Saturday, September 8, 2007

அம்முவாகிய நான்.. - திரைக்கண்ணோட்டம்.

"என்னய்யா படம் இது, மெதுவான திரைக்கதை. விரல் விட்டு எண்ணுகிற அளவுக்கு மிக குறைந்த கதாபாத்திரங்கள். இரண்டே இரண்டு வீடு. மாத்தி மாத்தி அதைத்தான் படத்தில் பார்க்கிறோம். பார்த்து பார்த்து அழுத்துப்போன பார்த்திபனுக்கு அதே எழுத்தாளன் கதாபாத்திரம்." என்று அழுப்பு ஊட்டுகிற பல விஷயங்கள் படத்தில் இருந்தாலும் இறுதி வரை இருக்கையில் அமர வைக்கும் படம்.

படத்தில் புதிய விஷயங்கள் பல இருக்கின்றன. குழந்தை பருவத்தில் இருந்து, விபச்சார விடுதியில் வளரும் கதாநாயகி. மனைவி, குடும்பம், தாம்பத்தியம் என்று வார்த்தைகளின் பொருளை உணர்வுபூர்வமாக உணராத கதாநாயகி தமிழ் திரையுலகத்திற்கு புதுசு. கதாநாயகனை தவிர மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் பஞ்ச் டயலாக் பேசுகின்றன. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பாதிப்பும் படம் பார்ப்பவர்களின் மனதில் பதிய வைப்பது டைரக்டரின் திறமை.

விபச்சாரத்திற்கென்றே வளர்க்கப்படும் ஒரு பெண்,எழுத்தாளன் ஒருவனை திருமணம் செய்து கொண்டு குடும்பம், கலாச்சாரத்தை உணர்வதே கதை. கதா நாயகி தனது பாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார். முதல் பாதியில் கவரும் அழகுடன் இருப்பதும், பின்பாதியில் குடும்பப் பெண்ணுக்கே உரிய அழகுடன் மிளிர்கிறார். முதலில் கணவரை 'வா... போ' என்று அழைத்து பின்னர், போக போக, 'வாங்க.. போங்க..' என்று கூறுவது அழகு. பழைய கஸ்டமர், அபிஷேக், வாழ்த்தி சென்ற பிறகு, தாம்பத்தியத்தை பற்றி உணர்ந்து கணவனை அழைப்பது மெல்லிய கவிதை.

வளர்த்த பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி விட்டு, அவளுக்கு "நல்ல அம்மாவாக இருந்தேன்." என்று கூறுவதும், அவார்ட் கொடுக்கும் அதாரிட்டி ஒருவர் கையில் மட்டும் இருப்பதும், போன்ற இடைச்சறுகள்களை தவிர்த்து இருந்தால் அம்மு இன்னும் அழகாய் இருந்து இருப்பாள்.

பல இயக்குனர்கள் எடுக்க பயப்படும் சப்ஜெக்டை மிக தைரியமாக எடுத்து, அதை எல்லை மீறாமல் அழகாய் திரையில் உலவ விட்ட இயக்குனருக்கு பெரிய சபாஷ் !!!

No comments: