Tuesday, February 21, 2012

நான் அறிந்து உணர்ந்த இந்து மதத்தின் பல அர்த்தங்களும், சில அபத்தங்களும் - 1 (ஏன் பல கடவுள்கள்?)

இந்து மதத்தில் மட்டும் பல கடவுள்கள் உண்டு. ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. இத்தனை கடவுள்கள் தேவையா என்று என்னுள் எழுந்த கேள்வியின் பதிலே இந்த பதிவு.

நாட்டில் பல கட்சிகள் இருக்கும், ஒவ்வொன்றிற்க்கும் ஒரு தலைவர், ஒரு கொள்கை இருக்கும். அது போல் இந்து மதத்தில் இருக்கும் ஒவ்வொரு கடவுள்களும் ஒரு தத்துவத்தை உணர்த்துகின்றனர். வாழ்க்கை நெறியை நமக்கு போதிக்கின்றனர். அவர்கள் வழியில் பயணப்படுவதே வழிபாடு ஆகும். ஒவ்வொரு இறைவனின் வாழ்க்கை நெறியை நான் அறிந்தவரை இங்கு சொல்லியிருக்கிறேன்.

விநாயகர்: முழுமுதற்கடவுள். எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்கும் முன்னர் வழிபட வேண்டியவர். எந்தவொரு காரியத்தையும் இறை நம்பிக்கையுடனும், இறை அனுமதியுடனும் செய்ய வேண்டும் என்பது இவர் கூறும் நெறி. மற்றொன்று, ஜீவகாருண்யம். இவரது தலை யானையின் தலை, வாகனம் எலி, இடுப்பில் இருப்பது நாகம். ஆக எல்லா உயிர்களிலும் யான் இருக்கிறேன்,ஆக எல்லா உயிர்களிலும் என்னைக் காண்,அன்பு செலுத்து என்பது இவர் கூறும் நெறி.

ஈசன்: சுடலையில் இருப்பவர். பற்றற்ற நிலை, இவர் கூறும் நெறி. இரு மகன்கள், இரு மனைவியர் கொண்ட இந்த இல்லறத்தான் இருப்பதோ சுடலை. இவரது ஆடை புலியின் தோல், ஆபரணம் நாகம். பற்று விடுத்து பரமானந்த நிலையில் நாட்டியம் புரிபவர். இல்லறத்தில் இருந்தும் பற்றற்று இருந்து இறைவனை அடையும் நெறி இவர் கூறும் நெறி.

முருகன்: அழகன். தமிழ்க்கடவுள். வேலுடன் இவர் கூறும் நெறி அறிவுள்ள வாழ்க்கை. வேலுடன் இருந்தால் இராஜ அலங்காரத்தில் இருப்பார். வேலில்லை என்றால் தண்டுடன் ஆண்டி கோலத்தில் இருப்பார். இவரது வேல் கூர்மையாகவும், நீளமாகவும், அகலாமகவும் இருக்கும். அறிவும் அப்படியே இருக்க வேண்டும். கூர்மையான அறிவு, ஆழ்ந்து கற்றுணர்ந்த அறிவு, பல துறைகளை கற்ற அறிவுடன் இருக்க வேண்டும்.

இராமன்: ஏக பத்தினி விரதன். ஒரு மனிதன் பல பாத்திரங்களில் வாழ வேண்டும். முடிந்த வரையில் எல்லாரிடமும் நற்பெயர் எடுக்க வேண்டும். நல்ல மகனாக, தாய்-தந்தை பேச்சு கேட்டு வனம் சென்றார். நல்ல அண்ணனாக தம்பி மூவரையும் நல்வழிபடுத்தினார். நல்ல கணவனாக சீதையை இலங்கையில் இருந்து மீட்டு வந்தார். நல்ல நண்பனாக வாலியை வதம் செய்து சுக்ரீவனுக்கு அரசுரிமையை வாங்கி தந்தார். நல்ல தலைவனாக இருந்து அனுமனுக்கு நல்வழி காட்டினார். நம்பி வந்த விபீஷணனுக்கு அடைக்கலம் தந்து அரசுரிமை தந்தார். நம்பி இருந்த சபரிக்கு மோட்சம் தந்தார். தன்மேல் குற்றச்சாட்டு இருந்தாலும்/விழுந்தாலும் இயன்றவரையில் நற்பெயர் எடுக்க வேண்டும் எனபது இவர் கூறும் நெறி.

