Saturday, December 15, 2007

எது அழகு???

தவறென்று தெரியாமல் குழந்தை செய்யும் குறும்பா??
அதை மன்னித்து,மறந்து ரசிக்கும் தாயின் குறுநகையா??

தன் காதலிக்காக வான் பொழியும் முத்த மழையோ??
அதை வாங்கி பூமி ஏழு நிறத்தில் வெட்கப்படும் அழகோ??

தகாத கேள்வி வினவும் பிள்ளையின் ஆர்வமா??
பதில் தர முடியாமல் முழிக்கும் தந்தையின் தவிப்பா??

வேண்டுமென்றே அடித்து அழவைக்கும் அண்ணனின் அன்பா??
அழுவது போல் நடித்து அன்னையிடம் அடி வாங்கி தரும் தம்பியின் பாசமா??

இவையெல்லாம் கொடுத்த இறைவனின் பெருந்தன்மையா??
அனைத்தையும் ரசிக்கும் மனிதனின் ரசனையா??

Wednesday, December 12, 2007

கதைப்போட்டி... - சிறுகதை

அது ஒரு பன்னாட்டு நிறுவனம். பொறியியல் கல்லூரியில் படிக்கும் அனைத்து இறுதியாண்டு மாணவர்கள் மத்தியில் அடிக்கடி அடிபடும் நிறுவனம் இது. இதன் முக்கிய தொழில், மென்பொருள் தயாரித்து வெளிநாட்டில் விற்பனை செய்வதாகும். இதில் வேலை பார்க்கிறேன் என்று தப்பித்தவறி, ஆட்டோக்காரரிடமோ, வீட்டு ஓனரிடமோ சொன்னால், பர்ஸ் கிழிவது உறுதி. இந்த நிறுவனத்தில் சேர்வதே பெரிய விஷயம் என்ற நினைப்பில் சேர்ந்து, சேர்ந்த பின்னர், இதுக்காகவா இவ்வளவு கஷ்டப்பட்டோம் என்று நொந்து கொள்பவர் பலர். அவர்களில் ஒருவன் தான் குமார். வேலைக்கு சேர்ந்த ஆறு மாதத்திலேயே அவன் வேலையை வெறுக்க ஆரம்பித்து விட்டான். இன்னும் அவன் அந்த நிறுவனத்தில் வேலை தொடர இரண்டு காரணம். ஒன்று சம்பளம், மற்றொன்று அஸ்வினி. அஸ்வினி அவனது உயிர்த்தோழி. இருவரும் ஓரே கல்லூரியில ஒன்றாக படித்து, ஓரே நிறுவனத்தில் வேலை கிடைத்து, ஒன்றாய் டிரெயினிங் முடித்து, ஒரே அக்கௌண்டில் வெவ்வேறு பிராஜக்ட்டில் வேலை செய்கின்றனர்.

எவ்வளவு வேலை இருந்தாலும் சரி, காலை 10:30 மணிக்கு காபி சாப்பிட காண்டீன் வந்து விடுவார்கள். அப்படி ஒரு நாள், டிசம்பர் 10, 2007,

"என்னடா பலமா யோசிக்கிற... என்ன விஷயம்??? நேத்து பார்த்த, 'கல்லூரி' பட சோகமான முடிவு ஞாபகமா?"

"இல்லைடி.. அது வந்து..."

"ஷ்கிரிப்ட் எரர் வந்ததுன்னு சொன்னியே... அதுவா??"

"ம்ஹூம்... என்னன்னா...."

"உன் டீம்ல நார்த் இண்டியாவில் இருந்து ஒரு பொண்ணு வந்து இருக்கியே... அத பத்தியா??"

"சீ.. சீ... இது வேற வி....."

"வேறு என்னதான் விஷயம். சொல்லித்தொலையேன்...."

"நீ சொல்ல விட்டாத்தானேடி சொல்வேன்.... "
அதிசயமாய் வாயை மூடினாள்.

"'சர்வே'சன் ஒரு கதைப்போட்டி நடத்துறார். அதைப்பத்தி தான் யோசிக்கிறேன்."

