Saturday, May 8, 2010

பெண்மை என்னும் சக்தி

இன்று தாய்மையை போற்றும் அன்னையர் தினம். தாய்மையை பற்றி எழுத ஆசை. உலகில் மிகச்சிறந்தது 'தாய்மை' என்று ஜெய்சங்கர் ஒரு பழைய படத்தில் பாடுவார். 'தாய்மை'யின் தாய் பெண்மை ஆகும். தாய்மை என்பது பெண்மையின் ஒரு அங்கம் ஆகும். பெண்மை ப(போ)ற்றி எழுதினால், அது தாய்மையையும் குறிக்கும். ஆக மொத்தத்தில், பெண்மையை கம்பராமாயணத்தில், வில்லிபாரதத்தில் எப்படி போற்றப்பட்டுள்ளது என்பதை ஆராய்வதே இந்த கட்டுரையின் நோக்கம்.பெண்மையை போற்றி எழுதுவது மட்டுமே என் நோக்கம்.

பெண்மை பற்றி எழுதுவதற்கு, முதலில் எனது குரு வணக்கம் மகாகவிக்கு. பெண்மையை கொண்டாடிய பாரதிக்கே, பெண்மையின் மேன்மையை பற்றி முதலில் விளக்கி புரிய வைத்தவர் நிவேதிதா. நிவேதிதா, பெண்மையை பற்றி பின்வருமாறு பாரதியிடம் கூறி உள்ளார். "சாதி மதம் பிறப்பு காரணமான அநாகரிக வேற்றுமைகளை மறந்து விடு. பெண்மக்களைத் தாழ்வாக நினைக்காதே. மனைவியைக் காமத்துடன் நோக்காதே. மாதர்களை இருட்டில் தள்ளிவிட்டு அவர்கள் அறியாமல் ஆண்கள் மட்டும் மேலான நிலைக்கு ஒருபோதும் வரமுடியாது என்பதை உணர்ந்து கொள்."

முதலில் பெண்-ஆண் பற்றி அறிவோம். இந்து மதத்தில் சக்தி - சிவம் என்ற தத்துவம் உண்டு. இந்த உலகில் இரண்டு தான் உண்டு. ஒன்று பொருள் (Matter), இன்னொன்று இயக்கம் (Energy) ஆகும். நாம் கூட உடல்+உயிர் ஆவோம். உடல் என்பது பொருள் ஆகும், அதை இயக்குவது உயிர் ஆகும். அந்த உயிர் தான் சக்தியாகவும், உடல்தான் சிவமாகவும் கருதப்படுகிறது.

ஒருவர் இறந்த பிறகு, அவருடைய உயிர் (சக்தி) பராசக்தியுடன் இணைகிறது. உயிரில்லாத உடல் (சிவம்), சவமாகும். அந்த சவத்தை சிவன் வாழும் சுடுகாட்டில் எரிக்கப்பட்டு, பரமசிவனுடன் இணைகிறது. இந்து மதத்தின்படி பெண் என்பவள் சக்தி ஆவாள். ஆண் என்பவன் சிவம் ஆவான். ஆண் திறம்பட செயலாற்ற பெண் என்ற சக்தி இன்றியமையாதவளாகிறாள்.

ஒரு ஆடவன் முதலில் நல்ல முறையில் வளர தாய் உந்து சக்தியாயிருக்கிறாள். அவன் சமுதாயாத்தில் நல்ல முறையில் வாழ மனைவி உந்து சக்தியாயிருக்கிறாள். இறக்கும் வரை அவனை அரவணைத்து காக்கும் சக்தியாக மனைவியோ, மகளோ, தாயோ இருக்கிறாள். பிறப்பில் இருந்து இறக்கும் வரை செயலாற்ற ஆணுக்கு பெண் என்ற சக்தி தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறது. பெண்மையை பற்றி இந்த விளக்கத்தை நம் மனத்தில் நிறுத்திக்கொண்டு, ராமாயணத்தையும், பாரதத்தையும் ஆராய்வோம்.

