இன்று தாய்மையை போற்றும் அன்னையர் தினம். தாய்மையை பற்றி எழுத ஆசை. உலகில் மிகச்சிறந்தது 'தாய்மை' என்று ஜெய்சங்கர் ஒரு பழைய படத்தில் பாடுவார். 'தாய்மை'யின் தாய் பெண்மை ஆகும். தாய்மை என்பது பெண்மையின் ஒரு அங்கம் ஆகும். பெண்மை ப(போ)ற்றி எழுதினால், அது தாய்மையையும் குறிக்கும். ஆக மொத்தத்தில், பெண்மையை கம்பராமாயணத்தில், வில்லிபாரதத்தில் எப்படி போற்றப்பட்டுள்ளது என்பதை ஆராய்வதே இந்த கட்டுரையின் நோக்கம்.பெண்மையை போற்றி எழுதுவது மட்டுமே என் நோக்கம்.
பெண்மை பற்றி எழுதுவதற்கு, முதலில் எனது குரு வணக்கம் மகாகவிக்கு. பெண்மையை கொண்டாடிய பாரதிக்கே, பெண்மையின் மேன்மையை பற்றி முதலில் விளக்கி புரிய வைத்தவர் நிவேதிதா. நிவேதிதா, பெண்மையை பற்றி பின்வருமாறு பாரதியிடம் கூறி உள்ளார். "சாதி மதம் பிறப்பு காரணமான அநாகரிக வேற்றுமைகளை மறந்து விடு. பெண்மக்களைத் தாழ்வாக நினைக்காதே. மனைவியைக் காமத்துடன் நோக்காதே. மாதர்களை இருட்டில் தள்ளிவிட்டு அவர்கள் அறியாமல் ஆண்கள் மட்டும் மேலான நிலைக்கு ஒருபோதும் வரமுடியாது என்பதை உணர்ந்து கொள்."
முதலில் பெண்-ஆண் பற்றி அறிவோம். இந்து மதத்தில் சக்தி - சிவம் என்ற தத்துவம் உண்டு. இந்த உலகில் இரண்டு தான் உண்டு. ஒன்று பொருள் (Matter), இன்னொன்று இயக்கம் (Energy) ஆகும். நாம் கூட உடல்+உயிர் ஆவோம். உடல் என்பது பொருள் ஆகும், அதை இயக்குவது உயிர் ஆகும். அந்த உயிர் தான் சக்தியாகவும், உடல்தான் சிவமாகவும் கருதப்படுகிறது.
ஒருவர் இறந்த பிறகு, அவருடைய உயிர் (சக்தி) பராசக்தியுடன் இணைகிறது. உயிரில்லாத உடல் (சிவம்), சவமாகும். அந்த சவத்தை சிவன் வாழும் சுடுகாட்டில் எரிக்கப்பட்டு, பரமசிவனுடன் இணைகிறது. இந்து மதத்தின்படி பெண் என்பவள் சக்தி ஆவாள். ஆண் என்பவன் சிவம் ஆவான். ஆண் திறம்பட செயலாற்ற பெண் என்ற சக்தி இன்றியமையாதவளாகிறாள்.
ஒரு ஆடவன் முதலில் நல்ல முறையில் வளர தாய் உந்து சக்தியாயிருக்கிறாள். அவன் சமுதாயாத்தில் நல்ல முறையில் வாழ மனைவி உந்து சக்தியாயிருக்கிறாள். இறக்கும் வரை அவனை அரவணைத்து காக்கும் சக்தியாக மனைவியோ, மகளோ, தாயோ இருக்கிறாள். பிறப்பில் இருந்து இறக்கும் வரை செயலாற்ற ஆணுக்கு பெண் என்ற சக்தி தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறது. பெண்மையை பற்றி இந்த விளக்கத்தை நம் மனத்தில் நிறுத்திக்கொண்டு, ராமாயணத்தையும், பாரதத்தையும் ஆராய்வோம்.
ராமாயணத்தில் போரிட்டது இராமன். மகாபாரதத்தில் போரிட்டது பாண்டவர்கள். அந்த இரு மாபெரும் போரில் போரிட்டவர்கள் அனைவரும் ஆண்கள். அந்த போருக்கு மூலகாராணம், அதர்மத்தை வெல்வது ஆகும். ஆனால் அந்த தர்மத்தை வெல்வதற்கு உந்துசக்தியாய் இருந்தவர்கள் இருபெண்கள் (சீதையும், திரௌபதி) என்பது எல்லோரும் அறிந்ததே ! கம்பராமாயணத்திலும், வில்லிபாரதத்திலும் இந்த பெண்மை இரு காட்சியில் மேன்மேலும் (எனக்கு தெரிந்த அளவில்) போற்றப்பட்டுள்ளது. அதை காண்போம்.