"யாரு?? 'சர்வே' நடத்துவாரே... அந்த ப்லாக்கரா?? "

"ம்ம்ம்ம்...."

"நீ அந்த போட்டியில் கலந்துக்க போறியா??"

'ஆம்' என்பது போல தலையாட்டினான்.
"என்ன ப்ரைஸ்??"

"நூறு அமெரிக்கன் டாலர். இருபத்தைந்து நமக்கு. எழுபத்தைந்து டாலர், உதவும் கரங்கரங்களுக்கு..."

"நல்லதுதானே.... எப்படி வின்னரை செலக்ட் பண்ணுவாங்க??"

"தெரியலை... யார் கதைக்கு, அதிகமா பின்னூட்டம் கிடைக்குதோ, யாருக்கு அதிகமாக வாக்கு கிடைக்குதோ, அவங்க தான் வின்னர்.."

"போட்டியில் கலந்துக்கறது தப்பு இல்லை. ஆனால் ப்ரைஷ் கிடைப்பது கஷ்டம்தான்." நக்கலாய் சிரித்தாள்.

அக்னிபார்வை பார்த்தான் குமார். அஸ்வினி, அவனது கோபத்தை புரிந்து கொண்டு, சிரிப்பை அடக்க முயற்சி செய்தாள். "சரி... சரி... முறைக்காதே... உனது ப்லாக்கை, நானும், நம்ம ப்ரெண்டஸ்தான் படிக்கிறோம். அதில் ஒருத்தனும் உனக்கு கமெண்ட்ஸ் எழுதுவதில்லை... நான் தான், பாவமென்று கமெண்ட்ஸ் எழுதுறேன். பின்ன எப்படி நீ ஜெயிப்ப??"

"அதைப்பத்தி தான் யோசிச்சுக்கிட்டு இருந்தேன். ஐயாகிட்ட சூப்பர் ஐடியா இருக்கு..."

"கேட்காவிட்டாலும் நீ என்னை விடப்போறதில்லை. சொல்லு...."

"நானே என் கதைக்கு, கமெண்ட்ஸ் எழுதினா???"

"நீ மட்டும் புத்திசாலி என்று நினைக்காதே.... பெயர் வைத்து கண்டு பிடிச்சுடுவாங்க..."

"நான் என்ன அவ்வளவு தூரத்திற்கு மடையனா?? கூகிள் அகௌண்ட், ஐம்பது கிரியேட் பண்ணி, ஒவ்வொரு அகௌண்ட் யூஸ் பண்ணி பின்னூட்டம் எழுதுவேன். "

"மடத்தனமான ஐடியா இது.... ஒரு ஆயிரம் ரூபாய்க்கு இந்த பாடா??"

"எனக்கு ஜெயிக்கணும்... அவ்வளவுதான்... ஒரே கல்லில் இரண்டு மாங்காய். என்
ப்லாக்கோட ரீடர்ஸ் அதிகம் ஆவாங்க.... ப்ரைஸ் கிடைக்கவும் சான்ஸ் இருக்கு..."

"அது சரி... திடீர்னு சர்வே எடுத்து ரிசல்ட் அனௌன்ஸ் பண்ணால் என்ன பண்ணுவ??"

"அது இதை விட ரொம்ப சிம்பிள்...... நான் ஏற்கனவே கிரியேட் பண்ண அகௌண்டை யூஷ் பண்ணி, சர்வேயில் எனக்கு அதிகமா வோட்டு போட்டு கொள்வேன்... "

"எக்கேடும் கெட்டுப்போ.... ஆனால் எனக்கு என்னமோ, இது ஒர்க்-அவுட் ஆகும் என்று தோணலை..."

"சரிதான் போடி.... சம்திங் இஸ் பெட்டர் தான் நத்திங்... "

"நத்திங் இஸ் பெட்டர் தான் நான்சென்ஸ்... சரி, நான் கிளம்புறேன்."