ராமாயணத்தில் போரிட்டது இராமன். மகாபாரதத்தில் போரிட்டது பாண்டவர்கள். அந்த இரு மாபெரும் போரில் போரிட்டவர்கள் அனைவரும் ஆண்கள். அந்த போருக்கு மூலகாராணம், அதர்மத்தை வெல்வது ஆகும். ஆனால் அந்த தர்மத்தை வெல்வதற்கு உந்துசக்தியாய் இருந்தவர்கள் இருபெண்கள் (சீதையும், திரௌபதி) என்பது எல்லோரும் அறிந்ததே ! கம்பராமாயணத்திலும், வில்லிபாரதத்திலும் இந்த பெண்மை இரு காட்சியில் மேன்மேலும் (எனக்கு தெரிந்த அளவில்) போற்றப்பட்டுள்ளது. அதை காண்போம்.

கம்பராமாயணத்தில் கன்னி மாட காட்சி : சீதை கன்னி மாடத்தில் விளையாடி கொண்டிருக்கிறாள். இராமன் விஸ்வாமித்திரர் முனிவருடன் வந்து கொண்டிருக்கிறான். தனது சக்தியை பார்வையின் மூலம், வேறு எந்த ஆடவனுக்கும் தரக்கூடாது என்ற நோக்கத்தில், பூமித்தாயை மட்டும் பார்க்கிறாள். ராமனோ பாற்கடலில் தன்னை விட்டு பிரிந்து சென்ற சக்தியை தேடி மேல்நோக்கி பார்த்தபடியே நடக்கிறான்.

இந்த நேரத்தில் ஒரு சின்ன பிளாஷ்பேக். சீதை சிறுவயதில் விளையாடும்போது சிவதனுஷை விளையாட்டாக நகர்த்தி விட்டாள். அறுபதினாயிரம் பேர் கொண்டு தூக்கும் அந்த வில்லை அவள் ஒருத்தியே தூக்குகிறாள் என்றால், இவள் ஆதிபராசக்தியின் அம்சம் என்றுணர்ந்தான் ஜனகன். அதனால்தான் அந்த வில்லின் நாணேற்றுபவனுக்கு எனது மகள் என்று அறிவித்தான் ஜனகன். தனிப்பெரும் சக்தியாக மட்டுமே பெண்ணால் இயங்க (வில்லை நகர்த்தியது) முடியும் என்பது இங்கு குறிப்பு.

மறுபடியும் கன்னி மாட காட்சிக்கு வருவோம். இப்பொழுது இராமன் சீதையை பார்க்கிறான். சீதையின் முகத்தையும், இருதயத்தையும் பார்க்கிறான். சீதையோ இராமனின் முகம் பார்த்த பின்னர், அவனது தோளையும், கையையும் பார்க்கிறாள். முகம் பார்த்து பாற்கடலில் தன்னை பிரிந்தவன் என்று உணர்கிறாள். அடுத்து அவனை மணக்க வேண்டுமானால், அவன் வில்லின் நாணேற்ற வேண்டும். வில்லை தூக்க தோளுக்கு வலிமையும், நாணேற்ற கைகளுக்கு வலிமையும் தேவை. இராமனுக்கு அந்த சக்தியை அளிக்கவே அவனது தோளையும், கையையும் பார்த்தாள் என்பது கம்பன் சொல்லாமல் சொன்ன செய்தி.

'பெண் என்பவள் தன் சக்தியால் தனித்து இயங்கவும் முடியும். தேவைப்படும் நேரத்தில் அந்த சக்தியை ஆணுக்கு அளித்து, அவனை இயங்க வைத்து தேவையானதை பெற்றுக் கொள்ளவும் முடியும். ' என்பது இதில் தெளிவாக தெரியும் உண்மையாகும்.

இப்பொழுது எல்லோருக்கும் எழும் கேள்வி ஒன்று. அனுமன் ஒரு பிரம்மச்சாரி, பலசாலி, பராக்கிரமசாலி. அவருக்கு யார் சக்தியாக திகழ்கிறார்?? அதையும் ஆராய்வோம். அனுமன் கூட சுந்தர காண்டத்தில் முதலில் அமைதியானவராக இருப்பார். அதாவது அசோகவனத்தில் சீதை காணும்வரை பரம சாதுவாக, அமைதியாக இருந்தார். கடலை தாவும்போது ஓரே ஒரு அரக்கியை மட்டும் கொன்றார். சீதையை கண்டு சூடாமணியை வாங்கிய பின்னர் அவரின் செய்கையை பார்த்தால், ஊறுகாலத்தில் உலவும் ருத்திர மூர்த்தி போலிருக்கும். சீதையின் கற்புநிலை (சக்தி) கண்ட பின்னர், அவர் கொன்றவர்களின் பட்டியல் :- அசோகவனத்தின் காவலர்கள், கிங்கிரர்கள், சம்புமாலி, அக்கயகுமாரன். ஆக மொத்தத்தில், அனுமன், சுந்தர காண்டத்தின் முதல்பகுதியில், (சீதை காண வேண்டும் என்று) தவம் புரியும் சிவனாகவும், பிற்பகுதியில் (சீதையை கண்டு சக்தி பெற்று) ருத்திர தாண்டவம் ஆடும் சங்கரனாகவும் காட்சியளிக்கிறார்.

'இவளின் கற்புநிலை இந்த உலகையே உய்விக்ககூடிய சக்தி வாய்ந்தது. அப்படிப்பட்ட பெண்ணை மணந்த இராமன் சர்வ நிச்சயமாக அண்டர் நாயகன்.', என்று உணர்ந்து இராமபக்தன் ஆனான் அனுமன். அவனுக்கு சக்தி அளிப்பது ஸ்ரீஇராம நாமமும், அவன் மனதில் என்றும் வாழும் ஜானகி-ராமனும் ஆகும். [இராமனுக்கு யார் சக்தியாய் திகழ்கிறார் என்று ஏற்கனவே பார்த்தாகிவிட்டது.]

இப்பொழுது வில்லி பாரதத்திற்கு வருவோம். பாண்டவர்களின் பதினான்கு வனவாசமும், ஓராண்டு அஞ்ஞாதவாசமும் முடிந்து போருக்கு தயார் ஆகின்றனர். அதற்கு முன்னர், கிருஷ்ணனை தூது அனுப்ப முடிவு செய்துள்ளனர். அப்பொழுது கிருஷ்ணனுக்கும் சகாதேவனுக்கும் ஏற்படும் உரையாடலில் கிருஷ்ணன் சகாதேவனிடம் ஒரு சவால் விடுகிறான். அதாவது, 'பாரதப்போரை நிறுத்த முடியுமா?' என்று கிருஷ்ணன் கேட்கிறான். சகாதேவனும், மூன்று காரியங்கள் செய்தால் நிறுத்தலாம் என்று பதிலளித்தான். அவைகள் பின்வருமாறு ...

1. வில் விஜயனை கொன்று விடுதல் - விஜயன் இருக்கும் தைரியத்தில் தான் மற்ற நால்வரும் போரை கண்டு அஞ்சவில்லை. விஜயனை கொன்று விட்டால், தருமர் போரை தொடங்க மாட்டார்.
2. கிருஷ்ணனை கட்டி போடுதல் - தான் நினைத்தது நடக்க எல்லா விதமான குட்டி கலாட்டா செய்பவன் கிருஷ்ணன். கௌரவர்களை கொல்ல வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், தனி ஒருவனாக சென்று போரை நடத்தி முடித்து விடுவான். ஆகையால் இவனை கட்டிப்போட்டே ஆக வேண்டும்.
3. திரௌபதிக்கு மொட்டை போடுதல் - திரௌபதி தனது சபதத்தின் காரணமாக தலைவிரி கோலமாக இருக்கிறாள். அவளது முடியாத கூந்தலை பார்க்கும்பொழுது எல்லாம் நால்வருக்கும் அந்த துகிலுரிப்பு சம்பவம் நினைவுக்கு வந்து கௌரவர்கள் மேல் தாங்கவொண்ணா கோபம் வரும். அது போருக்கு வழி வகுக்கும்.