கம்பராமாயணத்தில் கன்னி மாட காட்சி : சீதை கன்னி மாடத்தில் விளையாடி கொண்டிருக்கிறாள். இராமன் விஸ்வாமித்திரர் முனிவருடன் வந்து கொண்டிருக்கிறான். தனது சக்தியை பார்வையின் மூலம், வேறு எந்த ஆடவனுக்கும் தரக்கூடாது என்ற நோக்கத்தில், பூமித்தாயை மட்டும் பார்க்கிறாள். ராமனோ பாற்கடலில் தன்னை விட்டு பிரிந்து சென்ற சக்தியை தேடி மேல்நோக்கி பார்த்தபடியே நடக்கிறான்.
இந்த நேரத்தில் ஒரு சின்ன பிளாஷ்பேக். சீதை சிறுவயதில் விளையாடும்போது சிவதனுஷை விளையாட்டாக நகர்த்தி விட்டாள். அறுபதினாயிரம் பேர் கொண்டு தூக்கும் அந்த வில்லை அவள் ஒருத்தியே தூக்குகிறாள் என்றால், இவள் ஆதிபராசக்தியின் அம்சம் என்றுணர்ந்தான் ஜனகன். அதனால்தான் அந்த வில்லின் நாணேற்றுபவனுக்கு எனது மகள் என்று அறிவித்தான் ஜனகன். தனிப்பெரும் சக்தியாக மட்டுமே பெண்ணால் இயங்க (வில்லை நகர்த்தியது) முடியும் என்பது இங்கு குறிப்பு.
மறுபடியும் கன்னி மாட காட்சிக்கு வருவோம். இப்பொழுது இராமன் சீதையை பார்க்கிறான். சீதையின் முகத்தையும், இருதயத்தையும் பார்க்கிறான். சீதையோ இராமனின் முகம் பார்த்த பின்னர், அவனது தோளையும், கையையும் பார்க்கிறாள். முகம் பார்த்து பாற்கடலில் தன்னை பிரிந்தவன் என்று உணர்கிறாள். அடுத்து அவனை மணக்க வேண்டுமானால், அவன் வில்லின் நாணேற்ற வேண்டும். வில்லை தூக்க தோளுக்கு வலிமையும், நாணேற்ற கைகளுக்கு வலிமையும் தேவை. இராமனுக்கு அந்த சக்தியை அளிக்கவே அவனது தோளையும், கையையும் பார்த்தாள் என்பது கம்பன் சொல்லாமல் சொன்ன செய்தி.
'பெண் என்பவள் தன் சக்தியால் தனித்து இயங்கவும் முடியும். தேவைப்படும் நேரத்தில் அந்த சக்தியை ஆணுக்கு அளித்து, அவனை இயங்க வைத்து தேவையானதை பெற்றுக் கொள்ளவும் முடியும். ' என்பது இதில் தெளிவாக தெரியும் உண்மையாகும்.
இப்பொழுது எல்லோருக்கும் எழும் கேள்வி ஒன்று. அனுமன் ஒரு பிரம்மச்சாரி, பலசாலி, பராக்கிரமசாலி. அவருக்கு யார் சக்தியாக திகழ்கிறார்?? அதையும் ஆராய்வோம். அனுமன் கூட சுந்தர காண்டத்தில் முதலில் அமைதியானவராக இருப்பார். அதாவது அசோகவனத்தில் சீதை காணும்வரை பரம சாதுவாக, அமைதியாக இருந்தார். கடலை தாவும்போது ஓரே ஒரு அரக்கியை மட்டும் கொன்றார். சீதையை கண்டு சூடாமணியை வாங்கிய பின்னர் அவரின் செய்கையை பார்த்தால், ஊறுகாலத்தில் உலவும் ருத்திர மூர்த்தி போலிருக்கும். சீதையின் கற்புநிலை (சக்தி) கண்ட பின்னர், அவர் கொன்றவர்களின் பட்டியல் :- அசோகவனத்தின் காவலர்கள், கிங்கிரர்கள், சம்புமாலி, அக்கயகுமாரன். ஆக மொத்தத்தில், அனுமன், சுந்தர காண்டத்தின் முதல்பகுதியில், (சீதை காண வேண்டும் என்று) தவம் புரியும் சிவனாகவும், பிற்பகுதியில் (சீதையை கண்டு சக்தி பெற்று) ருத்திர தாண்டவம் ஆடும் சங்கரனாகவும் காட்சியளிக்கிறார்.