அஸ்வினி சென்றவுடன், குமார் தனது சிந்தனையை தொடர்ந்தான். தான் நினைத்தபடி, ஐம்பது கூகிள் அகௌண்ட் உருவாக்கி, அவனுடைய கதைக்கு அவனே பின்னூட்டம் எழுதி கொண்டான். டிசம்பர், 21ம் தேதி எல்லோருடைய கதைக்கும் பின்னூட்டம் எத்தனை வந்து இருக்கு என்று பார்த்தான். யாருடையதும் நாற்பதை தாண்டாத சந்தோஷத்தில் ஊருக்கு கிளம்பி போனான்.

கிறிஸ்துமஸ் விடுப்பு, புத்தாண்டு விடுப்பு எல்லாம் முடிந்து ஜனவரி 2ம் தேதி அலுவலகம் வந்தான். வழக்கம் போல அவனும், அஸ்வினியும் காண்டீன் சென்றனர். பரஸ்பரம், வாழ்த்து சொல்லி முடித்து, வழக்கமான கேள்விகள் எல்லாம் கேட்டு முடிந்து, அஸ்வினிதான் முதலில் கேட்டாள், "ஹேய்!!! சர்வேசன் ப்லொக் ரிசல்ட் என்னாச்சு??" பாதி குடித்து முடித்த காபியை அப்படியே விட்டுவிட்டு, கீழே ஓடினான். இந்தியா-பாகிஸ்தான் மேட்சில் எல்லா விக்கெட்டும் இழந்து ஒரு ரன் எடுக்க வேண்டிய நிலையில் ஓடும் ரன்னரின் படபடப்பு அவனிடம் இருந்தது.

அவனது இருதய துடிப்பு அவனுக்கே கேட்கும் அந்த நிலையில், வந்தது முடிவு, "வெற்றி பெற்றவர் - குமார்.

வெற்றி பெற்ற குமாருக்கு வாழ்த்துக்கள் !!! தங்களின் ஜிமெயில் அகௌண்டிலிருந்து எனக்கு உங்கள் முகவரி குறித்து மின்மடல் ஒரு வாரத்தில் (ஜனவரி 8ம் தேதிக்குள்) அனுப்பவும். நீங்கள் அனுப்பாத பட்சத்தில் உங்கள் பரிசு பணம் 25$ 'உதவும் கரங்களுக்கு' வழங்கப்படும்." என்று....

முடிவு - 1:
சிறு புன்னகையுடன் ஜிமெயிலில் லாகின் செய்தான். தனது வீட்டு முகவரியை டைப் செய்யும்போது, இன்னொரு டாப்பில் ப்லாக்கரையும் ஓபன் செய்தான். எப்பொழுதும் மாடரெட் செய்ய ஒரு கமெண்டும் இல்லாத டாஸ்போர்டில் 104 பின்னூட்டம் இருப்பது கண்டு விக்கித்து போனான். அவன் அனுப்பிய அந்த கதைக்கு மட்டும் வந்த பின்னூட்டத்தின் எண்ணிக்கை 54. முன்னர் எழுதிய மற்ற போஷ்டுக்கு வந்த பின்னூட்டங்களின் எண்ணிக்கை 50. சொல்லொணா மகிழ்ச்சி கொண்டான்.

கொஞ்சம் யோசித்தான். பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவனாக, கூகிள் டாப்பிற்கு வந்து, தனது முகவரியை எடுத்து விட்டு, "இந்த போட்டியில் வெற்றி பெற்றதின் மூலம் மகிழ்ச்சி. ஆனால் இதை முறையாக நான் பெறவில்லை. ஆகையால், இந்த பரிசு பணத்தை இரண்டாம் இடத்தில் வெற்றி பெற்றவருக்கோ, உதவும் கரங்களுக்கோ நீங்கள் தரலாம். அடுத்து போட்டி நடத்தினால், கண்டிப்பாக கலந்து கொள்வேன். நன்றி..." என்று சர்வேசனுக்கு மின்மடல் அனுப்பினான். பின்னால் நிழலாடுவது கண்டு திரும்பினான். அஸ்வினி, உதட்டோரம் சிறு புன்னகையுடன் நின்றாள்.

"நீ அடுத்த முறை கண்டிப்பாக ஜெயிப்பாய்."


