Tuesday, December 4, 2007

காதல் சொல்ல வந்தேன்...

"மனப்பூர்வமாக காதலிக்கிறேன்." என்று நான் கூறியதை கேட்டு, பூவிதழ் விரித்து,
"என்ன மீன் பண்ற?" என்று 'அலைபாயுதே' ஷாலினி மாதிரி கேட்டாய்.

"உன்னை நல்லபடியாக பார்த்து கொள்வேன்." என்று கண் பார்த்து கூறினேன்.

"'அந்நியன்' பட டயலாக் எல்லாம் சொல்லாதே !!" என்று முறைத்தாய்.

"உன்னுடன் இறுதி வரைக்கும் வாழ விரும்புகிறேன்." என்றேன் தட்டுத்தடுமாறி.

"அதற்கு நீ நண்பனாய் இருந்தால் போதுமே.." என்றாய் நக்கலாய்.

"உன்னை திருமணம் செய்து கொண்டு, சந்தோஷத்தை மட்டும் உன் கண்களில் கண்டு, மடிய விரும்புகிறேன்." என்று நீளமாய் கூறி முடித்தேன்.

என் கண்களை படித்த நீ, "என்னை திருமணம் செய்து கொள்ள 'காதல்' என்பது குறுக்கு வழியா?" வினவினாய்.

"இல்லை. திருமணம் செய்து கொள்ள உன்னை காதலிக்கவில்லை. காதல் செய்வதால் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன்." தீர்க்கமாய் சொன்னேன்.

"ஓ.. அப்படியா?? காதலிக்கும் போது என்ன செய்வாய்? திருமணம் முடிந்த பின்னர் என்ன செய்வாய்??" என்று குறும்பாய் கேட்டாள்.

"இது வரை 'உலக அழகி' பட்டம் பெற்ற எல்லாருடைய பெயர் பட்டியல் எடுப்பேன். எல்லோருக்கும், 'என் காதலி அந்த போட்டியில் கலந்து கொள்ளாத காரணத்தால் மட்டுமே நீங்கள் வெற்றி பெற்றீர்கள்' என்று கடிதம் அனுப்பி அவர்கள் திமிர் குறைப்பேன்." என்றேன் பெருமிதத்துடன்.

உள்ளம் மகிழ்ந்தாலும் அதை வெளிக்காட்டாமல், "ப்பூபூ... இவ்வளவுதானா?? மணலை கயிறாய் திரிப்பது, வானை வளைப்பது, போன்ற காரியத்தை செய்ய மாட்டயா??" என்றாய்.

"செய்ய முடியாதவற்றை பற்றி நான் வெளியில் சொல்வதில்லை. இன்னும் கேள். " என்று கூற, அலட்சியமாய் பார்ப்பது போல பாவனை காட்ட முயற்சி செய்து தோற்றாய்.

"'உன் முகத்தை பார்த்த பின்னர் தான் கடவுள் சந்திரனை படைத்தானோ??' என்று கவிதை என்ற பெயரில் கண்டதை சொல்வேன்." இதை கேட்டு, வந்த புன்னகையை மறைக்க உதடை மடித்தாய்.

"இப்படி பெரிய பொய் சொன்னாலும், அதை கேட்டு வெட்கப்படும் உன் அழகை ரசிப்பேன்." கண்ணடித்து சொன்னேன்.

பொய் கோபம் காட்டி, "சரி... சரி... கல்யாணம் செய்தால், என்னவெல்லாம் செய்வாய்??"

"நீ நால்வருக்கு மட்டும் மிக அழகாய் தெரிவாய். அந்த நால்வரில், நான் இருவராக இருக்க விரும்புகிறேன்". இது உனக்கு விளங்கவில்லை என்பது உனது புருவ அசைவில் இருந்தே தெரிந்தது.