சகாதேவன் இந்த மூன்றுமே செய்ய வேண்டும் என்று கூறுகிறான். விஜயனை கொன்ற பின்னரும், கிருஷ்ணனை கட்டிப் போட்ட பிறகும், பாரதப்போரை நடத்தும் சக்தி திரௌபதியின் கூந்தலுக்கு உண்டு என்பது சகாதேவனின் வாதத்தின் அடிநாதம். 'குருடனின் மகன் குருடன்' என்று சொல்லி, பாரத போருக்கு அடித்தளம் அமைத்ததும் திரௌபதி. துரியோதனனுடைய இரத்தத்தை தனது கூந்தலில் தடவி, அப்போரை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தவளும் திரௌபதி.

மொத்தத்தில் பெண்மை என்ற சக்தி அளப்பரியது. அதை திரௌபதி போல் குடும்பச்சண்டைக்கு பயன்படுத்தி தத்தம் குடும்பத்தையும், வம்சத்தையும் (அபிமன்யு, பீமனின் மகன் கடோத்கஜன்) அழிக்க வேண்டாம். சீதையை போல் அதர்மத்தை (அசுர வம்சம்) மட்டும் அழிக்க பயன்படட்டுமே...

Saturday, April 10, 2010

வள்ளுவன் காட்டும் இறைவன்...

எனது இந்த 50வது பதிவு, நிலையான ஒரு தத்துவத்தை பற்றியதாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். நிலை மாறும் இவ்வுலகில் நிலையான ஒன்று இறைவன் மட்டுமே. இறைவனை விவாதப் பொருளாக எடுத்தால், அந்த விவாதம் முற்றுப் பெறாது என்பதை, எனது முந்தைய பதிவில் தெரிவித்து இருந்தேன். இம்முறை இறைவனை பாடுபொருளாக வைத்து எழுத எனக்கு தகுதியில்லை என்பதை நன்கு அறிவேன். அச்சமயம், எனது ஆசான், வள்ளுவன் என் நினைவுக்கு வந்தான். நாம் தினம் தினம் சந்திக்கும் பிரச்சனைகள், கேள்விகள், சந்தேகங்கள், அனைத்திற்கும் வள்ளுவனின் குறளில் தீர்வு உள்ளது. அப்படியென்றால் இறைவனை பற்றிய எனது கேள்விக்கும் வள்ளுவனிடம் பதில் இல்லாமலா போய்விட போகிறது. இறைவனை பற்றிய எனது ஏழு (ஒவ்வொரு குறளின் நீளம் ஏழு வார்த்தைகள்தானே..) கேள்விகளுக்கு வள்ளுவன் கூறும் பதிலை காணலாம்.

முதலில் எனது கேள்வி இருக்கும். அதன் பின்னர் பதிலாக வள்ளுவனின் குறள்/குறளின் சில வார்த்தைகள் இருக்கும். வள்ளுவனின் அந்த பதிலை நான் எவ்வாறு புரிந்து கொண்டேன் என்பதை, அதன்பின்னர் விளக்கி இருக்கிறேன். எனது கேள்விக்கு ஏற்றாற் போல குறளின் வரிசையை மட்டும் மாற்றி இருக்கிறேன். பொருளை மாற்றவில்லை. தவறு இருப்பின், வள்ளுவனின் நேசர்கள் என்னை மன்னிக்கவும்.

முதல் கேள்வி : இறைவன் இருக்கிறானா??

பதில் : ஆதி பகவன் முதற்றே உலகு.