முடிவு - 2
சிறு புன்னகையுடன், ஜிமெயில் லாகின் பேஜ் போனான். சிறிது நேரம் கண்ணை மூடி, யோசித்து, டைப் செய்தான். ஆனால், அந்த ஜன்னலோ சிவப்பாய் திட்டியது. மறுபடியும் யூசர் ஐடியும், பாஷ்வர்டும் டைப் செய்தான். மறுபடியும் அதே பதில். முகம் சிறுத்தது அவனுக்கு. விடாமல் வேறு பாஸ்வர்ட் முயற்சி செய்தும் அவனால் லாகின் செய்ய இயலவில்லை. 'உப்பு தின்னவன் தண்ணீர் குடித்து தானே தீர வேண்டும். பரவாயில்லை இந்த பரிசும் பணமும் நல்ல காரியத்திற்குத்தானே பயன்படபோகிற்து. நல்லதுதான்' என்று அமைதி கொண்டான்.

பின்னால் வந்த அஸ்வினி கேட்டாள், "என்னடா ஆச்சு??". தான் வெற்றி பெற்ற விஷயத்தை கூறினான்.
"உன் வீட்டு முகவரி அனுப்ப வேண்டியது தானே..."
"பல அகௌண்ட் கிரியேட் பண்ணதால் என் அகௌண்ட் பாஸ்வேர்டு மறந்து போச்சு..." என்று உதடு பிதுக்கினான்.
முன்னொரு முறை ஏதோ காரணத்திற்கு அவன் பாஸ்வேர்டு அறிந்து கொண்ட அஸ்வினி ஒரு வாரம் கழித்து சொல்லலாம் என்ற முடிவில், சொன்னாள் "ஓ!! ஹென்றி..."


சர்வேசனின் 'நச்சென்று ஒரு கதை' போட்டிக்கு எழுதப்பட்ட சிறுகதை

Tuesday, December 4, 2007

காதல் சொல்ல வந்தேன்...

"மனப்பூர்வமாக காதலிக்கிறேன்." என்று நான் கூறியதை கேட்டு, பூவிதழ் விரித்து,
"என்ன மீன் பண்ற?" என்று 'அலைபாயுதே' ஷாலினி மாதிரி கேட்டாய்.

"உன்னை நல்லபடியாக பார்த்து கொள்வேன்." என்று கண் பார்த்து கூறினேன்.

"'அந்நியன்' பட டயலாக் எல்லாம் சொல்லாதே !!" என்று முறைத்தாய்.

"உன்னுடன் இறுதி வரைக்கும் வாழ விரும்புகிறேன்." என்றேன் தட்டுத்தடுமாறி.

"அதற்கு நீ நண்பனாய் இருந்தால் போதுமே.." என்றாய் நக்கலாய்.

"உன்னை திருமணம் செய்து கொண்டு, சந்தோஷத்தை மட்டும் உன் கண்களில் கண்டு, மடிய விரும்புகிறேன்." என்று நீளமாய் கூறி முடித்தேன்.

என் கண்களை படித்த நீ, "என்னை திருமணம் செய்து கொள்ள 'காதல்' என்பது குறுக்கு வழியா?" வினவினாய்.

"இல்லை. திருமணம் செய்து கொள்ள உன்னை காதலிக்கவில்லை. காதல் செய்வதால் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன்." தீர்க்கமாய் சொன்னேன்.

"ஓ.. அப்படியா?? காதலிக்கும் போது என்ன செய்வாய்? திருமணம் முடிந்த பின்னர் என்ன செய்வாய்??" என்று குறும்பாய் கேட்டாள்.

"இது வரை 'உலக அழகி' பட்டம் பெற்ற எல்லாருடைய பெயர் பட்டியல் எடுப்பேன். எல்லோருக்கும், 'என் காதலி அந்த போட்டியில் கலந்து கொள்ளாத காரணத்தால் மட்டுமே நீங்கள் வெற்றி பெற்றீர்கள்' என்று கடிதம் அனுப்பி அவர்கள் திமிர் குறைப்பேன்." என்றேன் பெருமிதத்துடன்.

உள்ளம் மகிழ்ந்தாலும் அதை வெளிக்காட்டாமல், "ப்பூபூ... இவ்வளவுதானா?? மணலை கயிறாய் திரிப்பது, வானை வளைப்பது, போன்ற காரியத்தை செய்ய மாட்டயா??" என்றாய்.

