Tuesday, September 4, 2007

ஆசிரியர் தின வாழ்த்துக்கள் !!!

இன்று ஆசிரியர் தினம். எனக்கு பள்ளியில், கல்லூரியில் பாடம் எடுத்த ஆசிரியர்கள் பலர். சிறு சிறு விஷயங்களை கற்று கொடுத்த நண்பர்கள், தோழிகள் கூட என் ஆசிரியர்களே. அவர்கள் அனைவருக்கும் எனது ஆசிரியர் தின வாழ்த்துக்கள். இவர்கள் பேரை எல்லாம் சொல்லி வாழ்த்து சொல்ல ஆரம்பித்தால் விடிந்து விடும். எனவே எனக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருந்த இருவரை பற்றி மட்டும் இப்பதிவில் எழுத போகிறேன்.

முதலாமவர் திரு.வி.ராமநாதன். எங்கள் ஹாஷ்டல் வார்டன் இவர். கல்லூரியில் பேராசிரியர் இவர். மிகவும் அமைதியானவர், ஆனால் அழுத்தமானவர். தலையாட்ட வேண்டிய இடத்தில் மெதுவாக தலை ஆட்டிவிட்டு, 'முடியாது' சொல்ல வேண்டிய திடமாக முடியாது என்பார். யாராவது யாரைப்பற்றி குறை சொன்னால் எதுவும் சொல்லாமல் அமைதியாக கேட்டுக்கோண்டே இருப்பார். நடுவில் எதுவும் சொல்ல மாட்டார். எல்லாம் கேட்டு முடித்தவுடன், "பார்க்கலாம்" என்று சொல்லி அனுப்பி விடுவார்.

இவர் மிகவும் எளிமையானவர். நான் இவரிடம் கேட்ட முதல் கேள்வி, "இங்க வார்டன் யார்?" இவர்தான் என் பெயரில் பதினெட்டாயிரம் ரூபாய்க்கு முதன்முதலில் செக் போட்டு கொடுத்தவர். இறுதி ஒரு வருடம் மட்டுமே இவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. கொட்டேஷன் வாங்குவது எப்படி,அமைதியாய், அதிகாரமாய் பேசுவது எப்படி போன்ற விஷயங்களை இவரிடம் கற்றுக்கொண்டேன். இவர் என்ன பாடம் எடுத்தார் என்பது சத்தியமாக ஞாபகம் இல்லை.

பின்னாளில் நான் மேனஜரானால், என் மேல் இவரின் பாதிப்பு கண்டிப்பாக இருக்கும்.

அடுத்தவர் திரு.சுப்புராஜ் அவர்கள். "ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்?" என்ற எனது இலக்கணத்துக்கு சிறிதும் மாறாதவர். ரஜினியின் வசனம் 'அதிருதுல்ல...' வசனத்துக்கு சரியான ஆள் இவர்தான். இவரை கண்டாலே எங்க டிபார்மண்டில் உள்ள அனைவரும் மிரள்வார்கள். அதிகம் பேசுபவர், ஆனால் ஆழ்ந்த அர்த்தத்துடன் பேசுவார். மாணவர்களுக்கு ஒழுக்கத்தை வாயால் சொல்லி புரிய வைக்காமல், நடைத்தையில் புரிய வைத்தவர். ஒரு கொள்கை இருந்தால் அதை யாருக்காகவும் விட்டு கொடுக்க மாட்டார். கண் பார்த்து பேசினால் எவரையும் அடக்கலாம் என்பதை இவரை பார்த்த பின்னரே உணர்ந்தேன். எனக்கு தெரிந்து மாணவர்கள் எல்லோரும் நிஜமாக பயந்தது இவருக்கு மட்டுமே.

ஒரு முறை இவரது வகுப்பில், என் நண்பன் ஒரு பெண்ணை பார்த்து கொண்டே இருந்தான். அவர், அவனுக்கு மட்டுமே புரியும்படி அவனை அப்பொழுதே மிரட்டினார். அவன் செய்த தவறு கூட மற்ற யாருக்கும் புரியாதபடி பேசினார். இவரிடம் எனக்கு பிடித்த மிக முக்கியமான பழக்கம் - 'பெண்களுக்கு தனியாக சலுகை தர மாட்டார்'

பின்னாளில் நான் ஆசிரியராகும் வாய்ப்பு கிடைக்குமானால், அவரின் பாதிப்பு என்னிடம் இல்லாமல் இருக்காது.

இரு பிள்ளைகள் இருந்தாலே பெற்றொர்களால் சரிவர கவனிக்க இயலாது. ஐம்பது அல்லது அறுபது பிள்ளைகளை வைத்து கொண்டு திண்டாடும் ஆசிரியர்கள், கடவுளுக்கு மேல்தான்.....

No comments: