பெற்று நல்ல பொறியியல் கல்லூரியில் சேர்ந்தேன்.

தமிழ் திரைப்படம் பார்த்து கெட்ட பலரில் நானும் ஒருவன். கல்லூரி கற்க அல்ல, காதலிக்க என்ற தப்பான எண்ணத்துடன் சென்றேன்.

நான் சந்தித்த பெண்கள் - கல்லூரி பருவம் - அடுத்த பதிவில்....

Wednesday, May 16, 2007

வயதுக்கு வந்த நான்...

12 வயதில் சுயமாய் முடிவு எடுக்கும்,
அறிவை கல்வி வழங்கும் போது,

15 வயதில் தந்தை ஆகும் தகுதியை
இயற்கையே எனக்கு தரும்போது,

18 வயதில் நாட்டின் தலைவனை
தேர்ந்தெடுக்கும் உரிமை இருக்கும்போது,

21 என்று எனது திருமண வயதை,
தீர்மானிக்க இந்த அரசாங்கம் யார்???

அகரம்.

என் கல்லூரி தோழியின் உணர்வு இது. அதை வெளிப்படுத்த கவிதை எழுதினேனே தவிர, இதில் எனக்கு உடன்பாடு இல்லைதான்.

என் மணாளன்,

றிவானவனாக,
ழகானவனாக,
ன்புள்ளவனாக,
வசியமில்லை.
யல்நாட்டு மோகம்,
ற்றவனாக் இருக்க வேண்டும். பிழைப்புக்காக,
ன்னை நாட்டை விட்டு,
ண்டை நாட்டுக்கு பறந்தவன், நாளை
ன்னத்திற்காக தன்னை
டுத்தவனுக்கு விற்கமாட்டான் என்று
றுதியிட்டு எப்படி கூற முடியும்?

இறைவன் கொடியவனே !!!

வேண்டியவைகளை தராமல்,
தேவையானவற்றை கொடுக்கும்,
இறைவன் கொடியவனே !!!

Friday, May 11, 2007

கவிதை எழுதிய கவிதை.

காதல் தந்த எனக்கு,
கவிதை தா என்றேன் நான்.

'கவிஞனுக்கே கவிதையா??
இந்தா வைச்சுக்கோ..'
என்று எழுத ஆரம்பித்தாய்.

கண்களை மூடி ஒரு அழகிய
மௌனக்கவிதை எழுதினாய் !!

பேனா பின்னாலிருந்த மூடி கடித்து,
கவிதை எழுதினாய் !!

உதடு கடித்து அழகாய்,
உதட்டு கவிதை எழுதினாய் !!

'முடியலைடா' என்று சிணுங்கி,
முழுக்கவிதை எழுதி முடித்தாய் !!

Wednesday, May 9, 2007

பதிலாக என் புன்னகை...

'காதல் தோல்வி' பற்றி,
எழுதிய கவிதையை
பார்த்து,

"சுந்தரியை நீ மறக்கலையா??"
வினவினான் என்
பள்ளி பருவத்து தோழன்.

"கண்டிப்பா இது கன்யா பற்றியது.."
கருத்து சொன்னான்
கல்லூரி நண்பன்.

"யாருடா? நம்ம சோன்யாதானே?"
ஆச்சரியத்துடன் கேட்டான்,
அலுவலக கூட்டாளி.

'என் தூய நட்பை புரிந்து கொள்ள, யாரும் இல்லையா??'என்று நினைத்துகொண்டு,
பதிலாக அளித்தேன், என் புன்னகையை.... :-)

Wednesday, March 14, 2007

ஒரு தாயின் வருத்தம் !!!

ஒரு தாயின் வருத்தம் !!!

உன் உயிர் வளர்க்க, உன்னுள் தாய்பற்றை வளர்க்க,
என் ரத்தத்தை பாலாக ஊட்டினேன்.

மற்ற மொழிகளை எளிதில் கற்க, உன்னுள் தாய்மொழிபற்றை வளர்க்க,
தாய்மொழியாம், தமிழை ஊட்டினேன்.

வாழ்வின் நெறியை உணர வைக்க, உன்னுள் ஆன்மிகத்தை வளர்க்க,
விவேகானந்தரின் ஆன்மிகத்தை ஊட்டினேன்.