"செய்ய முடியாதவற்றை பற்றி நான் வெளியில் சொல்வதில்லை. இன்னும் கேள். " என்று கூற, அலட்சியமாய் பார்ப்பது போல பாவனை காட்ட முயற்சி செய்து தோற்றாய்.

"'உன் முகத்தை பார்த்த பின்னர் தான் கடவுள் சந்திரனை படைத்தானோ??' என்று கவிதை என்ற பெயரில் கண்டதை சொல்வேன்." இதை கேட்டு, வந்த புன்னகையை மறைக்க உதடை மடித்தாய்.

"இப்படி பெரிய பொய் சொன்னாலும், அதை கேட்டு வெட்கப்படும் உன் அழகை ரசிப்பேன்." கண்ணடித்து சொன்னேன்.

பொய் கோபம் காட்டி, "சரி... சரி... கல்யாணம் செய்தால், என்னவெல்லாம் செய்வாய்??"

"நீ நால்வருக்கு மட்டும் மிக அழகாய் தெரிவாய். அந்த நால்வரில், நான் இருவராக இருக்க விரும்புகிறேன்". இது உனக்கு விளங்கவில்லை என்பது உனது புருவ அசைவில் இருந்தே தெரிந்தது.

"விளக்கமாய் சொல்கிறேன்... உன் தந்தைக்கு தாயாக தெரியும்போது, அழகாய் தெரிவாய். காதலனுக்கு, காதலியாய் இருக்கும்போது, அழகாய் தெரிவாய். கணவனுக்கு, தன் குழந்தையை சுமக்கும்போது அழகாய் தெரிவாய். மகனுக்கு, தாயாய் இருக்கும்போது அழகாய் தெரிவாய்." என்று கூறி மூச்சு வாங்கினேன்.

"ம்ம்ம்... காதலனாகவும், கணவனாகவும் என் அழகை ரசிக்க விரும்புகிறாய். அப்புறம்... " ஆர்வத்துடன் கேட்டாய்.

"உன் தந்தை உன்னை இந்த உலகத்திற்கு கொடுத்து என்னை பைத்தியக்காரனாய் ஆக்கியது போல, உன் பிரதியை உலகிற்கு கொடுத்து, என்னை போல் ஒருவனை பைத்தியக்காரன் ஆக்குவேன்..." மெல்லிய புன்னைகையுடன் சொன்னேன்.

"அவ்வளவுதானா?? இன்னும் இருக்கா??" உஷ்ண பெருமூச்சு ஒன்று விட்டாய்.

"என் மரணத்தில் மட்டுமே உன் கண்ணீரை காண்பேன்." என்று கடைசியாய் என் பிரம்மாஷ்திரத்தை பிரயோகித்தேன்.

"உண்மையாத்தான் சொல்றியா??" என நீ கேட்கும்போது, உன் கண்ணில் இருந்து நீர் வருவதை உணர்ந்தேன்.

உன்னிரு கரத்தையும், பிடித்து என் இரு கரத்தில் பொருத்தி, என் உதடு பதித்து, உன் இரு விழிகள் ஊடுருவி உன் இருதயத்தில் எதிரொலிக்கும்படி சொன்னேன், "ஐ மீன் இட்...."

பூமிக்கு மட்டும் உன் வெட்கப்படும் முகத்தை காட்டி, "நானும் மனப்பூர்வமாக காதலிக்கிறேன்." என முணுமுணுத்தாய்.

"என்ன மீன் பண்ற??" வாய் வரை வந்த கேள்வி, தொண்டையிலே செத்தது.



பின் குறிப்பு: இது கதையோ, கவிதையோ இல்லை. "ஓரு பெண்ணிடம் காதலை எப்படி வெளிப்படுத்தலாம்." என்ற கேள்விக்கு எனது பதில். எனது இந்த கற்பனையை உபயோகப்படுத்த விரும்புபவர்கள் உபயோகப்படுத்தலாம். ஆனால் அதன் முடிவை பின்னூட்டமாக கண்டிப்பாக இட வேண்டும்.