Thursday, May 24, 2012

நான் அறிந்து உணர்ந்த இந்து மதத்தின் பல அர்த்தங்களும், சில அபத்தங்களும் - 2 (பாவ புண்ணியம்)

"வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ?"

என்று கேள்வி எழுப்பியவர் கவிஞர் கண்ணதாசன்.

அதற்கு அழகாக பதில் கூறியவர் பட்டினத்தார். "தொட்டுத் தொடரும் இருவினை பாவ புண்ணியமுமே" அது என்ன பாவபுண்ணியம்? அதை அறிய முயலும் ஒரு முயற்சியே இந்த பதிவு.

மனம், வாக்கு, காயம் (உடல்) ஆகிய மூன்றின் மூலம் பிற உயிரினங்களுக்கு நன்மை செய்வது புண்ணியம் ஆகும். தீங்கு செய்வது பாவம் ஆகும். இந்த பாவமும்,புண்ணியம் மட்டுமே நம்மை/நம் ஆன்மாவை எப்பொழுதும் பற்றிக்கொண்டு வரும்.

ஜோதிடப்படி பூர்வ ஜென்ம பாவ புண்ணியங்களை நிறைவேறா ஆசைகளை அனுபவிக்கவே நாம்/நமது ஆன்மா பிறவி எடுக்கிறது. ஜோதிடத்தில் தசா-புத்தி என்ற காலக்கணக்கு உள்ளது. நாம் பிறந்த லக்கினத்தின்படி யோகாதிபதியின் தசை/புத்தி நடந்தால் நமக்கு நல்ல நேரம் என்று கொள்ளவேண்டும். அந்த நல்ல நேரத்தில், முன் ஜென்மத்தில் நாம் யார்க்கெல்லாம் நன்மை செய்தோமோ அவர்கள் நமக்கு இந்த ஜென்மத்தில் நன்மை செய்து விட்டுபோவர். உண்மையில் நல்ல நேரம் என்பது நமது முன் ஜென்ம புண்ணியங்களை அனுபவிக்கும் நேரம்.

அதேபோல துஷ்டஷ்தான அதிபதிகளின் தசா/புத்தி என்பது கெட்ட நேரம் ஆகும். அப்பொழுது பூர்வஜென்மத்தில் நாம் யாருக்கெல்லாம் தீங்கு செய்தோமோ அவர்கள் இந்த ஜென்மத்தில் நம்மை வாட்டிவதைத்து சென்று விடுவர். பூர்வ ஜென்மத்தில் ஏமாற்றி இருந்தோம் எனறால், இந்த ஜென்மத்தில் ஏமாற்றப்படுவோம். துரோகம் செய்து இருந்தால் நமக்கு துரோகம் இழைக்கப்படும். வினை விதைத்திருந்தால் வினை அறுப்போம். தினை விதைத்திருந்தால் தினை அறுப்போம். பொதுவாக நாம் பூர்வஜென்மத்தில் செய்த பாவங்களை அனுபவிக்கும் நேரமே கெட்ட நேரம் ஆகும். கெட்ட நேரத்திலும் ஒரு சந்தோஷமான விஷயம் என்னவென்றால் நமது பாவத்தின் அளவு குறையும்.

இதுவே இந்த கர்மபூமியின் எழுதப்படாத நியதி. கெட்ட நேரமும், நல்ல நேரமும் மாறி மாறி வரும். வெற்றியை மட்டும் ருசித்து வாழ்ந்தவனும் இல்லை. தோல்வியை மட்டும் ருசித்து இறந்தவனும் இல்லை. வெற்றியும்,தோல்வியும், நல்ல நேரமும், கெட்ட நேரமும் மாறி மாறி வரும்.

பூர்வஜென்ம கர்மாப்படி தான் (புண்ணியம்/பாவம்) இந்த வாழ்க்கை என்றால், இந்த ஜென்ம கர்மாப்படிதான் நமது அடுத்த வாழ்க்கையும் அமையும் என்பது தெளிவாகும்.நேற்று நான் செய்த செயலுக்கு, இன்றைய நிலைமை என்றால், இன்றைய எனது செயல் நாளைய எனது நிலைமையை தீர்மானிக்கும். இதைத்தான் திருமூலர் "தானே தமக்கு தலைவனும் ஆமே" என்றார். 'பாட்ஷா' படத்தில் ரஜினியும் 'உன் வாழ்க்கை உன் கையில்' என்றார்.

பூர்வஜென்ம கர்மாவின்படி நமது இந்த வாழ்க்கை எப்படியும் இருந்துவிட்டு போகிறது. இந்த ஜென்மத்தில் நாம் செய்யும் புண்ணியத்தில் நமது அடுத்த ஜென்மம் நன்றாக இருக்கும் என்பது உறுதி. இறைவனின் கருணை இருந்தால் நாம் இந்த ஜென்மத்தில் செய்யும் புண்ணியம், பூர்வஜென்ம கர்மாக்களை அடியோடு போக்கிவிடும். ஆக மொத்தத்தில் எத்தகைய துன்பத்தை நாம் அனுபவித்தாலும், இன்றிலிருந்து நாம் புண்ணிய வழியில் பயணப்பட்டால் நமக்கு இந்த/அடுத்த வாழ்க்கை நல்ல வாழ்க்கையாய் அமையும் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

அப்படிப்பட்ட புண்ணிய வழியில் பயணம் கொள்வது எப்படி?