விளக்கம்: 'உலகு' என்பது ஆகுபெயர். இந்த பூமியை மட்டுமில்லாமல், பூமியில் வாழும் உயிர்களையும் சேர்த்து உலகு என்று குறிப்பிடுகிறார். ஆக இப்புவியில் முதலில் தோன்றிய உயிருக்கும், கடைசியில் தோன்றும் உயிருக்கும் முதன்மையானவன் அவன். அப்படிப்பட்ட முதன்மையானவன் இல்லாமல் இருப்பானா?? நம்மை இந்த உலகிற்கு கொண்டு வந்த தாய்-தந்தையரும் இறைவனின் அம்சமாக கருதப்படுவதற்கும் காரணம் இதுவே... தாய் மூலம்தான் நாம் இந்த உலகிற்கு பிறந்தோம் என்று நம்புவோமேயானால், இறைவன் இருப்பதையும் நம்பித்தான் தீர வேண்டும்.

இரண்டாம் கேள்வி: 'எனது தாயை காண்கிறேன். அவளுடன் பேசுகிறேன். அவள் பேச்சை கேட்கிறேன்.' என்பதனால் அவள் இருப்பை நான் நம்புகிறேன். பார்க்க முடியாத, கேட்க முடியாத, இறைவனை இருப்பதாய் நான் எப்படி நம்ப முடியும்?

பதில் : தனக்குவமை இல்லாதான், எண்குணத்தான்.

விளக்கம்:- புரியாத ஒன்றை எளிதாய் புரிய வைக்க 'உவமை' கையாளப்படும். 'வெள்ளத்தனைய...', 'இனிய உளவாக...' போன்ற குறள்களில் உவமைகளை வெகுவாக, அழகாக கையாண்ட வள்ளுவனே இறைவனை ஒரு உவமைக்குள் அடக்க இயலவில்லை. ஐம்பொறிகளால் நாம் இறைவனை உணர முடியுமென்றால், வள்ளுவன் உவமையுடன் விளக்கி இருப்பான். ஆக மனதினால் மட்டுமே இறைவனை நீ உணர முடியும் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

பிறவிக்குருடர்கள் யானையை தொட்டுப்பார்த்து அவரவர் கற்பனைக்கு ஏற்றபடி உணர்ந்து கொள்வதுபோல், மனதினால் இறைவனின் எண்குணத்தை உணரலாம்.

மூன்றாவது கேள்வி: மனதினால் மட்டுமே உணர முடிகின்ற இறைவனின் இயல்புகள் என்னென்ன?? (அல்லது) நான் இறைவனாக முடியுமா??

பதில் : வேண்டுதல் வேண்டாமை இலான், பொறிவாயில் ஐந்தவித்தான், அறவாழி.

விளக்கம் : இறைவன் விருப்பு-வெறுப்பு அற்றவன். இவ்வுலக பொருள்களின்,உயிர்களின் மேல் விருப்பு-வெறுப்பு இருக்கும்பட்சத்தில் மனிதனுக்கு மன அமைதி இல்லாமல் போய்விடுகிறது. ஆக இந்த இரண்டும் இல்லாமல் சமநிலையில் இருக்கும்போது நாம் இறைவனாவோம். உதாரணம்: ரமணர். மனோநாசம் செய்து, விருப்பு-வெறுப்பு அற்றவர்.
இறைவன் ஐம்புல ஆசைகளை ஒழித்தவன். உலக ஆசைகள் எல்லாம் துறந்தால், நாமும் இறைவனாய் போற்றப்படுவோம். உதாரணம்: புத்தர், பட்டினத்தார்.
இறைவன் அறக்கடல். 'அறன் வலியுறுத்தல்' அதிகாரத்தில் அறத்தை பற்றி இன்னும் நிறைய சொல்லியிருக்கிறார். வள்ளுவன் வலியுறுத்தும் அறங்களை,நெறிகளை பின்பற்றினால், 'வானுறையும் தெய்வத்துள் வைக்கபடும்' என்று அவரே கூறியிருக்கிறார். உதாரணம்: பகவான் ராம கிருஷ்ணர், வள்ளலார்.