அநியாயத்தை கண்டு கொந்தளிக்க, உன்னை காத்து கொள்ள,
என்னவனின் வீரத்தை ஊட்டினேன்.ஆனால்,

அயல் நாட்டு மோகம் கொண்டு, அங்கு வேலை செய்ய,
உனக்கு எதையும் ஊட்டவில்லையேடா???

கவிஞர்களெல்லாம் கவிஞர்களில்லை!!!

கம்பர், ஷெல்லி,
கண்ணதாசன், வைரமுத்து,
இவர்களெல்லாம் கவிஞர்களே இல்லை...


உன்னை வர்ணித்து,
கவிதை எழுதாத வரை !!!

Saturday, February 24, 2007

கடலை போட காரணம்.

திடீரென்று தோன்றிய உளறல்...

"நான் மற்ற பெண்ணுடன் பேசும்போது,
நீ கோபப்படும் அழகை ரசிக்க மட்டுமே,
நான் கடலை போடுகிறேன்..."

Friday, February 23, 2007

என்னை பாதித்த நண்பர்கள்..

எனது நண்பர்கள் பற்றி எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் ஒருவரை பற்றி கூறி மற்றவரை மறந்து விட்டால் தவறு என்பதால், என்னை பாதித்த நண்பர்கள் பற்றி எழுத உள்ளேன். ஒரு குழந்தை சிரிக்கும் பொழுது யாரையும் தேடாது. ஆனால் அதே குழந்தை அழும் பொழுது அதன் தாயை தவிர வேறு எதையும் தேடாது. அது போல், நானும் யாருடனும் இருந்தாலும் சிரிப்பேன். அதே நேரம், அழ வேண்டுமென்றால், இவர்களின் தோளை மட்டுமே தேடுவேன். தோள் கொடுக்கும் தோழர்கள் அல்லவா???

'உன் நண்பர்களை காட்டு. உன்னை பற்றி சொல்கிறேன். ' - என்பது பழமொழி. இவர்களை காட்டுகிறேன், என்னை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

முதலாமவன். இவன் பெயரும் எனது பெயரும் ஒன்றே. எனது உயிர் எடுக்க, கொடுக்க வந்தவன். எனது கல்லூரி நண்பன். எட்டு வருட பழக்கம். நாங்கள் பார்த்துக்கொள்ளாத நாட்களை விரல் விட்டு எண்ணி விடலாம். எனது எண்ணமும், இவனது எண்ணமும் முற்றிலும் மாறுபட்டது. ஆனாலும், எங்கள் இருவருக்கும் நட்பு இருப்பதற்க்கு காரணம், நாங்கள் இருவரும் சிறு வயதிலேயே பெரிய துக்கத்தை அனுபவித்தவர்கள். என் மனதில் என்ன நினைக்கிறேன், என்பதை அச்சு அசலாக கண்டுபிடிப்பதில் கை தேர்ந்தவன். உன்னை இழக்கிறேன், நண்பா !!!

இரண்டாமவன். இவன் ஒரு மருத்துவன். என்னையும் ஒரு பெண்ணையும் சேர்த்து முதன்முதலில் ஒட்டியவன். தற்சமயம் திருமணம் முடிந்து விட்டது. பன்னிரெண்டாம் வகுப்பில் தொடங்கிய இவனது காதல் இப்பொழுது திருமணத்தில் முடிந்தது. மூன்று வருடங்கள், இரவில் இவனுடன் சேர்ந்துதான் பள்ளியில் இருந்து வீடு திரும்புவோம். கேலி செய்யாத ஆசிரியர் இல்லை. ஆடாத ஆட்டம் இல்லை.

மூன்றாமவன். தற்சமயம், முனைவர் பட்டத்துக்கு படித்து கொண்டிருக்கிறான். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் எனது 'மனசாட்சி'. ஆகையால், இவனுக்கும் எனக்கும் அடிக்கடி சண்டைதான். நான் இவனிடம் தொலைபேசியில் பேசும் கடைசி வார்த்தை, 'நான் இனி உன்னை அழைக்க மாட்டேன்.' இரண்டு நாள் கழித்து மறுபடியும் பேசுவோம். சண்டை தொடரும். எனது மனதிற்கு எது சரி என்று படுகிறதோ, அதையே இவனும் சொல்வதால், இவனை ரசிப்பேன். நாங்கள் கடவுள் முதல் காமம் வரை விவாதிப்போம். நாங்கள் ஒன்றை பற்றி விவாதிக்கவில்லை என்றால், அது ஒன்று உலகில் இல்லை, அல்லது, எங்களுக்கு அதை பற்றி தெரியவில்லை என்று அர்த்தம்.