‘'பாவம் என்ற கல்லறைக்கு பல வழி. என்றும் தர்மதேவன் கோயிலுக்கு ஒரு வழி' என்று அழகான வரி எழுதியுள்ளார் புலவர் புலமைப்பித்தன்.

முன்பே கூறியது போல புண்ணியவழி என்பது பிற உயிரினங்களுக்கு மனம், வாக்கு, காயம் ஆகியவற்றால் நன்மை செய்வது. அப்படிப்பட்ட புண்ணிய வழி நம்மை இறைவனின் அருகில் அழைத்து செல்லும். ஆனால் அத்தகைய வழி கடந்து செல்ல மிகவும் கடுமையானது. கல்லும், முள்ளும், தீய விலங்குகளும் நிறைந்த செங்குத்தான மலையில் ஏறிச்செல்லுவது போன்ற கடினமான பயணம் ஆகும். இதை சுட்டிக்காட்டவே முருகன் குன்றின் மேல் இருக்கிறான். ஐய்யப்பன் சபரிமலையில் வீற்றிருக்கிறான். சிவனும் சதுரகிரியிலும், திருவண்ணாமலையிலும், இமயமலையிலும் தவம் செய்கிறார். அவ்வளவு எளிதான பயணம் அல்ல, புண்ணிய வழி பயணம். ஆனால் இதில் ஓரே ஒரு நன்மை உண்டு.

புண்ணிய வழியில் பயணம் செய்தால் கல் குத்தும் (ஏளனங்கள் இருக்கும்), முள் குத்தும் (அவமானங்கள் ஏற்படும்), தீய விலங்குகள் அச்சுறுத்தும் (கொடும்பாவிகள் மிரட்டுவார்கள்). ஆனால் இந்த புண்ணிய வழியில் செல்பவர்களுக்கு இறைவன் துணையிருப்பான். 'என்ன நடந்தாலும் சரி, இந்த வழியை விட்டு விலகமாட்டேன்' என்று உறுதியோடு அவனை நோக்கி செல்பவர்களை அவன் எந்நேரமும் பற்றிக்கொண்டு இருப்பான். கல்லையும், முள்ளையும், தீய விலங்குகளையும் இறைவன் பார்த்துக்கொள்வான். அவன் அரவணைப்பில் கல்லும், முள்ளும் காலுக்கு மெத்தையாகும். தீய விலங்குகள் தெறித்து ஓடும்.

இதைத்தான் 'பாட்ஷா' படத்தில் ரஜினி சொல்வார், 'ஆண்டவன் நல்லவங்களை சோதிப்பான். ஆனால் கைவிடமாட்டான்.' அதுபோல இறைவன் நாம் அந்த புண்ணிய வழியில் செல்லும்போது வேதனைகளையும், இன்னல்களையும், இடர்களையும் கொடுத்து, 'புண்ணிய வழியில் இருந்து விலகுகிறோமா' என்று சோதிப்பான். சோதித்து பார்த்த பின்னரே தன் அருகாமையில் சேர்த்து கொள்வான்.

சரி. பாவ வழி எப்படி இருக்கும் என்பதையும் காண்போம். அது ECR ரோடில் பைக்கில் ஹாயாக செல்வது போன்றது ஆகும். சொகுசாக இருக்கும் பயணம். எப்பொழுது விபத்துக்குள்ளாவோம் என்று தெரியாது. அது இறைவனை நோக்கிய பயணம் இல்லாத காரணத்தினால் அவனும் துணைக்கு வரமாட்டான். பெட்ரோல் தீர்ந்து விட்டாலோ, விபத்து நடந்தாலோ யாரும் துணைக்கு வர மாட்டார்கள். இறைவனே துணைக்கு வராதபோது வேறு யார் வருவார்?

இதைத்தான் 'பாட்ஷா' படத்தில் ரஜினி சொல்வார், 'ஆண்டவன் கெட்டவங்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுப்பான். ஆனால் கைவிட்டுவிடுவான்.' எம்.ஜி.ஆரும் ஒரு படத்தில் சொல்வார், 'நல்லதுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் கடைசி வரைக்கும் நம் கூடவே இருப்பர். கெட்டதுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் ஒரு ஆபத்து என்றவுடன் பட்டமா பறந்து விடுவார்கள்.'

மொத்தத்தில், இறைவன் இந்த அழகிய உலகை படைத்துவிட்டு, பல ஆன்மாக்களை உலவ விட்டார். அவனை அடைய ஒரே ஒரு புண்ணிய வழியை மட்டும் உருவாக்கினார். கடுமையான, கடினமான வழி அது, ஆனால் அவ்வழியில் அவரே வழிகாட்டியும், துணையுமாவார். பாவ வழிகள் பலவற்றை மனிதன் உருவாக்கி இருக்கிறான். அது எளிமையானது, ஆனால் அபாயகரமானது.

எவ்வழியில் பயணப்படப்போகிறோம் என்பது நம் கையில்!!!