நான்காம் கேள்வி: அத்தகைய இயல்புடைய இறைவன் அவர் வேலையை பார்த்துக் கொண்டு இருக்கட்டும். நான் என் வேலையை பார்த்து கொண்டு இருக்கிறேன். எனக்கும் அவருக்கும் தொடர்பற்ற நிலையில் இருந்துவிட்டு போகிறோமே.. என்ன கெட்டு போச்சு??

பதில் : கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.


விளக்கம் : என்னை அடித்து துவைத்த குறள் இது. இது வள்ளுவனின் இரண்டாவது குறள். முதல் குறளில் இறைவனை வணங்குகின்றார். அடுத்த குறளிலேயே நம் அனைவரையும் வணங்க சொல்கிறார். தனது குறளை படித்து அர்த்தம் புரிந்து கற்க முடியுமென்றால், அக்கல்வியின் பயனாக இறைவனை தொழுதே தீர வேண்டும் என ஆணித்தரமாக அடித்து சொல்கிறார்.

படிப்பது வேறு, கற்பது வேறு. படித்த,கேட்ட, மற்றவர் செய்து காட்டிய ஒன்றை நாம் செய்து பார்த்து அதை உணர்ந்து கொள்வதே கற்பது. அப்படி, நாம் உணர்ந்து கற்றுக்கொள்ள உறுதுணையாய் இருக்கும் இறைவனை தொழாமல் இருப்பது தவறு என்று இடித்துரைக்கிறார்.

ஐந்தாம் கேள்வி: இறைவனை தொழ வேண்டும் என்று சொல்கிறீர்கள். நான் தொழுவதால் எனக்கு என்ன பயன்?

பதில்: இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு


விளக்கம்: இறைவனின் உண்மையான புகழை விரும்பி நினைக்கும் அன்பர்க்கு அறியாமையால் வரும் நல்வினை, தீவினை ஆகிய இரண்டும் அடைவதில்லை.

ஆறாம் கேள்வி: தொழ வேண்டிய அந்த இறைவனை நான் தொழாமல் போனால் என்னாகும் ? (அல்லது) இறைவனை தொழுவதால் ஏற்படும் பயன் எனக்கு ஒன்றும் தேவையில்லை. அப்படி தொழாமல் இருந்து விட்டு போகிறேனே... என்ன கெட்டு போச்சு??

பதில்: பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.


விளக்கம்: பிறவி என்னும் பெருங்கடலில் நாம் அனைவரும் விழுந்து விட்டோம். அதான், பிறந்து விட்டோமே. கரை சேர வேண்டுமென்றால் இறைவனடியை தொழ வேண்டும். இல்லையென்றால் கரை சேர முடியாது.

ஏழாவது கேள்வி: ஒரு செயலை செய்யாவிட்டால் தீங்கு கண்டிப்பாக ஏற்படும். செய்தால் நன்மை ஏற்படும். அப்படிப்பட்ட செயலை செய்பவன் அறிவாளி, செய்யாதவன் கற்றறிந்த மூடன். இறைவனை தொழுவதும் அப்படிப்பட்ட செய்கையே ஆகும். நான் எப்படி இறைவனை தொழ வேண்டும்?? எந்த முறை சிறந்த முறை?

பதில் : மலர்மிசை ஏகினான்

விளக்கம் : அன்பரின் நெஞ்ச மலரில் வீற்றிருப்பவன் இறைவன். நமக்கு விருப்பபட்ட உருவத்தில் (விநாயகராய்,முருகனாய்,பெருமாளாய், அபிராமியாய்,இயேசுவாய்,அல்லாவாய், ராமனாய், கிருஷ்ணனாய், புத்தரை, அனுமானாய், ஈஷ்வரனாய்) இறைவனை அன்புடன் மனத்தினில் நினைத்தாலே, நமது இதய கமலத்தில் வந்து வீற்றிருப்பான். நமது வீட்டிற்கு வந்த ஒரு விருந்தினரை, குழந்தையை கனிவாய் கவனிப்பது போல், நமது இதய கமலத்தில் வந்து குடியேறிய இறைவனையும் விருப்பபடி உபசரிப்பதே மிகச்சிறந்த தொழுகையாகும்.