நான்கமவன். நெல்லியாண்டவர் பெயர் கொண்டவன். இவனுடன் ஒன்றாக தங்கியுள்ளேன். ஒன்றாக வேலை பார்த்துள்ளேன். இவனிடம், எனக்கு பிடித்தது இவனுடைய பிடிவாதம். என்னை விட பிடிவாதக்காரன். அதே நேரம் கற்றுக்கொள்ளும் ஆசை கொண்டவன். எந்த ஒரு புதிய விஷயமாக இருந்தாலும், மிக விரைவில் கற்றுகொள்வான். இவனுடைய போரட்ட குணம், என்னை மிகவும் கவர்ந்தது.

ஐந்தாமவன். திருவாளர் சோம்பேறி. அழகானவன். அறிவானவன். நான் சின்னவன் என்றால், இவன் பெரியவன். என்னை விட ஒரு வயது மூத்தவன். இவனுக்கு, நேரம், காலம் பற்றியெல்லாம் கவலையில்லை. ஆகவே, இவனுடன் இருந்தால் நேரம் போவதே தெரியாது. எனக்காக எதையும் செய்யக்கூடிய நல்ல நண்பன். தற்சமயம், காதல் வலையில் சிக்கிக்கொண்டு வாழ்வை ரசிக்கிறான். இவன் இருந்தாலும் இம்சை, இல்லையென்றால், மகா கொடுமை. இன்னமும் என்னை இம்சைக்க, இங்கு வருகிறான். கடவுள்தான் என்னை இர்ட்சிக்க வேண்டும்.

என் நண்பர்களை பற்றி ஏன் எழுதுகிறேன் என்றால், இப்பொழுது யாரும் என் அருகில் இல்லை. இதில் எழுதினால், அவர்களின் இனிய ஞாபகம் என் மனதை இனிக்க வைக்கும் என்பதால்தான்.

Thursday, February 22, 2007

வல்லவன் - ஓட்டை.

சமீபத்தில் வல்லவன் என்ற திரைப்படம் பார்த்தேன். அதில் ஒரு ஒட்டையை கண்டேன்.

அதில், கதாநாயகன் கோயிலில் கதாநாயகியை பார்ப்பான். அவள் அழகில் மய்ங்கி,கண்டவுடன் காதல் ஆகி விடும். தவறு இல்லை.

ஆனால், அந்த கதாநாயகிக்கு மட்டும் மனதை பார்த்துதான் காதல் வரணுமாம். அதற்காக வேஷம் எல்லாம் போட்டு செல்வார்.

இது எந்த ஊர் நியாயம்? அவருக்கு மட்டும், அழகை பார்த்து காதலாம். பெண்ணுக்கு மட்டும், மனசை பார்த்து காதல் வரணுமாம். இதனால், அந்த படத்தில் உள்ள மற்ற எதுவும் என்னை கவரவில்லை.

Important Part in Body.

My mother used to ask me what the most important part of the body is?

Through the years I would take a guess at what I thought was the correct answer. When I was younger, I thought sound was very important to us as humans, so I said, "My ears, Mommy." She said, "No. Many people are deaf.

But you keep thinking about it and I will ask you again soon." Several years passed before she asked me again. Since making my first attempt, I had contemplated the correct answer. So this time I told her, "Mommy, sight is very important to everybody, so it must be our eyes."

She looked at me and told me, "You are learning fast, but the answer is not correct because there are many people who are blind." Stumped again, I continued my quest for knowledge and over the years, Mother asked me a couple more times and always her answer was, "No. But you are getting smarter every year, my child."

Then last year, my grandpa died. Everybody was hurt. Everybody was crying. Even my father cried. I remember that especially because it was only the second time I had seen him cry. My Mom looked at me when it was our turn to say our final good-bye to Grandpa.

She asked me, "Do you know the most important body part yet, dear?" I was shocked when she asked me this now. I always thought this was a game between her and me. She saw the confusion on my face and told me, "This question is very important. It shows that you have really lived in your life.