'இவளின் கற்புநிலை இந்த உலகையே உய்விக்ககூடிய சக்தி வாய்ந்தது. அப்படிப்பட்ட பெண்ணை மணந்த இராமன் சர்வ நிச்சயமாக அண்டர் நாயகன்.', என்று உணர்ந்து இராமபக்தன் ஆனான் அனுமன். அவனுக்கு சக்தி அளிப்பது ஸ்ரீஇராம நாமமும், அவன் மனதில் என்றும் வாழும் ஜானகி-ராமனும் ஆகும். [இராமனுக்கு யார் சக்தியாய் திகழ்கிறார் என்று ஏற்கனவே பார்த்தாகிவிட்டது.]
இப்பொழுது வில்லி பாரதத்திற்கு வருவோம். பாண்டவர்களின் பதினான்கு வனவாசமும், ஓராண்டு அஞ்ஞாதவாசமும் முடிந்து போருக்கு தயார் ஆகின்றனர். அதற்கு முன்னர், கிருஷ்ணனை தூது அனுப்ப முடிவு செய்துள்ளனர். அப்பொழுது கிருஷ்ணனுக்கும் சகாதேவனுக்கும் ஏற்படும் உரையாடலில் கிருஷ்ணன் சகாதேவனிடம் ஒரு சவால் விடுகிறான். அதாவது, 'பாரதப்போரை நிறுத்த முடியுமா?' என்று கிருஷ்ணன் கேட்கிறான். சகாதேவனும், மூன்று காரியங்கள் செய்தால் நிறுத்தலாம் என்று பதிலளித்தான். அவைகள் பின்வருமாறு ...
1. வில் விஜயனை கொன்று விடுதல் - விஜயன் இருக்கும் தைரியத்தில் தான் மற்ற நால்வரும் போரை கண்டு அஞ்சவில்லை. விஜயனை கொன்று விட்டால், தருமர் போரை தொடங்க மாட்டார்.
2. கிருஷ்ணனை கட்டி போடுதல் - தான் நினைத்தது நடக்க எல்லா விதமான குட்டி கலாட்டா செய்பவன் கிருஷ்ணன். கௌரவர்களை கொல்ல வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், தனி ஒருவனாக சென்று போரை நடத்தி முடித்து விடுவான். ஆகையால் இவனை கட்டிப்போட்டே ஆக வேண்டும்.
3. திரௌபதிக்கு மொட்டை போடுதல் - திரௌபதி தனது சபதத்தின் காரணமாக தலைவிரி கோலமாக இருக்கிறாள். அவளது முடியாத கூந்தலை பார்க்கும்பொழுது எல்லாம் நால்வருக்கும் அந்த துகிலுரிப்பு சம்பவம் நினைவுக்கு வந்து கௌரவர்கள் மேல் தாங்கவொண்ணா கோபம் வரும். அது போருக்கு வழி வகுக்கும்.
சகாதேவன் இந்த மூன்றுமே செய்ய வேண்டும் என்று கூறுகிறான். விஜயனை கொன்ற பின்னரும், கிருஷ்ணனை கட்டிப் போட்ட பிறகும், பாரதப்போரை நடத்தும் சக்தி திரௌபதியின் கூந்தலுக்கு உண்டு என்பது சகாதேவனின் வாதத்தின் அடிநாதம். 'குருடனின் மகன் குருடன்' என்று சொல்லி, பாரத போருக்கு அடித்தளம் அமைத்ததும் திரௌபதி. துரியோதனனுடைய இரத்தத்தை தனது கூந்தலில் தடவி, அப்போரை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தவளும் திரௌபதி.
மொத்தத்தில் பெண்மை என்ற சக்தி அளப்பரியது. அதை திரௌபதி போல் குடும்பச்சண்டைக்கு பயன்படுத்தி தத்தம் குடும்பத்தையும், வம்சத்தையும் (அபிமன்யு, பீமனின் மகன் கடோத்கஜன்) அழிக்க வேண்டாம். சீதையை போல் அதர்மத்தை (அசுர வம்சம்) மட்டும் அழிக்க பயன்படட்டுமே...
Saturday, May 8, 2010
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
amazing words about women......
Post a Comment