Friday, May 18, 2007

நான் சந்தித்த பெண்கள் - பள்ளிப்பருவம்.

விகடனில் பிரகாஷ்ராஜ் தான் நேசித்த பெண்களை பற்றி எழுதி இருந்தார். நான் வாழ்வில் சந்தித்த பெண்களை பற்றி எழுதலாமே என்று தோன்றிய உணர்வின் வெளிப்பாடுதான் இந்த பதிவு.

நான் சந்தித்த பெண்களை மூன்று வகையாக பிரித்துள்ளேன். பள்ளிபருவத்தில் சந்தித்தவர்கள், கல்லூரியில் சந்தித்தவர்கள், வேலை கிடைத்தபின் சந்தித்தவர்கள். தற்சமயம் அவர்களை நான் சந்திக்க நேர்ந்தால் கேட்க விரும்பும் கேள்வியையும் சேர்த்துள்ளேன்.

முதலாம் பெண்: - பால்கோவா.
இவளை நான் சந்தித்த போது எனக்கு வயது 6. பள்ளியிலிருந்து என் பாட்டி வீட்டுக்கு செல்லும் வழியில் பார்ப்பேன். பெயர் தெரியாது. அவளுக்கு அவளது பாட்டி பால்கோவா ஊட்டி விடுவாள். எனக்கு பால்கோவா பிடிக்கும் என்பதால் அவளையும் பிடித்தது.

கேள்வி: இன்னும் பால்கோவா விரும்பி சாப்பிடுறியா?

இரண்டாம் பெண்- சிவகாமி.
இவளை நான் சந்தித்த போது எனக்கு வயது 14. ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது NTSE பயிற்சி வகுப்புக்கு செல்வேன். அப்பொழுது சந்தித்தவள் இவள். அமைதியானவள். ஒரே இடத்தை உற்று நோக்கும் வழக்கம் கொண்டவள். அவள் பார்க்கும் பக்கமா நான் அமர வேண்டும்? நண்பர்களின் கேலிக்கு ஆளானேன். நல்ல வேளையாக நானும், அவளும் (NTSE) தேர்வாக இல்லை. பின்ன என்ன? இரண்டாம் நிலையுலும் யார் கேவலப்படுவது?? இவளை பார்த்த பின் தான் நான் என்னை காண ஆரம்பித்தேன். அழகாக உணர்ந்தேன். என் மனது எனக்கு மட்டும் சொந்தம் இல்லை என்று உணர்ந்த பருவம் இது. விளைவு- பத்தாம் வகுப்பில் மதிப்பெண் குறைவு.

கேள்வி: அவ்வளவு பெரிய வகுப்பில் உனக்கு பார்க்க வேறு இடம் இல்லையா?

மூன்றாம் பெண்: பூ.
இவளை நான் சந்தித்த போது எனக்கு வயது 16. பெயருக்கு ஏத்தது போல் பூ மழை பொழிபவள். இரு அண்ணன்கள் இவளுக்கு இருந்தால் இவளிடம் பேச கொஞ்சம் பயம் எனக்கு. ஆனாலும், இவள் அண்ணன்களிடம் நல்ல பெயர் வாங்கி இருந்தேன். சற்று தள்ளி எதிர் வீட்டில் இருந்ததால், சமயத்தில் எதிர்படும்போது 'புன்னகை' பூ பரிசாக கொடுப்பாள்.

கேள்வி: உனக்கு இரு அண்ணன்கள் இருக்கும்போது என்னை ஏன் 'அண்ணன்' என்று அழைத்தாய்?

நான்காம் பெண்: என் பெயர் கொண்டவள்.

இவளை நான் சந்தித்த போது எனக்கு வயது 17. கறுப்புதான். ஆனால், கண்ணை கவரும் கறுப்பு. பன்னிரெண்டாம் வகுப்பு மாதிரி வினாத்தாள் தினமலரில் வரும். தினமலரை அவர்கள் வாங்குவார்கள். அவர்களிடம் இரவல் வாங்க செல்வேன். படம் வரைய தெரியாததால்,(பாடம் மட்டும் நல்லா வருமோ??) அவளிடம் வரைய சொல்லி கேட்பேன். அவளும், நான் வரைவதை விட மிக மோசமாக வரைந்து கொடுப்பாள். என் நடததை பார்த்த என் அம்மாவிற்கு பயமிருந்தால், 'அக்கா, நல்லா வரைகிறாள், இல்ல?' என்று வெறுப்பு ஏற்றுவார்கள். கடைசியில் பூவின்(மூன்றாம் பெண்) அண்ணனை காதல் திருமணம் செய்து கொண்டாள்.

கேள்வி: உள்ளங்கையில் வைத்து கொண்டாடிய உன் குடும்பத்தை மறந்து, எப்படி 'காதல்' திருமணம் செய்து கொள்ள மனம் வந்தது?

இந்த முறை ஏமாறததால், +2வில் நல்ல மதிப்பெண் பெற்று நல்ல பொறியியல் கல்லூரியில் சேர்ந்தேன்.

தமிழ் திரைப்படம் பார்த்து கெட்ட பலரில் நானும் ஒருவன். கல்லூரி கற்க அல்ல, காதலிக்க என்ற தப்பான எண்ணத்துடன் சென்றேன்.

நான் சந்தித்த பெண்கள் - கல்லூரி பருவம் - அடுத்த பதிவில்....

3 comments:

வடுவூர் குமார் said...

இன்னும் மாட்டவில்லையா?
பக்கத்தை சூப்பராக அலங்கரித்திருக்கிறீர்கள்.

வடுவூர் குமார் said...

விட்டுப்போச்சு..
எனக்கும் பால் கோவா பிடிக்கும்,எங்கு கிடைக்கும்??.
:-))

Rama said...

//பக்கத்தை சூப்பராக அலங்கரித்திருக்கிறீர்கள்.

வருகைக்கு நன்றி !!! பாராட்டுக்கும் நன்றி !!!

சிங்கையில் பால்கோவா கிடைக்காதே !!! சிங்கை யூசினில் இருக்கிறீர்கள். வாரம் ஒரு திரைப்படமா??

// இன்னும் மாட்டவில்லையா?


இந்த கேள்வி சரியாக விளங்கவில்லை.
காதலிலா? திருமணத்திலா?