For every body part you gave me in the past, I have told you, you were wrong and I have given you an example why. But today is the day you need to learn this important lesson." She looked down at me as only a mother can. I saw her eyes well up with tears. She said, "My dear, the most important body part is your shoulder."

I asked, "Is it because it holds up my head?" She replied, "No, it is because it can hold the head of a friend or a loved one when they cry. Everybody needs a shoulder to cry on sometime in life, dear. I only hope that you have enough love and friends that you will always have a shoulder to cry on when you need it."

Then and there I knew the most important body part is not a selfish one. It is sympathetic to the pain of others. People will forget what you said...

People will forget what you did ; But people will NEVER forget how you made them feel...

Wednesday, February 21, 2007

திரைக்கண்ணோட்டம் - 'பச்சைக்கிளி முத்துச்சரம்'

இன்று 'பச்சைக்கிளி முத்துச்சரம்' படம் பார்த்தேன். அதைப் பற்றி ப்லொக்கில் போடலாம் என்று யோசனை வந்தது. என்னுடைய கண்ணோட்டத்தில் அந்த படம்.

இந்த படத்தில், கதா நாயகனாக வரும் சரத் குமார், மிக இயல்பாக நடித்துள்ளார். பத்து பேரை தூக்கி போடவில்லை. யாரிடமும் சவால் விடவில்லை. அதை பார்ப்பதுற்கே அழகாக இருந்தது. ஒரே ஒரு உருத்தல் என்னவென்றால் அவருக்கு ஜோடியாக ஒரு இளம் கதா நாயகியை நடிக்க வைத்துள்ளனர். அது ஒன்றுதான் பொறுக்க முடியவில்லை.

ஜோதிகா விற்கு, நல்ல வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. நன்றாகவே பயன்படுத்தியுள்ளார்.

வில்லனாக வருபவருக்கு டப்பிங் கொடுத்திருந்தாலும் நன்றாகவே நடித்துள்ளார்.

இவர்களை விட பாரட்டிற்குரியவர் இயக்குனர்தான். தெளிவான கதை. மிக தெளிவான திரைக்கதை. அங்கங்கே தென்படும் 'பளிச் பளிச்' வசனங்கள், என பின்னி எடுத்திருக்கிறார் கௌதம். முதல் பாதி, பார்த்தவுடன், 'திருட்டு பயலே' ஞாபகம் வந்தாலும், அவருடைய பாணியில் நன்றாக எடுத்துள்ளார்.

சமீபத்தில் பார்த்த 'தாமிரபரணி', 'தீபாவளி', 'போக்கிரி' யை விட நல்ல படம்.

எல்லோரும் ஒரு தடவை பார்த்து வரக்கூடிய நல்ல திரைப்படம்.
எனக்கு தெரிந்து ஒட்டை இல்லாததனால், 'குட்டு' இல்லாத 'குட்' படம்.

எனது முதல் முயற்சி...

ஒரு காதல் கவிதை எழுதி எனது ப்லொக்கை ஆரம்பிக்கலாம், என்று நினைக்கிறேன்...

"பிறந்த நாள், நண்பர் தின வாழ்த்துக்கள்,அனுப்பும்போது நிமிடத்துக்கு 60 வார்த்தைஅடிக்கும் எனது விரல்கள்,

உனக்கு திருமண வாழ்த்து,அனுப்பும்போது மட்டும் மணிக்கு 1 வார்த்தை,அடிக்கின்றதே, ஏன்??"

சும்மா தோன்றியதை எழுதினேன்.... அவ்வளவுதான்.... மற்றபடி ஒன்றும் இல்லை.

தங்கள் இனிமையான,
மகேஷன்.

Sunday, February 18, 2007

About Me...

Some words about me,

I am Mahesh.R.
My boss will say that i am a software professional.
My mum will say that i am a good boy.
My brother will say that i am a naughty boy.
My boy friends will say that i am a 'Sweet Rascal'.
My dad will say that our origin is Virudhunagar, Tamil Nadu, India.
My girl friends will say that i am charming.

So, totally I am not having any definition of myself.
To be short and sweet, i am 'Appavi' + 'Ada paavi'.

If time permits me, i will blog you, guys and girls,

Urs Sweetly,
Mahesh.R.