அனுமன்: நாகத்தை பயத்தினால் கும்பிடுவோம். ஆனையை ஆசையால் ஆசிர்வாதம் வாங்குவோம். இந்த குரக்குசீயத்தை எதற்கு வழிபடுகிறோம்? மனம் ஒரு குரங்கு. அந்த குரங்கை(மனத்தை) அடக்கிய் அனுமன் இவர். தன் வாழ்க்கை மற்றவர்க்கு உதவுவதற்கே, என்பது இவர் கூறும் நெறி. சீதை தற்கொலை செய்ய ஆயத்தம் ஆகும் வேளையில், இராம கானம் பாடி சீதையை காப்பாற்றியவர். 'கண்டேன் சீதையை' என்று கூறி இராமனுக்கு நம்பிக்கை விதைத்தவர். சஞ்சீவி மூலிகை கொண்டு வந்து கொடுத்து இலட்சுமணனை உயிர் பிழைக்க வைத்தவர். 'இராமன் வருகிறான்' என்று கூறி பரதனின் தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தியவர். விபீஷணனை பற்றி உயர்வாக கூறி இராமனிடம் அடைக்கலம் புகுத்தியவர். இலங்கை சென்று இராவணனுக்கு நற்புத்தி கூறியவர். யுகம் யுகமாய் மற்றவருக்கு உதவுவதை தனது வாழ்க்கையின் கடமையாய் கொண்டு இருக்கும் இவர் கூறும் நெறி - உதவுங்கள்.

துர்க்கை: ஈசனின் இடப்பக்கத்தில் வீற்றிருப்பவள். எருமையின் தலையின் மேல் ஏறி இருப்பவள். எருமை சோம்பேறித்தனத்தை, அசமந்தை குறிப்பது. அதை அடக்கி செயல் வீராங்கணையாக வீற்றிருப்பவள். பற்றற்ற ஈசன்மேல் பற்று கொண்டவள். இறைவனை கணவனாக கொண்ட இவள், கணவனை இறைவனாக கருத வேண்டும் என்பது இவள் கூறும் நெறி. உலகை செயல் புயலாக இருந்து ரக்ஷித்து காக்கும் இவள், ஒவ்வொரு பெண்ணும் தன் குடும்பத்தை காக்க வேண்டும் என்பது இவள் கூறும் நெறி.

நரசிம்மர்: பக்த பிரகலாதனை காக்க அரக்கன் இரணிய கசிபுவை அழிக்க நாராயணன் எடுத்த அவதாரம். நல்லவர்களை காக்க வேண்டும், கெட்டவர்களை அழிக்க வேண்டும் என்பது இவர் கூறும் நெறி.

கிருஷ்ணர்/நாராயணன்: தாமரை இலையில் நீர் போன்ற நிலை, இவர்கள் கூறும் நெறி. உலக சுக-போகத்தில் இவர்கள் இருப்பார்கள், ஆனால் இவர்கள் மனம் அதில் லயிக்காது. தாமரை இலை தண்ணீரில் இருந்தாலும் தண்ணீர் தாமரை இலையில் தங்காது. அது போல, இவர்கள் சுக-போகத்தில் இருந்தாலும் வெறும் சாட்சியாக மட்டுமே இருப்பர். திருமகளின் கடைக்கண்ணின் பார்வைகாக ஏங்குபவர்கள் பலர் உளர். அப்படிப்பட்ட திருமகள் திருவடியில் இருந்தும், அதை கண்டு கொள்ளாமல் ஆனந்த சயனத்தில் (உறக்கத்தில்) இருப்பவர் நாராயணன். மகாபாரதப்போர் நடந்த போது, அதில் (நேரடியாக) பங்கு கொள்ளாமல் வெறும் சாட்சியாக (தேரோட்டியாக) கண்டவர் கிருஷ்ணன். முற்றும் துறந்தவன் ஈசன். மனதளவில் துறந்தவன் நாராயணன்/கிருஷ்ணன்.

ஐந்து விரல்களும் ஒன்று போல் இருப்பதில்லை. உலகில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் வேறுபட்டவர். அவர்கள் இயல்புக்கு,எண்ணத்திற்கு,தகுதிக்கு,நிலைக்கு தகுந்த வாழ்க்கை நெறியை தேர்ந்தெடுத்து வாழலாம். இறைவனை வழிபடலாம் (அவன் கூறும் வழியில் பயணப்படலாம்). இப்படி பலதரப்பட்ட மக்களை நல்வழிப்படுத்தவே, இத்தனை கடவுள்கள் உள்ளனர். உங்கள் சுயதர்மத்திற்க்கு ஒத்து வரும் தெய்வத்தை தேர்ந்தெடுத்து வழிபடுங்கள், அவ்விறைவன் கூறும் வழியில் பயணப்படுங்கள், வெல்லுங்கள்.

2 comments:

R.Puratchimani said...

ஆகா என்ன ஒரு விளக்கம்,
அருமை அருமையிலும் அருமை

prem said...

Oh.. ippadiyum saami kumbidalaamaa..

un aanmeegathai sirithu arinthen..