"விளக்கமாய் சொல்கிறேன்... உன் தந்தைக்கு தாயாக தெரியும்போது, அழகாய் தெரிவாய். காதலனுக்கு, காதலியாய் இருக்கும்போது, அழகாய் தெரிவாய். கணவனுக்கு, தன் குழந்தையை சுமக்கும்போது அழகாய் தெரிவாய். மகனுக்கு, தாயாய் இருக்கும்போது அழகாய் தெரிவாய்." என்று கூறி மூச்சு வாங்கினேன்.

"ம்ம்ம்... காதலனாகவும், கணவனாகவும் என் அழகை ரசிக்க விரும்புகிறாய். அப்புறம்... " ஆர்வத்துடன் கேட்டாய்.

"உன் தந்தை உன்னை இந்த உலகத்திற்கு கொடுத்து என்னை பைத்தியக்காரனாய் ஆக்கியது போல, உன் பிரதியை உலகிற்கு கொடுத்து, என்னை போல் ஒருவனை பைத்தியக்காரன் ஆக்குவேன்..." மெல்லிய புன்னைகையுடன் சொன்னேன்.

"அவ்வளவுதானா?? இன்னும் இருக்கா??" உஷ்ண பெருமூச்சு ஒன்று விட்டாய்.

"என் மரணத்தில் மட்டுமே உன் கண்ணீரை காண்பேன்." என்று கடைசியாய் என் பிரம்மாஷ்திரத்தை பிரயோகித்தேன்.

"உண்மையாத்தான் சொல்றியா??" என நீ கேட்கும்போது, உன் கண்ணில் இருந்து நீர் வருவதை உணர்ந்தேன்.

உன்னிரு கரத்தையும், பிடித்து என் இரு கரத்தில் பொருத்தி, என் உதடு பதித்து, உன் இரு விழிகள் ஊடுருவி உன் இருதயத்தில் எதிரொலிக்கும்படி சொன்னேன், "ஐ மீன் இட்...."

பூமிக்கு மட்டும் உன் வெட்கப்படும் முகத்தை காட்டி, "நானும் மனப்பூர்வமாக காதலிக்கிறேன்." என முணுமுணுத்தாய்.

"என்ன மீன் பண்ற??" வாய் வரை வந்த கேள்வி, தொண்டையிலே செத்தது.



பின் குறிப்பு: இது கதையோ, கவிதையோ இல்லை. "ஓரு பெண்ணிடம் காதலை எப்படி வெளிப்படுத்தலாம்." என்ற கேள்விக்கு எனது பதில். எனது இந்த கற்பனையை உபயோகப்படுத்த விரும்புபவர்கள் உபயோகப்படுத்தலாம். ஆனால் அதன் முடிவை பின்னூட்டமாக கண்டிப்பாக இட வேண்டும்.

6 comments:

Rajkumar A said...

Enna kodumai sir...........

Rajkumar A said...

Enna kodumai sir ...............

Thanga mudiyale......

Anonymous said...

i read all your posts. they r nice

PREM BOB -Cyberdon said...

HI.... ENNA SOLRATHUNE THERIYULA... UNMAYA NALLLA IRUNTHATHU.... NEENGAL KOORIYA ANTHA KARUTHUKALIL PAATHIYAI NAAN ENNAVALLIDAM KOORI IRUKIREN.... aanall aval sevi saaika villai... aanalumm neengal kooriyathai...naan miguntha paravasathodum urchaakathudanum padithen... REALLYY SUPERB.'...GREAT...ithu mugasthuthi alla..."I mean it "... i want to read more such things... i want ur mail id..PLS NOTE this is my id prem_katt@yahoo.co.in

Rama said...

நன்றி, பிரேம் !!!

உங்கள் பின்னூட்டம் கண்டு, அகமகிழ்ந்தேன்.
"கரைப்பார் கரைத்தால், கல்லும் கரையும். " உங்கள் காதலி கரைய மாட்டாரா, என்ன??
இந்த கதையின் நாயகன் போல, நீங்களும் உங்கள் காதலில் வெற்றி பெற என் வாழ்த்துக்கள். விரைவில் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகிறேன்.

Rama said...

நன்றி இந்திரஜித்...
வருகைக்கு நன்றி, மீண்டும் வருக...